கீரை ரெசிப்பிகள்
வல்லாரைகோதுமை தோசை
தேவையானவை: வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு.
செய்முறை:
கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில்
கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு
ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு
எடுக்கலாம்.
பலன்கள்: ஞாபகசக்தி அதிகரிக்கும். ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு
தேவையானவை: பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை தலா 50 கிராம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
பருப்பையும் கீரையையும் வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி,
கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார்.
சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்:
வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு
வந்தால், அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
பசலைக்கீரைக் கடைசல்
தேவையானவை: பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு, சின்ன வெங்காயம் தேவையான அளவு.
செய்முறை: கீரையை
நன்றாக வேகவைத்து கடைந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு,
சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: பசலைக்கீரை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு.ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்காலங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு
தேவையானவை: அரைக்கீரை, சின்ன வெங்காயம், கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
கீரையில் சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன
வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில்
தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும்
இறக்கவும்.
பலன்கள்: கண் பார்வையைத் தெளிவாக்கும். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.
கொத்தமல்லிப் பொடி
தேவையானவை:
கொத்தமல்லி ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், பெருங்காயம் 3
சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, புளி சிறு நெல்லிக்காய் அளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியை மண் போக நன்றாக அலசி, செடியின் வேர்ப் பகுதியை நீக்கி,
பொடியாக நறுக்கி, துணியில் போட்டு 4, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி
எடுக்கவும். ஒரு இரும்பு கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம்
சேர்த்து, சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே
புளியைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பருப்புக் கலவை, புளி, கொத்தமல்லி, உப்பு
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்ததை ஒரு தட்டில் பரப்பி, 3 4 நாட்கள் நிழலில் உலர்த்தி, காற்றுப்
புகாத ஒரு டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தவும். சூடான சாதத்தில் இந்தப்
பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி
மற்றும் தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பலன்கள்: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும்.
நச்சுக்கெட்ட கீரை கூட்டு
இந்தக் கீரையைப் பேச்சுவழக்கில், லஜ்ஜை கெட்ட கீரை'
என்றும் அழைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர், நச்சகற்றி கீரை'
என்பதே. வீடுகளின் முன்பக்கம் அழகுக்காக, குரோட்டன்ஸ் போல வளர்க்கப்படும்
இந்தக் கீரை, சத்துக்களின் பெட்டகம்.
தேவையானவை:
கீரை 2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு அரை கப், உப்பு தேவையான அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் 2, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கீரையை நன்றாக அலசிக் கழுவி, பொடியாக
நறுக்கவும். கீரை, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தேவையான
உப்பு சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு
தாளித்து, சீரகம், பெருங்காயம் சேர்த்து, மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கீரைக்
கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.
பலன்கள்: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் காக்கும்.
அகத்திக் கீரை சுண்டல்
தேவையானவை:
அகத்திக் கீரை 2 கைப்பிடி, பாசிப்பருப்பு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான
அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தலா அரை
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயைக் கிள்ளிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளித்த பொருட்களைச்
சேர்த்து வதக்கி, ஊறவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து,
மூடி போட்டு வேகவைக்கவும். மிகவும் குழைய வேகவிடக் கூடாது. பருப்பு
வெந்ததும், கீரையை உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு இரண்டு நிமிடங்கள்
வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: அகத்திக் கீரை ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கவில்லையெனில், கீரையைப் பக்குவப்படுத்தி உபயோகிக்கலாம்.
பக்குவப்படுத்தும் முறை:
அகத்திக் கீரை அதிகமாகக் கிடைக்கும் சமயத்தில் வாங்கி, ஆய்ந்து, அலசி, ஒரு
துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலான இடத்தில் 2 3 நாட்கள்
உலரவைத்தால், ஈரம் இல்லாமல் காய்ந்துவிடும். அந்தக் கீரையை, காற்றுப் புகாத
டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம். தேவையான சமயங்களில் ஒரு கைப்பிடி
எடுத்து, ஒரு கப் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவைத்தால், அப்போது
பறித்த கீரை போல மாறிவிடும்.
பலன்கள்: எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குடல் புண்ணைப் போக்கும். மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.
தவசி கீரை பொரியல்
தேவையானவை:
துளிரான தவசி கீரை தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி தலா 1, பச்சை
மிளகாய் 2, உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு டீஸ்பூன், கடுகு,
உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
கீரையைக் கழுவி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக
நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து
வதக்கவும். பொடியாக நறுக்கிய துளிர் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து
இரண்டு முறை கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி
பரிமாறலாம்.
பலன்கள்: உடலைப் பலப்படுத்தும். சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தரக்கூடியது.
முருங்கைக்கீரை ராகி கட்லெட்
தேவையானவை: இளசான
முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி, கேழ்வரகு மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவையான
அளவு, பெரிய வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய்
தலா 1, மிளகுத்தூள், சுக்குத்தூள் தலா கால் டீஸ்பூன், பிரெட் தூள் ஒரு
கைப்பிடி, நல்லெண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரெட் தூள் தவிர்த்து,
மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துப்
பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். பிறகு, கட்லெட்களாகத் தட்டி,
பிரெட் தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய்
விட்டு, இருபக்கமும் நன்றாக சிவக்கவைத்து எடுக்கவும்.
பலன்கள்: ஆண்மை பலம் பெருகும். ரத்த உற்பத்திக்கு நல்லது.
Post a Comment