வீட்டுக்குறிப்புக்கள்,
குக்கரில் உள்ள கறைகள் நீங்க... குக்கரின் உள்ளே கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்த்தால் கறைகள் விட்டுவிடும். பயிறு வக...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_01.html
குக்கரில் உள்ள கறைகள் நீங்க...
குக்கரின் உள்ளே கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்த்தால் கறைகள் விட்டுவிடும்.
பயிறு வகைகள் புழுத்து போகாமல் இருக்க...
பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
வற்றல் குழம்பு சுவையாக இருக்க...
வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப்பொடியும் கலந்தால் சுவையுடன் இருக்கும்.
ரொட்டி காய்ந்து போனால்...
ரொட்டி காய்ந்து போனால் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தால் புதிய ரொட்டி போல் மிருதுவாக ஆகிவிடும்.
பூண்டை சுலபமாக உரிக்க...
வெங்காயம், பூண்டை தண்ணீரில் தனித்தனியே போட்டு பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும். கண் எரிச்சல் வராது.
கோதுமையில் பூச்சி வராமல் இருக்க...
கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க...
பக்கோடா செய்யும்போது மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்துப் பாருங்கள். பக்கோடா மொறுமொறுப்பாக இருப்பதோடு ருசியாகவும் இருக்கும்.
கீரை சமைக்கும்போது..
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுவது தான் அரோக்கியத்திற்கு நல்லது. இதன் மூலம் உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
கூட்டில் உப்பு அதிகமா?
சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.
தட்டை ருசியாக இருக்க...
தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.
குடை மிளகாயை சமைக்கும்போது...
குடை மிளகாயை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதனை முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாக இருக்கும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்.
இட்லி மிருதுவாக இருக்க
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு அரிசி, உளுந்து ஊற வைப்பதற்கு முன்பாகவே தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு ஊற வைக்கவும். ஊறிய பிறகு அலசினால் அரிசி, உளுந்தில் உள்ள சத்து குறைந்துவிடும்.
ருசியான தட்டைக்கு
சலித்த மைதாவை இட்லி தட்டில் வைத்து வேகவைக்கவும். பிறகு அந்த மாவில் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்துப் பிசையவும். ஒரு பிடி அளவு கடலைப் பருப்பை நீரில் ஊறவைத்து இத்துடன் சேர்த்துத் தட்டை செய்தால் உண்பதற்கு மொரமொரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
Post a Comment