“மாடித்தோட்டமும் ஒரு பாடசாலை தான்!”

என் இல்லம் பசுமை இல்லம் “வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு நான் எவ்வளவோ கற்றுத் தந்திருக்கேன். ஆனா, கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட இந்த...

என் இல்லம் பசுமை இல்லம்
“வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு நான் எவ்வளவோ கற்றுத் தந்திருக்கேன். ஆனா, கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கும், அதையொட்டிய செயல்பாடுகளும் எனக்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொடுத்திட்டிருக்கு. அதில் முதன்மையானது, என் வீட்டு மாடித்தோட்டம். ‘உடல்நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தணும்’னு இந்த கொரோனா காலம் ரொம்ப நல்லாவே உணர்த்தியிருக்கு. அதனால், உடல்நலனுக்கு நன்மை பயக்குற, இயற்கை காய்கறித் தோட்டத்தை உருவாக்கியிருக்கேன். இதன்மூலம் நான், என் கணவர், ரெண்டு மகன்கள் விவசாயத்தின் கஷ்டத்தையும், மேன்மையையும் ஒருசேர கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கோம்” என்று உற்சாகம் பொங்க பேசும் பிருந்தா, கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், மேலக்குட்டப்பட்டி எனும் குக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர். கணவர் பூபதி அன்பழகனும் அரசுப் பள்ளி ஆசிரியர்தான்.
``எங்க உழைப்புல 2013-ம் ஆண்டு, இந்த வீட்டைக் கட்டினோம். தனுபன், திலீபன் என்று ரெண்டு மகன்கள். அரசுப் பள்ளியில்தான் படிக்கறாங்க. நாங்க வேலைப் பார்க்குற பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் இயற்கை வேளாண்மைக் குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்து அவங்களையும் இயற்கை விவசாயிகளா உருவாக்கிக்கிட்டிருக்கோம். அங்க விளையுற காய்கறிகளை, பள்ளிக்கூட மதிய உணவுக்கே பயன்படுத்துறோம்.

ஐந்து வருடங்களாகவே, மாடித்தோட்டம் போட்டு, ‘நாமும் இயற்கைக்குத் திரும்பணும்’னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, வேலைப்பளுவால, அந்த முயற்சி சாத்தியப்படாமலே இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்னதான், மாடியில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில இறங்கினேன். கணவரும் மகன்களும்தான் உதவி. யூடியூப், புத்தகங்கள்னு பல வடிவங்களில் மாடித்தோட்டம் அமைக்கிற தெளிவைத் தேடி அடைஞ்சேன். நாட்டுக் காய்கறி விதைகளை, நம்மாழ்வாரின் சீடர்களில் ஒருவரா இருக்கிற முசிறி, யோகநாதன்கிட்ட வாங்கினேன்'' என்ற பிருந்தா, தோட்டம் அமைக்கும் விதம் குறித்து பாடமெடுத்தார்.

``மாடியில் முதல் கட்டமா, 200 சதுர அடியில் தோட்டம் அமைச்சோம். செம்மண் ஒரு பங்கு, மண்புழு உரம் ரெண்டு பங்கு, தென்னைநார்க் கழிவு ரெண்டு பங்குன்னு கலந்து க்ரோபேக்குகள்ல போட்டோம். முதல்ல நவதானியச் செடிகளை வளர்த்து, அதை க்ரோபேக்குகள்ல உள்ள மண்ணுலேயே வெட்டிப் போட்டுக் கிளறி, மண்ணின் தரத்தை உறுதிப்படுத்தினோம். பிறகுதான், கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அரைக்கீரை, பசலை, பொன்னாங்கண்ணி, வல்லாரைன்னு விதைத்சோம். முருங்கை, வாழை, ஆரஞ்சு, சப்போட்டா உள்ளிட்ட பழமரக் கன்றுகளையும் நட்டோம். காய்கறிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை நல்லவிதமாக நடக்கணும்கிறதுக்காக குண்டுமல்லி, செம்பருத்தி, மருதாணி, ரோஜான்னு 15 வகையான பூச்செடிகளையும் நட்டோம்.

வாட்டர் டேங்கிலிருந்து சொட்டுநீர் பாசனம் மூலம் தினமும் காலை, மாலை தண்ணீர் பாய்ச்சுவோம். 15 நாளைக்கு ஒருதடவை மண்புழு உரம் இடுவோம். செடிகள்ல பூ நன்றாக வைக்க, மீன் அமிலத்தைப் பயன்படுத்துறோம். தக்காளி, வெண்டை, கத்திரி செடிகளில், இந்த மீன் அமிலம் நல்ல பலன் தருது. இயற்கை முறையிலான பூச்சிவிரட்டிகளையே பயன்படுத்துறோம். குறிப்பா தேமோர்க் கரைசலைப் பயன்படுத்துறோம். மாடித்தோட்டத்தில் இருந்த கத்திரி செடிகள் பூக்காமல் இருக்கவே அதோட இலைகளை உதிர்த்துட்டு தேமோர்க் கரைசலை ரெண்டு நாளைக்கு ஒருமுறைன்னு மொத்தம் நாலு முறை தெளிச்சேன். இப்போ கத்திரி காய்ச்சி தள்ளுது'' சொல்லும்போதே பெருமை பொங்குகிறது பிருந்தாவுக்கு.

``காய்கறிச் செடிகளில் மாவுப்பூச்சிகள் அட்டகாசம் பண்ணும். அதைத் தடுக்க, பழைய சோற்றுக்கரைசலைத் தெளிப்பேன். பழைய சாதத்தை ஐந்து நாள்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதுல ஊறவைக்கணும். அதன்பிறகு, அந்தத் தண்ணீரை மூன்று நாள்கள் தொடர்ந்து ஸ்பிரே செய்தால், வெள்ளைப் பூச்சிகள் காய்கறிச் செடிகள் பக்கம் தலைவெச்சும் படுக்காதுங்க.
பிருந்தா, பூபதி அன்பழகன்
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க, செடிகளைச் சுற்றி காய்ந்த இலைதழைகளைக்கொண்டு மூடாக்குப் போட்டிருக்கிறேன். ஒருமாதமா காய்கறிகள் பறிப்புக்கு வந்திருக்கு. கீரைகளையும் சமையலுக்குப் பறிச்சுக்குறோம். அதோட இயற்கை ருசியைப் பார்த்துட்டு என் பசங்க, ‘அம்மா முன்னாடி நாம சாப்பிடுற கீரை, காய்கறிகளைவிட, இது ருசியாவும், மணமாவும் இருக்கே எப்படி?’னு கேட்பாங்க. அவங்களுக்கு இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம், நம்மாழ்வார் என்று பல விஷயங்களையும் விவரிப்பேன். சோலார் பேனல் மூலமா, தண்ணீரைச் சூடுபடுத்தும் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். விரைவில் வீட்டுக்கு சோலார் முறையில் மின்சாரம் எடுத்துப்பயன்படுத்தும் அமைப்பை நிறுவ இருக்கிறோம்.

உலகலாவிய சுகாதார அமைப்புகளும் உணவு ஆய்வாளர்களும் ‘இன்னும் பத்து வருடங்கள்ல எல்லோரும் 70 சதவிகிதம் காய்கறிகளையும், 30 சதவிகிதம் அரிசி அல்லது கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவில் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும்’ என்று அறிவுறுத்தத் தொடங்கியிருக்காங்க. `அப்படி நாம மாறலைனா, 2050-ம் வருஷம் மோசமான நோய்களோட தாக்குதலும் பாதிப்பும் மிகமிக அதிகமா இருக்கும்'னு எச்சரிக்கிறாங்க. அதனால், எல்லோருமே வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்னு இயற்கை முறைக்கு மாறணும். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்துல இந்த மாடித்தோட்டம் எங்களுக்கு நல்லாவே பயன் தருது. எங்களோட இயற்கை வேட்கை தொடரும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் பிருந்தா.
மாடித்தோட்டம் அமைக்க ஆன செலவு
200 சதுரஅடி மாடித்தோட்டத்துக்கு நிழல்வலை டென்ட் 20,000 ரூபாய். க்ரோபேக்குகள் 2,000 ரூபாய். க்ரோபேக்குகளுக்கு ஸ்டாண்டுகள் 5,000 ரூபாய். விதைகள் 200 ரூபாய். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 1,000 ரூபாய். உரங்களைச் சொந்தமாகவே தயாரிப்பதால் பெரிதாக செலவில்லை.

மூலிகை பூச்சிவிரட்டி
ஊமத்தை, வேப்பிலை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சிலை, தும்பை இலைகளை ஆறு கிலோ எடுத்து ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் சேர்த்து ஒரு வாரம் ஊறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். மூலிகை பூச்சி விரட்டியை பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம்.

தேமோர்க் கரைசல்
புளித்த மோர் ஐந்து லிட்டர், தேங்காய்ப்பால் ஒரு லிட்டர், 10 தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்த்துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ ஆகிய பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக்கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலைக் கலக்கிவர வேண்டும். ஏழு நாள்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். எட்டாம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமிலம்
உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனைவெல்லம் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்றுபுகாமல் மூடிவைக்க வேண்டும். 40 நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்ட வாடை வீசாது. பழ வாடை வீசும். இப்படி பழ வாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒருமுறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

எளிய முறையில் மண்புழு உரம் உற்பத்தி!
இந்தியாவில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்புழுக்கள் இருக்கின்றன. அவற்றை மேல்மட்ட புழுக்கள், நடுமட்ட புழுக்கள், அடிமட்ட புழுக்கள் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். மேல்மட்ட புழுக்கள் உரம் தயாரிக்கும். நடுமட்ட புழுக்கள் சுரங்கங்கள் தயாரித்து மேலிருப்பதை அடியில் கொண்டுசேர்க்கும். அடிமட்ட புழுக்கள் மண்ணைச் சீர்செய்யும். சாக்கடை கழிவுகள், மாட்டுச்சாணம் இருந்தாலே அங்கே அதிக அளவில் மண்புழுக்கள் வந்துவிடும். மட்கிய இலைதழைகளின் மீது வறட்டியை வைத்தால் போதும், மண்ணுக்கு அடியிலிருந்து மண்புழுக்கள் வந்து அவற்றை மட்க வைத்துவிடும். இந்த மண்புழுக்கள் உயிருள்ள கழிவுகளை மட்கவைத்து, நமக்கு அற்புதமான உரத்தைக் கொடுக்கின்றன. இந்த உரத்தை மாடித்தோட்டத்திலோ, விவசாய நிலத்திலோ தாராளமாகப் பயன்படுத்தலாம். இது ஒன்றைக் கொடுத்தாலே போதும், மகசூல் தானாகப் பெருகுவதை உணர்வீர்கள்.

Related

விவசாயக்குறிப்புக்கள் 8978944195433726390

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item