30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி
உயிர்
வாழ்வதற்கு இன்றியமையாத சத்துக்களில் மிக முக்கியமானது புரோட்டீன்
எனப்படும் புரதச்சத்து. புரதச்சத்தை வாரி வழங்கும் அட்சயப்பாத்திரமாக
விளங்குபவை பருப்புகள். புரதச்சத்துடன் விட்டமின்கள், கால்சியம்,
நார்ச்சத்து நிரம்பியிருக்கும் பாசிப்பருப்பை `ஆரோக்கியத்தின் தூதுவன்’
என்றே அழைக்கலாம். இது உஷ்ணக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன்,
எடை அதிகரிக்காமல் இருக்கவும் உறுதுணை புரியும்.
அதேசமயம், வெறுமனே பருப்பு, கூட்டு என்று செய்து பரிமாறினால், அனைவரும்
விரும்பி சாப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். இதையெல்லாம்
கருத்தில்கொண்டு, பாசிப்பருப்பில் டோக்ளா, பர்ஃபி, சூப், புட்டு,
இடியாப்பம், பிரதமன் என்று விதம்விதமாக தயாரித்து, `30 வகை பாசிப்பருப்பு
ரெசிப்பி’களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பிருந்தா ரமணி, ``ஹேவ் எ
ஹேப்பி அண்ட் ஹெல்த்தி ஃபேமிலி’’ என மனதார வாழ்த்துகிறார்.
பாசிப்பருப்பு டோக்ளா
தேவையானவை: பாசிப்பருப்பு
மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான
அளவு.
தாளிக்க: கடுகு,
உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சமையல்
சோடா, உப்பு சேர்த்துக் கலந்து, தயிர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக்
கலக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). கலந்த
மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு
எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, இதில்
சேர்க்கவும். மேலாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, கேரட் துருவல்
தூவி, சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு -
அரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், ஏதேனும் ஒரு கீரை (நறுக்கியது) -
அரை கப், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துருவிய இஞ்சி - ஒரு
டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு,
நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டுக்
கிளறவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு
சேர்த்துக் கிளறி... இதனுடன் வதக்கி வைத்த வெஜிடபிள் கலவையை சேர்த்துக்
கலக்கவும். பிறகு, உப்பு சரிபார்த்து... தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு
பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை கரண்டியால் எடுத்து
சற்றே மெல்லிய ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு,
இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், பச்சரிசி (ரவை போல உடைக்கவும்) - அரை கப், தண்ணீர் - ஒன்றரை
கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் -
கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - சிறு துண்டு, எண்ணெய் - 3
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பு,
கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில்
வைக்கவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஊறவைத்த
கடலைப்பருப்பை சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், இஞ்சி சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கிளறவும்.
வதங்கியவுடன், ஊறவைத்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறவும். பின்னர் தண்ணீரை
விட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்தவுடன் பச்சரிசி ரவை, உப்பு
சேர்த்துக் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். ரவை
வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடவும். தேங்காய்த் துருவலை
சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெந்த
உப்புமாவை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் உப்புமாவைக்
கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் பத்து
நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், ஜவ்வரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் -
ஒரு கப், சர்க்கரை - 2 கப், சிவப்பு ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள்
- கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பு
மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர்
விட்டுக் கரைக்கவும். அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட்
கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து, நன்றாகக் கிளறிவிடவும். நெய்யை
விட்டுக்கொண்டே மேலும் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை
அணைத்துவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய
தட்டில் கொட்டிப் பரப்பவும். மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப்
பதித்து வைத்தால்... பாசிப்பருப்பு அல்வா ரெடி! இதை துண்டுகள் போட்டும்
சாப்பிடலாம்.
பாசிப்பருப்பு இட்லி
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு
சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - கால்
டீஸ்பூன், தயிர் - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பைத்
தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு
மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடுகு,
பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து அரைத்த
பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த்
துருவல், உப்பு ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லித்
தட்டில் ஊற்றி, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
கோசுமல்லி
தேவையானவை: பாசிப்
பருப்பு - அரை கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - கால்
கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சிறிய
எலுமிச்சைப் பழம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பைத்
தண்ணீர் விட்டுக் களைந்து, பிறகு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். நன்றாக
ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சித்
துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் எலுமிச்சைப்
பழத்தைப் பிழிந்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாங்காய், வெள்ளரிக்காயையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கலாம்.
தால் கிரேவி
தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3,
சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 6
பற்கள், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, இரண்டு கப் தண்ணீர், மஞ்சள்தூள்,
கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, குக்கரை மூடி, மூன்று
விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... சீரகம், தட்டிய
பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொரிந்ததும் வேகவைத்த
பருப்பை சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பை சேர்த்துக் கலந்து, ஒரு கொதி
வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு போளி
தேவையானவை: மைதா
மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு, வெல்லத்தூள் - தலா முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு
சிட்டிகை.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுச்
சற்றுத் தளர்வாகப் பிசையவும். இதன் மேல் நல்லெண்ணெயைத் தடவி... இரண்டு மணி
நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை குழைய வேகவிட்டு எடுக்கவும். அடுப்பில் ஒரு
வாணலியை வைத்து... வேகவைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல்,
வெல்லத்தூள் போட்டுக் கிளறவும். நன்றாக சுருள வரும்போது ஏலக்காய்த்தூள்,
நெய் விட்டுக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி
வைக்கவும்.
வாழை இலை அல்லது பால் கவரின் மீது சிறிது எண்ணெயைத் தடவவும். பிசைந்து
வைத்த மாவிலிருந்து சிறு எலுமிச்சைப் பழ அளவு எடுத்து, அதன் மீது வைத்து கை
விரல்களால் அழுத்தம் கொடுத்துச் சின்ன வட்டமாகப் பரப்பி... நடுவில் பூரண
உருண்டையை வைத்து மூடி, திரும்பவும் கை விரல்களால் அழுத்திப்
பெரிதாக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, செய்து வைத்திருக்கும் போளியைப்
போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பாசிப்பருப்பு புட்டு
தேவையானவை: வறுத்த
பாசிப்பருப்பு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு
டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -
ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன்
மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து
நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர்
விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை
அணைத்துவிடவும். வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி
அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள
பாசிப்பருப்பு மாவை சேர்த்துக் கிளறவும். மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக்
கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த
முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன்
கலந்தால்... சத்தான, சுவையான பாசிப்பருப்பு புட்டு ரெடி.
முள்ளு முறுக்கு
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், அரிசி மாவு - அரை கப், சீரகம் அல்லது எள் - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்
- ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை
தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். இதனுடன் அரிசி மாவு, சீரகம் (அ)
எள், வெண்ணெய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து
தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை
சூடாக்கி... முள்ளு முறுக்கு அச்சு உள்ள குழலில் மாவைப் போட்டுப் பிழிந்து,
பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பாசிப்பருப்பு இடியாப்பம்
தேவையானவை: வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், வறுத்த கோதுமை மாவு - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப்பொருட் களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்
கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை
இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
பிறகு கலந்த சாதங்கள் செய் வது போல, தேங்காய் இடியாப்பம், லெமன்
இடியாப்பம் என்று செய்யலாம். இனிப்பு சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும்
செய்து பரிமாறலாம்.
பாசிப்பருப்பு வடை
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (பொடியாக
நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை
- சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் -
கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு ஊறவைத்து, தண்ணீரை வடித்து விட்டு அதனுடன்
உப்பு சேர்த்துக் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பச்சரிசி மாவு,
நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த்
துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி... மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு,
பொன்னிற மாகப் பொரித்து எடுக்கவும்.
பாம்பே சட்னி
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 3, கடுகு,
உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன்
காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தைப்
பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து... கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும்
கிளறவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு
விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கலந்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் இறக்கி... மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு போண்டா
தேவையானவை: பாசிப்பருப்பு
மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், உளுந்து மாவு - கால் கப், ரவை - 2
டேபிள்ஸ்பூன், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - ஒரு கப், சீரகம் -
ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), சமையல் சோடா - ஒரு
சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்
கலக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்).
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைச் சிறு உருண்டைகளாக எடுத்துப்
போட்டு... பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: மாவைக் கொஞ்சம் தளர்வாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
பருப்பு உருண்டை குழம்பு
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை
ஊற வைத்து, அதனுடன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய்ந்த
மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு,
பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இதை வழக்கமாக வைக்கும் சாம்பார் அல்லது மோர்க்குழம்பில் காய்க்குப்
பதிலாக சேர்க்கலாம் (இறக்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு சேர்க்க
வேண்டும்).
பாசிப்பருப்பு தோசை
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 3
(பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: எண்ணெய்
தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர்
விட்டு தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து
சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பாசிப்பருப்பு பக்கோடா
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், நறுக்கிய
வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய்
தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து,
தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,
மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பாசிப்பருப்பு பஜ்ஜி
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு, மைதா மாவு - தலா அரை கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சமையல்
சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான
அளவு, ஏதாவது ஒரு காய் (உருளைக்கிழங்கு, வாழைக்காய், பெரிய வெங்காயம்,
கத்திரிக்காய்) - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள
எல்லாவற்றையும் (எண்ணெய், காய் தவிர) ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்
கலந்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் காய்வதற்குள் காயை
வில்லைகளாகச் சீவி வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் காய்கறி வில்லையைப்
பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். இருபக்கமும் பொன்னிறமாக
வேகவிட்டு எடுக்கவும்.
இனிப்பு தோசை
தேவையானவை:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், தேங்காய்த் துருவல் -
ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் வெல்லத்தூளைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில்
வைக்கவும். நன்றாகக் கரைந்ததும் எடுத்து வடிகட்டவும். வேறொரு பாத்திரத்தில்
பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள்
போட்டுக் கலந்து, வெல்லக் கரை சலை விட்டுத் தோசை மாவு பதத் துக்குக்
கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து மாவை தோசையாக ஊற்றி,
சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் (தீயைக் குறைத்து
வைத்து செய்ய வேண்டும்).
பாசிப்பருப்பு ஓமப்பொடி
தேவையானவை:
பாசிப் பருப்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஓமம் - ஒரு
டீஸ்பூன் (பொடிக்கவும்), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத் திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களை யும் சேர்த்துக்
கலந்து, தண்ணீர் சேர்த்துக் கொஞ் சம் தளர்வாகப் பிசையவும். வாணலியில்
எண்ணெயைக் காயவைத்து ஓமப்பொடி அச்சு உள்ள குழலில் மாவைப் போட்டுப்
பிழிந்து, நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
பாசிப்பருப்பு தட்டை
தேவையானவை: பாசிப்
பருப்பு மாவு - 3 கப், அரிசி மாவு - ஒரு கப், பெருங்காயத் தூள் - அரை
டீஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய்
தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். மாவை சிறு உருண்டையாக
எடுத்து வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து
எடுக்கவும்.
பாசிப்பருப்பு மோர்க்களி
தேவையானவை: பாசிப்பருப்பு
மாவு - ஒரு கப், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், கறிவேப்பிலை -
சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய வெங்காயம் - அரை கப், தண்ணீர் - ஒரு
கப், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, புளித்த தயிர், தண்ணீர், உப்பு
சேர்த்துக் கட்டி இல்லாமல் கொஞ்சம் நீர்க்கக் கரைக்கவும். அடி கனமான
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். காய்ந்ததும் சீரகத்தைப்
சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை
சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வதங்கியவுடன் மாவுக் கரைசலை விட்டு
நன்றாகக் கிளறவும் (தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்). நன்றாக வெந்தவுடன்
இறக்கிப் பரிமாறவும்.
ரிப்பன் பக்கோடா
தேவையானவை: பாசிப்பருப்பு
மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், மிளகாய்த்தூள், எள் - தலா அரை
டீஸ்பூன், வெண்ணெய் அல்லது காய்ச்சிய எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் -
பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய்
தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும்.
தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக்
காயவைத்து, மாவை ரிப்பன் அச்சு உள்ள குழலில் போட்டுப் பிழிந்து,
பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: வறுத்த
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப்,
வெல்லத்தூள் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.
செய்முறை:
பாத்திரத்தில் வெல்லத்தூள், தண்ணீர் சேர்த்துக் கலக்கி அடுப்பில்
வைக்கவும். கரைந்ததும் எடுத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும்.
இதில் தேங்காய்த் துருவலை சேர்க்கவும். கொதி வர ஆரம்பித்ததும் மாவைப்
போட்டு கட்டி தட்டாமல் கிளறவும் (தீயைக் குறைத்து வைக்கவும்). வாணலியை மூடி
வைக்கவும். இடையிடையே திறந்து நன்கு கிளறி, நெய் விட்டுக் கலந்து அடுப்பை
அணைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு கொழுக்
கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
பாசிப்பருப்பு பர்ஃபி
தேவையானவை: பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், சர்க்கரை - 3 கப், பால் - 2 கப், நெய் - ஒரு கப், ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு மாவைப் பாலில் கரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கரைத்த
மாவுக் கலவை, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும்.
நெய்யை விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை
அணைத்துவிடவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி...
ஆறியதும் துண்டுகள் போடவும்.
பாசிப்பருப்பு பிரதமன்
தேவையானவை: வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், வெல்லத் தூள் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: தேங்காயைத்
துருவித் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடி கட்டி தனியாக
வைக்கவும். இரண்டாம், மூன்றாம் பாலை எடுத்துத் தனியாக வைக்கவும்.
வெல்லத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டவும். மூன்றாம்
தடவை எடுத்த பாலில் பாசிப்பருப்பு மாவைப் போட்டுக் கலந்து, அடுப்பில்
வைத்துக் கொதிக்கவிடவும். பாதி கொதிக்கும்போது இரண்டாம் தடவை எடுத்த பாலை
விட்டு வேகவிடவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்).
வெந்ததும் வெல்லக் கரசலை சேர்க்கவும். நன்றாகக் கலந்து சேர்ந்தாற்போல
வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, முதல்
தடவை எடுத்த தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கினால்... பாசிப்பருப்பு
பிரதமன் ரெடி!
விருப்பப்பட்டால், முந்திரிப்பருப்பு / பல்லு பல்லாகக் கீறிய தேங்காயை
நெய்யில் வறுத்துப் போடலாம். இதைச்சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ
அருந்தலாம்.
பாசிப்பருப்பு சூப்
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - ஒரு
டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: பாசிப்பருப்புடன்
இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை
வேகவிட்டு எடுத்து... கரண்டியால் மசித்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு
சூடாக்கி, சீரகத்தை சேர்க்கவும். பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டுப்
பற்களை சேர்த்துக் கிளறவும். பூண்டு வதங்கியதும் மசித்த பாசிப்பருப்பைப்
சேர்த்து... மிளகுத்தூள், உப்பு போட்டுக் கலக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர்
விட்டுக் கலக்கலாம்). ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லித்தழை
தூவிப் பரிமாறவும்.
குணுக்கு
தேவையானவை: பாசிப்
பருப்பு மாவு - ஒரு கப், ரவை - கால் கப், பெருங்காயத்தூள் - கால்
டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - அரை கப், மிளகாய்த்தூள், சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் -
பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்
கலந்து, தண்ணீர் விட்டுப் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலக்கவும். வாணலியில்
எண்ணெயைக் காயவைத்து... ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணயில் விட்டு,
பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பாசிப்பருப்பு - பைனாப்பிள் கேசரி
தேவையானவை: பாசிப்
பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - 2 கப், நெய் - 3
டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் துண்டுகள் - அரை கப், பைனாப்பிள் எசென்ஸ் - சில
துளிகள், முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: வெறும்
வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் பாசிப்பருப்பைப் போட்டு வாசனை வரும்
வரை சிவக்க வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்து
வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு
சூடாக்கி, முந்திரிப்பருப்பைப் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் விட்டு, கொதி வரும்போது பைனாப்பிள் துண்டுகளைப்
போடவும். இரண்டு நிமிடத்துக்குப் பிறகு பாசிப்பருப்பு ரவையைப் போட்டுக்
கிளறவும். கெட்டியானதும் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். நன்கு சேர்ந்து
வந்தவுடன், மீதி நெய்யையும் விட்டுக் கிளறி, அடுப்பை அணைத்துவிடவும்.
பைனாப்பிள் எசென்ஸ், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
மாலாடு
தேவையானவை: வறுத்த
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப்,
குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன், நெய் - முக்கால் கப், முந்திரிப்பருப்பு - 15.
செய்முறை: நெய்,
முந்திரிப் பருப்பு தவிர, மற்ற எல்லா பொருட் களையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு நன்றாகக் கலக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து,
மாவுக்கலவையில் சேர்த்துக்கிளறவும். மீதமுள்ள நெய்யை நன்றாகக் காய்ச்சி
மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, சூடு இருக்கும்போதே உருண்டைகள் பிடித்து
வைக்கவும்.
Post a Comment