மார்பகப்புற்று... பரிசோதனைகள்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு! நோய் நாடி!

நோய் நாடி! மார்பகப்புற்று... பரிசோதனைகள்! கம்ப்ளீட் மெடிக்கல் கைடு! மா ர்பகப் புற்றுநோய் பற்றிய மருத...

நோய் நாடி!
மார்பகப்புற்று... பரிசோதனைகள்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!மார்பகப் புற்றுநோய் பற்றிய மருத்துவத் தகவல்களை கடந்த இதழில் பார்த்தோம். அது தொடர்பான பரிசோதனைகள் பற்றித் தொடர்ந்து பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா.



‘‘மார்பகப்புற்று ஏற்படக் காரணம் என்ன? - இது பதிலற்ற கேள்வி. ‘எங்க குடும்பத்துல யாருக்குமே இந்த நோய் இல்லையே... எனக்கு மட்டும் எப்படி வந்தது?’ என்று பலர் அதிர்ச்சியடைவதைப் பார்த்திருக்கிறேன். ‘பெண் களுக்கு எந்தக் கெட்டபழக்கமும் இருக்கிறதில்ல. அசைவம் சாப்பிடாதவங்களுக்குக்கூட இந்நோய் வரக் காரணம் என்ன?’ என்றும் சிலர் கேட்பார்கள். சில அறிகுறிகளை வைத்து, இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்லமுடியுமே தவிர, `வரும், வராது’ என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல ஒருவருக்குப் மார்பகப்புற்று உறுதி செய்யப்பட்ட பின்னும், ‘இதனால்தான் இவருக்குப் புற்று ஏற்பட்டது’ என்றும் காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒருவருக்கு இந்த நோய் வரும் சாத்தியங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்று கண்டுபிடித்துச்சொல்லும் சில மருத்துவ வழிமுறைகள் இருக்கின்றன. எனினும் அவற்றை நம் இந்தியப் பெண்களுக்கு நடைமுறைப் படுத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால்... இந்த ஆய்வுகள் மேற்கத்தியப் பெண்களை மையமாக வைத்து செய்யப்பட்டவை. அதனால்... நம் முன் இருக்கும் ஒரே வழி... தற்போது இருக்கும் பரிசோதனைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதுதான்.
ஹார்மோன் பதிலீட்டு சிகிச்சை!
இயற்கையாக மாதவிலக்கு நின்றபிறகு சில பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜஸ்டிரான் ஹார்மோன்களின் அளவு சட்டென குறைந்துபோவதால், அவர்களுக்கு உடலளவில் சில பிரச்னைகள் ஏற்படும். அதைச் சரிசெய்ய ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜஸ்ட்ரான் ஹார்மோனை செயற்கையாக ஈடுகட்ட எடுக்கப்படுவது ஹார்மோன் பதிலீட்டு சிகிச்சை (HRT - Hormone Replacemet Therapy). இந்த `ஹெச்ஆர்டி’-யைத் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்பவர்களுக்கு மார்பகப்புற்றுக்கான வாய்ப்பு சற்று அதிகம். எனவே, இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்பவர்கள், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்கீழ், மார்பகப்புற்றைக் கண்டறியும் மேமோகிராம் உட்பட, அதற்குரிய பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும்.
மரபும் மார்பகப்புற்றும்!
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேர்களில் 10 பேருக்கு மரபணு சார்ந்த கோளாறினால் புற்றுநோய் தாக்கியிருக்கக்கூடும். இதிலும் எத்தனை மரபணுக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. BRCA-1, BRCA-2 ஆகிய இரண்டு மரபணுக்கள் சிலவகை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பிறழ்வுற்ற மரபணுக்களைப் பரிசோதிக்க ஆய்வுகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் இந்த வசதிகள் இருக்கின்றன. இவற்றுக்கான செலவு மிகவும் அதிகம்.
 பரம்பரையாக வந்த மரபணுப் பிறழ்வால் மார்பகப்புற்று வர வாய்ப்புள்ளவர்கள்...
 நெருங்கிய ரத்தவழி சம்பந்தப்பட்டவர்களுக்கு இளம் வயதில் புற்றுநோய் வந்திருந்தால்
 குடும்பத்தில் பலருக்கு இந்நோய் வந்திருந்தால்
 இளம் வயதில் இரண்டு மார்புகளிலும் நோய் வந்திருத்தால்
 குடும்பத்தில் ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்
 குடும்பத்தில் மற்ற பெண்களுக்கு சினைமுட்டை புற்றுநோய் வந்திருந்தால்
இந்த சாத்தியக்கூறுகள் இருப்பவர்கள், BRCA-1, BRCA-2 மரபணுப் பிறழ்வு இருக்கிறதா இல்லையா என்று பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். BRCA-1, BRCA-2 பிறழ்வுபட்ட மரபணுக்களை தாய் வழியாகவோ, தந்தை வழியாகவோ வரப்பெற் றிருந்தால், அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 60 முதல் 80 சதவிகிதம் வரை உண்டு. இந்தக் குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்ட பெண்கள் மருத்துவர்களிடம் நன்கு தீர ஆலோசித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
தொடர் பரிசோதனை அவசியம்!

பரிசோதனையில் மரபணுப் பிறழ்வுஇல்லை என்று தெரியவந்தால், பிரச்னைதீர்த்தது என்றும், இனி நோய்வராது என்றும் அர்த்தம் கிடையாது. எனவே,தொடர்ந்து பரிசோதனைகள் செய்துகொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். ஒரு முள் செடியை சின்னதாக இருக்கும்போதே பார்த்துவிட்டால் எப்படி வெறும் கையாலேயே கிள்ளி எறிந்துவிடலாமோ, அதேபோல் சோதனை மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் மிக எளிதில் சரிசெய்துவிடலாம். அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்துகொள்வது அவசியம்.
மேமோகிராம் என்பது என்ன?
மார்பகத்தின் எக்ஸ்ரே படமே மேமோ கிராம் (Mammogram). மார்பகப்புற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை இது. கைகளுக்குத் தட்டுப்படாத தடிப்புகள் அல்லது சிறுகட்டிகள்கூட மேமோகிராமில் தெரியவந்துவிடும். இதில் இரு பிளாஸ்டிக் தகடுகளுக்கு இடையில் மார்பகம் பொருத்தப்பட்டு சற்று அழுத்தி எக்ஸ்ரே எடுக்கப்படும். ஒவ்வொரு மார்புக்கும் இரண்டு தனித்தனியான எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும். இரண்டும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். தற்போது மிகவும் நுட்பமான, அதிநவீன டிஜிட்டல் மேமோகிராஃபி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை!
மேமோகிராமைத் தொடர்ந்து சோனோ மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும். சோனோ மேமோ கிராமையும், மேமோகிராமையும் சிலர் குழப்பிக்கொள்வார்கள். மேமோகிராம் என்பது எக்ஸ்ரே
பரிசோதனை. சோனோ மேமோகிராம் என்பது அல்ட்ரா சவுண்ட் மூலம் செய்யப்படும் பரிசோதனை. இதில் ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புவார்கள். அந்த அலைகள் உடம்பின் உள்ளுறுப்புகளால் தடுக்கப்படும்போது ஒருவித பிம்பத்தை கம்ப்யூட்டர் திரையில் ஏற்படுத்தும். இந்தப் பரிசோதனையில் எந்த வலியும் இருக்காது; எந்தக் கதிர்வீச்சும் கிடையாது. திரவம் சேகரமான நீர்க்கட்டி களையும், கட்டிகளையும் இது எளிதில் இனங்கண்டுவிடும். மேலும் கட்டிகளின் அளவு மற்றும் தன்மையையும் துல்லியமாக எடுத்துக்காட்டிவிடும். அதோடு... அந்தக் கட்டிகள் அபாயமானவையா, வளரும் நிலையில் இருக்கிறதா என்பதையெல்லாம்கூட கண்டறிந்துவிடும்.
அதற்காக, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தால் போதும், மேமோகிராம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. முதலில் மேமோகிராம் செய்து, அதன் மூலம் பெறப்பட்ட தீர்மானங்களை உறுதிபடுத்திக்கொள்ள அல்ட்ரா சவுண்ட்டை செய்துகொள்ளலாம். இந்த இரண்டு பரிசோதனைகளுமே மிகவும் நுட்பமானவை என்பதால், தரமான சோதனைக்கூடத்தில் செய்துகொள்வது நல்லது.
மார்பக பயாப்ஸி!
பயாப்ஸி என்பது திசு பரிசோதனை. நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சிறிது திரவம் அல்லது திசுவை எடுத்து மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்து தீர்மானமான முடிவுக்கு வரும் வழி. இதை இரண்டு வழிகளில் செய்யலாம்.
முதலாவதாக, மெல்லிய ஊசி கொண்டு திரவம் எடுப்பது. இதை ஆங்கிலத்தில் Fine Needle Aspiration Cytology என்பார்கள். இந்தப் பரிசோதனையின் போது மருத்துவர் மார்பகக் கட்டியில் ஊசியைச்செலுத்தித் திரவத்தை உறிஞ்சி எடுப்பார். சாதாரண ஊசியே இந்தப் பரிசோதனைக்கும் பயன்படுத்தப்படும்.
மேற்சொன்ன சோதனையில் கட்டியானது, புற்றுநோய் கூறுகளைக் கொண்டுள்ளதா, அறுவை சிகிச்சை தேவையா போன்ற முடிவுகளை எடுப்பது சிலசமயம் கடினமாகிறது என்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இப்போது இரண்டாவது முறையான, திசுவை எடுத்துச் செய்யும் ‘கோர் பயாப்ஸி’யை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனை மருத்துவமனையில் அட்மிட் ஆகாமலேயே செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரம் வேண்டாம்!
 மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க, மருத்துவரின் நேரடிப் பரிசோதனை, மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், திசுப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்து, புற்றுநோய் என்று உறுதியான பிறகு, அது வேறெங்கிலும் பரவாமல் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அவசரப்பட்டு கட்டியை எடுக்கிறேன் என்று அறுவை சிகிச்சை செய்துவிடக்கூடாது.
 கட்டியின் பரிமாணத்தைப் பொறுத்து, நுரையீரல் எக்ஸ்ரே அல்லது சி.டி. ஸ்கேன் மற்றும் கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டும். எலும்பில் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய எலும்பு ஸ்கேனும் செய்ய வேண்டும். கர்ப்பப்பை, சினைமுட்டை பைகள் நன்றாக இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும்.
 தற்போது நோய் பரவுதலை கண்டுபிடிக்கும் வழிமுறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் வந்துள்ளன. MRI ஸ்கேன், PET CT ஸ்கேன் போன்றவை இருக்கின்றன. தேவைப்பட்டால் மட்டுமே, சூழ்நிலைக்கேற்ப இவற்றைச் செய்ய வேண்டும். ஏனெனில், PET CT ஸ்கேன் கதிர்வீச்சு அதிகமுள்ள ஒரு ஸ்கேன் முறை என்பதுடன், செலவும் அதிகம்.
பரிசோதனைகள் பற்றிப் புரிந்திருக்கும். இனி சிகிச்சை முறைகள் பற்றித் தொடர்ந்து பேசுவோம்..!''


சில அபாய அறிகுறிகள்!
 வெகுசீக்கிரம் பூப்படை வது.
 மாதவிடாய் சுழற்சி 50
 வயதுக்கு மேலும் தொடர்வது.
 முதல் பிரசவம் 30 வயது வரையிலும் நிகழாமல் இருப்பது.
 குழந்தை பெற்றுக்கொள் ளாமல் இருப்பது.
 தாய்ப்பால் தரவில்லை அல்லது இயலவில்லை போன்ற காரணங்கள்.
 மிக அதிக எடை (குறிப் பிட்ட உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டிய எடை யைவிட கிட்டத்தட்ட ஒன் றரை மடங்கு அதிகமாக இருப்பது).
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்!
 மார்பக வலி, கட்டி, கசியும் திரவம் போன்றவை குறித்து பல மூட நம்பிக்கைகள் உலவுகின்றன. மார்பில் தென்படும் கட்டியை சில பெண்கள் வலியிருப்பதில்லை என்பதால் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஒரு பெண் தன் மார்பகம் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். மாதவிலக்கு, கர்ப்பம், பாலூட்டுவது போன்ற காலங்களில் மார்பகங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை தெரிந்துவைத்து, இரு மாதவிலக்குக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் குறித்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
 வலியில்லாத மார்பகக்கட்டி, வலியுடன் கூடிய கட்டி, மார்பகம் தடித்துப்போவது, ரத்தம் அல்லது திரவம் மார்புக்காம்பில் இருந்து கசிவது, தோல் தடிப்பது அல்லது இறுக்கமடைவது, மார்புக்காம்பு உள்ளிழுத்துக் கொள்வது, அக்குளில் வீக்கம் போன்றவற்றை உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 மார்பகப் புற்றுநோய் ஆரம்பிப்பதற்கு முன்பாகக் கண்டுபிடித்துவிடுவதே நம்முடைய இலக்கு. 40 வயதுக்கு மேல் தொடர்ச்சியாக மேமோகிராஃபி பரிசோதனைகள் செய்துவருவது ஒன்றே இதற்கான சிறந்த வழி.
 மாதவிலக்கு எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வரும்? குழந்தைகள் உண்டா? தாய்ப்பால் புகட்டினீர்களா? ஹார்மோன் பதிலீட்டு சிகிச்சை ஏதாவது செய்துகொண்டிருக்கிறீர்களா? என்னென்ன மருந்துகள் சாப்பிட்டுவருகிறீர்கள்? குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருக்கிறதா? நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், சுவாசச் சிக்கல் ஏதாவது இருக்கிறதா?’ -  இவையெல்லாம் பரிசோதனைக்கு முடிவெடுக்கும் தருணத்தில் மருத்துவர் கேட்கவிருக்கும் கேள்விகள். சரியான பதிலை அளிக்கவும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 34908605250532705

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item