வெள்ளை காராமணி வடகம்-வாழைத்தண்டு வடகம் -கூழ் வற்றல்!
வாழைத்தண்டு வடகம் தேவையானவை: பச்சரிசி - 5 கப், நல்ல ...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_29.html
வாழைத்தண்டு
வடகம்
தேவையானவை: பச்சரிசி - 5 கப், நல்ல பிஞ்சு வாழைத்தண்டு - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - சிறிது, பச்சை மிளகாய் - 5.
செய்முறை: அரிசியை முந்தின நாளே ஊறவைத்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். மறுநாள் வாழைத்தண்டில் நாரை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு மிக்ஸியில் அரைத்து, அரிசிமாவில் கலக்கவும். இக் கலவையை தோசை மாவை விட நீர்க்க கரைத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
அரை மணி நேரம் கிளறிய பிறகு, தொட்டுப்பார்த்தால் மாவு நன்றாக வெந்து இருக்கும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ஆறியவுடன் சிறு கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வட்டங்களாக இடவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்துவைக்கவும். பொரித்து சாப்பிட்டால், இந்த வடகத்தின் சுவை நன்றாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்லது.
வெள்ளை
காராமணி வடகம்
செய்முறை: காராமணியை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு, உப்பு, மிளகாய், சேர்த்து அரைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி, காராமணி அரைத்த கலவையுடன் சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த கலவையை, பிளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்னதாக கிள்ளிவைத்து, வெயிலில் காய விடவும். நன்கு காய்ந்ததும் டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு பொரித்த குழம்பு, கூட்டு ஆகியவற்றுக்கு தாளித்து சேர்க்கலாம். ருசி அபாரமாக இருக்கும்.
கூழ்
வற்றல்
செய்முறை: பச்சரிசியை முந்தின நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து, 2 டேபிள்ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கரைத்து வைக்கவும். இந்த மாவு இரண்டு நாட்கள் புளிக்க வேண்டும். இந்த இரு நாட்களிலும், இரண்டு வேளையும் மாவை நன்றாக கையினால் கலக்கி வைக்க வேண்டும். கலக்கி வைக்காமல் அப்படியே வைத்தால் ஒரு வாடை வந்து விடும். மூன்றாம் நாள் ஒரு அடிகனமான பாத்திரத்தில் 10 கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து தண்ணீருடன் சேர்க்கவும். அது கொதித்ததும் ஜவ்வரிசியை போடவும். 10 நிமிடத்தில் ஜவ்வரிசி வெந்து மேலே வந்துவிடும்.
பிறகு, அரைத்து வைத்து புளித்த மாவினை நன்றாக தோசைமாவு பக்குவத்திற்கு கரைத்துக்கொண்டு, அந்த மாவை கொதிக்கும் தண்ணீரில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவேண்டும். மாவு வெந்தவுடன் அடுப்பை அணைத்து மூடிவைக்க வேண்டும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்கவேண்டும். அதுதான் பக்குவம். பின்னர் வத்தல் அச்சில் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டில் நீள நீளமாகப் பிழிந்து விடவும். நன்கு காய்ந்தபின் பொரித்துப் பாருங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அப்படியே சாப்பிடுவார்கள்.
கமென்ட்ஸ்...
வாழைத்தண்டு வடகம்: வாழைத்தண்டுக்கு பதில் பூசணிக்காயும் சேர்க்கலாம். பூசணிப் பத்தையை முந்தின நாள் இரவே பொடியாக நறுக்கிப் பிழிந்து, மூட்டையாகக் கட்டிவையுங்கள். அதிலிருக்கும் தன்ணீர் சத்து முழுவதும் போனபின், மறுநாள் மாவுடன் சேர்த்து வேகவிடலாம். அரைக்கத் தேவையில்லை.
வெள்ளை காராமணி வடகம்: காராமணியுடன் ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து அரைத்தால், வடகம் உதிராமல் நன்கு கிள்ளிவைக்க வரும். உளுத்தம்பருப்பை காலையில் ஊறவைத்தால் போதும். இந்த வடகத்தை பொரித்து தனியாகவும் சாப்பிடலாம்.
கூழ் வற்றல்: கலர் கலராக வற்றல் வேண்டும் என நினைப்பவர்கள், சில தக்காளிகளை மிக்ஸியில் அடித்து வடிகட்டி, தண்ணீரில் (10 கப் அளவு வருவது போல) சேர்த்து கொதிக்க வைக்கலாம். பச்சை நிறம் வேண்டுமென்றால் புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்கலாம். மணமும் நிறமும் பிரமாதமாக இருக்கும்.
Post a Comment