''சூடான சாதத்தில் சுடச்சுடக் குழம்பை ஊற்றிச் சாப்பிடுவதே ஒரு தனி டேஸ்ட். அதிலும், மிளகு, வெந்தயம்,...
''சூடான சாதத்தில் சுடச்சுடக் குழம்பை ஊற்றிச்
சாப்பிடுவதே ஒரு தனி டேஸ்ட். அதிலும், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை,
தனியா, சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றை வைத்து வாரம் ஒருமுறை என்
வீட்டில் ஏதாவது பத்தியக் குழம்பு செய்வேன். உடல் அலுப்பு, பித்தம்,
அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்னையும் இருக்காது'' என்ற
வரலட்சுமி முத்துசாமி, 'தனியா குழம்பு’ செய்யும் முறையை விவரிக்கிறார்.
தனியா குழம்பு
தேவையானவை: தனியா (கொத்தமல்லி விதை) - 3 ஸ்பூன், கடலைப்
பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, எள்ளு, மிளகு, நெய் - தலா ஒரு ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2, புளி - கோலி அளவு, பெருங்காயம், மஞ்சள் தூள் -
சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், எண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத்
தனித்தனியே வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். புளியை திக்காகக் கரைத்து
ஊற்றி, கொதித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், எள்ளு
சேர்த்து, பிறகு அரைத்தப் பொடியைப் போடவும். எல்லாம் கொதித்து வாசனை வந்து
கெட்டியானதும் இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும்
தொட்டுக்கொள்ளலாம். இதை கல் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும்.
ம்... மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
சித்த மருத்துவர் வேலாயுதம்:
மல்லி விதை, வாயுப் பிரச்னை வராமல் தடுக்கும். இதைத்
தவிர, இருமல், சளி, தலைவலி, பித்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற
பல்வேறு பிரச்னைகளுக்கும் அருமருந்து. இதில் தேநீர் தயாரித்தும்
அருந்தலாம். மலச்சிக்கலைப் போக்கும். குடலில் தசை இயக்கத்தைத் தூண்டும்.
தாங்க முடியாத வயிற்று வலி, வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
Post a Comment