புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்! ''உ ணவே மருந்து’ என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்...
புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!
''உணவே மருந்து’
என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய
மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம்
போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத் தடுத்து,
குணப்படுத்தக்கூடிய ஆற்றல்கொண்டவை' என்று பெருமிதத்துடன் சொல்லும் ஆயுர்வேத
மருத்துவர் எல். மஹாதேவன், புற்றுநோயைத் தடுக்கும் பொருட்களைப்
பட்டியலிட்டார்.
மஞ்சள்
இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள்
புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி
ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு
உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும்
தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத்
தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு
மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து
நம்மைப் பாதுகாக்கும்.
குங்குமப்பூ
குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து.
முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’
(Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy)
எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ
பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும்
மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி
இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை,
மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய
நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல்
இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான
பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத்
தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம்
தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள்.
7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை
ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை
புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை
புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.
சீரகம்
உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான்,
இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக்
கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற
மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 'தைமோக்யூனைன்’
(Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச்
செயல்படக்கூடியது. புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின்
வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாகச் சிறுநீரகப் புற்றுநோய்க்கு
மருந்து தயாரிக்க, இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளபட்டுவருகின்றன. கணையத்தில் உள்ள 'பீட்டா’ (Beta) செல்களைப்
பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும்.
உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது.
பூண்டு
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.
இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத்
தடுக்கிறது. கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுச்
செல்களை அழிக்கிறது. வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும்
'ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில்
உள்ளது. மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது.
பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
லவங்கம்
வாதம், பித்தம், கபத்தைச் சமன் செய்யும். பசியைத்
தூண்டும். கட்டிகளை அகற்றுவது, கழலை நோய்களைத் தடுப்பது போன்ற மருத்துவக்
குணங்களை உடையது. கண்களுக்கு நல்லது. தலை சம்பந்தமான நோய்களுக்குச்
சிறந்தது. புற்றுநோயைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. மார்பகப் புற்றுநோய்,
உணவுக்குழாய் புற்றுநோய், ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவற்றுக்குச்
சிறந்தது. கிராம்புத் தைலம் பாக்டீரியாக்களை அழித்து, வலி நிவாரணியாகச்
செயல்படுகிறது.
Post a Comment