லாபத்தில் ஆட்டுப் பண்ணை பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!
இந்தத் தொழிலை உணர்வுபூர்வமாக நாம் அணுகினால்தான் வெற்றி கிடைக்கும்! ‘ப டிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்கலை’ எனப் புலம்பிக் கிடக்கும...

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் அருகேயுள்ள தோப்புக்காடுதான் அருண்குமாரின் சொந்த ஊர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படித்திருக்கிறார். ‘ஏதாவது ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டால், குடும்பத்தின் நிலைமையே மாறிவிடும்’ என பெற்றோரும், உறவினர்களும் நம்பிக்கையில் இருந்திருக்கின்றனர். ஆனால் அருண்குமாரோ, ‘ஆட்டுப் பண்ணையை உருவாக்கி பிசினஸ் செய்யலாம் என்றிருக்கிறேன்’ என்று இறங்க, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. வழக்கம்போல குடும்பத்தார், உறவினர்களிடமிருந்து எக்கச்சக்கமான வசவுகள், எச்சரிக்கைகள். இவற்றில் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், 25 ஆடுகளுடன் ‘விநாயகர் கோட் ஃபார்ம்’ என்ற ஆட்டுப் பண்ணையை ஆரம்பித்தார் அருண்குமார். ஆடுகளை வளர்ப்பதில் பத்து வருடங்கள் கடுமையான உழைப்பைக் கொடுக்க, இன்றைக்கு அது பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறும் அளவுக்கு பெரும் வளர்ச்சிகண்டிருக்கிறது.
நல்ல பசுமையான, பெரும் இரைச்சலில்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு வெளியில் சென்று வேலை பார்க்க சுத்தமாக விருப்பமில்லை. படிச்சு முடிச்சதும் சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்யணும்னு முடிவு செஞ்சேன். எந்த பிசினஸ் செய்யறதுன்னு கொஞ்சம்கூட ஐடியா இல்லை. யதார்த்தமாக ஒருநாள், சாலையோரம் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த வயசானவங்களைப் பார்த்ததும் ‘இவங்க காலத்துக்குப் பிறகு இந்த வேலையை யார் செய்வாங்க!’னு மனசுல ஒரு கேள்வி `பளிச்’னு வந்துபோச்சு.
விவசாய குடும்பத்தில் பிறந்து ஆடு, மாடு மேய்ச்சிருந்தாலும் ஆடுகளைப் பராமரிப்பது, நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதுனு ஒரு பண்ணையை நிர்வகிக்கிறது பெரும் சிரமமாக இருந்துச்சு. அடுத்தடுத்து ஆடுகளுக்கு வந்த நோய்களைப் பார்த்து, `என்ன செஞ்சு சமாளிக்கப் போறோமோ’னு தெரியாம குழம்பிப் போயிட்டேன். காரணம், குட்டிகளின் இறப்பு அதிகமாக இருந்துச்சு. நான் விற்பனை செய்த ஆடுகளைவிட, மண்ணுல புதைச்ச ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 120 ஆடுகளை அப்படி நான் இழந்தேன். கண்ணு முன்னாடியே ஒவ்வொரு ஆடும் சாகிறதைப் பார்த்துட்டு, நான் அடைஞ்ச வலியும் வேதனையும் என் வாழ்க்கையில மறக்க முடியாத துயரம்.
ஒரு தொழிலைச் செஞ்சா எவ்வளவு லாபம் கிடைக்கும்கிறதுக்கு முன்னாடி அதில் என்னென்ன சிக்கல்கள், பிரச்னைகள் இருக்குங்கிறதைக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன். என்னோட ஒவ்வொரு செயலுக்கும் என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். ஆட்டுக்குட்டிகளைக் குழந்தை மாதிரி பராமரிக்க ஆரம்பிச்சேன். நான் பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படிச்சிருந்ததால, மருந்து சம்பந்தமாக டாக்டர்கள் சொல்றதைப் புரிஞ்சிக்க முடிஞ்சுது. கால் உடைஞ்சா எப்படிக் கட்டுபோடுறது, அடிபட்டா எப்படி முதலுதவி கொடுக்குறது, ஆட்டுக்கு மடிவீக்கம் வந்துட்டா என்ன செய்யறதுனு நோய்களை உடனே கண்டறிஞ்சு சிகிச்சை கொடுத்தேன்.
என்கிட்ட வந்தா நல்ல தரமான தலச்சேரி ஆடு கிடைக்கும்கிறதை மக்கள் நம்புறாங்க. இந்த வளர்ச்சிக்கு நான் கொடுத்தது 10 ஆண்டுக்கால கடுமையான உழைப்பு மட்டுமே. இன்னைக்கு மும்பை வரைக்கும் நான் ஆடு சப்ளை பண்றேன். கர்நாடகா, கேரளா, தமிழகம் முழுக்க இருந்தும் என்கிட்ட ஆடு கேக்குறாங்க.
இன்றைக்கு கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் அடிபட்டுக் கிடக்கு. ஆனா, உணவு சார்ந்த பொருள்கள் குறிப்பாக, இறைச்சிக்கான தேவைகள் குறைந்தபாடில்லை. நாட்டுக்கோழிக்கு மாற்றா பிராய்லர் சிக்கன் இருக்கு. ஆனா, ஆட்டுக்கறிக்கு மாற்றா எதுவும் இல்லை. அதனாலதான் ஆட்டிறைச்சியோட தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு.
இன்றைய நிலவரப்படி, ஆட்டை உயிர் எடை ஒரு கிலோ 450-500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்கிறோம். ஆட்டுப் பால்ல சோப்பு தயாரிக்கிறோம். மாசம் கிட்டத்தட்ட 150 சோப் வரைக்கும் மக்கள் வாங்குறாங்க. விரும்பிக் கேக்குறவங்களுக்கு ஆட்டுப்பாலும் கொடுக்குறோம்.
‘நான் 50 ஆடு வாங்கி பண்ணை போட்டா, மாசம் எவ்வளவு லாபம் கிடைக்கும்’னு பலரும் கேக்குறாங்க. நல்ல கேள்விதான். வெறும் வருமானத்தை மட்டும் மனசுலவெச்சுக்கிட்டு இந்தத் தொழிலைச் செய்ய வராதீங்க, ப்ளீஸ். இந்தத் தொழிலை உணர்வுபூர்வமாக அணுகினாத்தான் வெற்றி கிடைக்கும். பணத்தைப் போட்டு பண்ணை அமைச்சா மட்டும் ஜெயிச்சிட முடியாது. தினமும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது பண்ணையில இருக்கணும். இந்தத் தொழில்ல இருக்கிற நெளிவுசுளிவுகளை மொதல்ல கத்துக்கணும். என்ன பிரச்னை, அதை எப்படிச் சமாளிக்கணும்கிறதைத் தெரிஞ்சுக்கணும்.
லாபம் சம்பாதிக்கக் குறைஞ்சது 4-5 வருஷமாவது காத்திருக்கணும். பொறுமையும் போராட்டக் குணமும் தேவை.
Post a Comment