வந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இப்படிப் பருவம் மாறும் சூழ்நிலை...

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இப்படிப் பருவம் மாறும் சூழ்நிலைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்காலகட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும் பராமரிக்கும் முறைகள் குறித்தும் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் தேவகி சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன.

“பொதுவாகக் குளிர்காலத்தில் கன்றுகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், கோடைக்காலத்தில் சற்றுக் குறைவாகவும் இருக்கும். இது இயல்பான விஷயம் என்பதால், கவலைபடத் தேவையில்லை. மூன்று வயது வரையுள்ள எருமைக் கன்றுகள், அதிகக் குளிரைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால், கொட்டகையில் அதிகக் குளிர் தாக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குளிர்காலத்தில் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகியவை தொற்ற வாய்ப்புகள் உண்டு. ஈ, கொசு போன்ற பூச்சியினங்களும் இக்காலத்தில் அதிகமாகப் பெருகி, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால், கால்நடை வளர்ப்போர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து, மழை மற்றும் குளிர்காலப் பிரச்னைகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்.
கொட்டகைக்குள் மழைநீர் ஒழுகாதவாறு மேற்கூரையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். கொட்டகைக்குள்ளும், கொட்டகைக்கு வெளியேயும் மழைநீர் தேங்காதவாறு வடிகால் இருக்க வேண்டும். மழைநீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருகும். கொட்டகையில் சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீருடன் மழைநீர் சேர்ந்தால், அம்மோனியா வாயு உற்பத்தியாகி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் உருவாகும். இவைதவிர, கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோயும் ஏற்படும்.

இதனால், சாணம் மற்றும் சிறுநீரும் கொட்டகைக்குள் இல்லாதவாறு சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். உலர்ந்த வைக்கோல் அல்லது சணல் சாக்குப் பைகளைக் கொட்டகையின் தரையில் பரப்பினால், தரைப்பகுதி வெப்பமாக இருக்கும்.இளம் கன்றுகள், ஆட்டுக்குட்டிகள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் குளிர்ந்த காற்று தாக்காதவாறு கொட்டகையின் பக்கவாட்டில் ஓலைத்தடுப்பு, சாக்குப்பை, தார்பாலின் ஷீட் போன்றவற்றைக் கொண்டு மறைத்து, கொட்டகைக்குள் வெப்பத்தை ஏற்படுத்த வேண்டும். பகல்நேரத்தில் அவற்றை அகற்றி, கொட்டகைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். காற்றோட்டம் இல்லாவிட்டாலும் சில நோய்கள் வரக்கூடும்.

மழைக்காலத்தில், தண்ணீரால் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க, கொதிக்க வைத்து ஆறிய நீரையே பருக கொடுக்க வேண்டும். தேங்கிய நீரில் நுண்கிருமிகள் இருக்கும் என்பதால், குளம், குட்டைகளில் நீரை எடுப்பதைத் தவிர்த்து கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் எடுத்த நீரை மட்டுமே கால்நடைகளுக்குக் குடிக்கப் பயன்படுத்த வேண்டும். குடிநீர்த் தொட்டி மற்றும் தீவனத்தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் வாரம் ஒருமுறை சுண்ணாம்புப்பொடி பூசி, காயவிட்டுப் பிறகு பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் கோழிகள் குறைந்தளவு தண்ணீரையே அருந்தும். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தால், குடிக்கும் நீரின் அளவும் குறையும் என்பதால், கோழிகளுக்கு வெதுவெதுப்பான நீரைக் (அதிகச் சூடாக இருக்கக்கூடாது) கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில் அதிகளவில் கால்நடைக்கான தீவனத்தைச் சேமித்து வைக்கக் கூடாது. குளிர் மற்றும் மழைக்காலத்தில் தரையில் அதிக ஈரப்பதம் இருப்பதால் குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்துக்கு மரக்கட்டைகளை அடுக்கி, அவற்றின்மேல் தீவன மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். தீவனத்தைச் சேமித்து வைக்கும் அறை, நல்ல காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் ஈரக்கசிவில்லாமல் இருக்க வேண்டும்.
பூஞ்சணம் தாக்கிய தானியங்களைக் கொண்டு தீவனம் தயாரிக்கக் கூடாது. அதேபோல் தயாரித்து வைத்த தீவனத்திலும் பூஞ்சணத்தாக்குதல் இருக்கக் கூடாது. பூஞ்சணத்தாக்குதல் இருந்தால் அவற்றைச் சாப்பிடும் கால்நடைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படும். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி பூஞ்சணத்தடுப்பு மருந்து மற்றும் ஈரல் நோய்த் தடுப்பு மருந்துகளைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பசும்புல் தாராளமாகக் கிடைக்கிறதே என்று கறவை மாடுகளை அதிகமாகச் சாப்பிடவிட்டால், பால் நீர்த்துப்போகும். பாலின் அளவும் அதிலிலுள்ள கொழுப்பின் சதவிகிதமும் குறையும். அதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். சரிவிகிதப்படி உலர் தீவனம், அடர்த் தீவனம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். உலர் தீவனத்தை ஈரப்படுத்திக் கொடுக்கக் கூடாது.
பொதுவாகக் கோழிகளுக்கான தீவனத்தில் தண்ணீர் கலந்து, பிசைந்து கொடுப்பார்கள். குளிர்காலத்தில் அப்படிச்செய்யக் கூடாது.

குளிர்காலங்களில் ஈரமான புல்வெளிகள், குளம், குட்டைகளில் பலவிதமான பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருக்கக்கூடும். அதனால், நல்ல வெயில் அடிக்கும் சமயத்தில்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிடில், அப்பூச்சிகள் கால்நடைகளைத் தாக்கக்கூடும். முற்றாத நிலையிலுள்ள இளம் பசுந்தீவனத்தில் ‘ஹைட்ரோசயனிக் அமிலம்’ என்ற நச்சு அதிகமாக இருக்கும். மெக்னீசியம் குறைவாக இருக்கும். அதனால், மழையில் முளைக்கும் புதுப் புற்களைச் சாப்பிட்டால், கால்நடைகளுக்குச் செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், துள்ளுமாரி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதைக் குறைப்பது நல்லது.

வெள்ளாடுகளுக்குக் கொள்ளை நோய்க்கான (பி.பி.ஆர்) தடுப்பூசியையும் செம்மறியாடுகளுக்கு நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியையும் போட வேண்டும். கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல்... போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும் என்ற தேவகி நிறைவாக, “மழைக்காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி கொட்டகை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வேப்பிலை, நொச்சியிலை ஆகியவற்றைக் கொண்டு புகைமூட்டம் போட்டுக் கொசுக்களை விரட்டினாலே, நிறைய தொற்று நோய்களைத் தடுக்கலாம். இக்காலகட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்தநோய் தாக்கினாலும், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்

Related

விவசாயக்குறிப்புக்கள் 9019551661521729982

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item