பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை எம்.பி நகரை சேர்ந்த ஷகிலாபேகம். அவர் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக சத்துமாவு கூழ் பருகுவது வழக்கத்தில் உள்ளது. தினசரி காலை ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் சத்து மாவை போட்டு காய்ச்சி டீ, காபிக்கு பதிலாக குடிப்பார்கள். சத்துமாவுக்கு இருக்கும் தேவையை அறிந்து போகன்வில்லா மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரித்து விற்க முடிவு செய்தோம்.
எங்களுக்கு தனியாக பயிற்சி தேவைப்படவில்லை. வீட்டில் தயாரித்த அனுபவமே கைகொடுத்தது. நாங்கள் தயாரித்த சத்து மாவை தெரிந்தவர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்றோம். எங்கள் தயாரிப்பின் சுவை, மணம், தரம் அவர்களை கவர்ந்தது.தானியங்களை முளை கட்டி, காய வைத்து, அரைக்கும் வேலை மிச்சமானதால் தொடர்ந்து எங்களிடம் வாங்கினர். இதன்மூலம் எங்கள் தயாரிப்பு பிரபலமானது. பின்னர் படிப்படியாக புதிய வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மாவை அறிமுகப்படுத்தினோம். கடைகளுக்கும் விற்றோம்.
பெண்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள ஏற்ற தொழில் இது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவை விற்கிறோம் என்ற மனநிறைவு இத்தொழிலில் உண்டு. சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.
தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ, சோளம் 2 கிலோ, கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ, தினை அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, அவல் அரை கிலோ, ஜவ்வரிசி அரை கிலோ, வெள்ளை எள் 100 கிராம், கசகசா 50 கிராம், ஏலம் 50 கிராம், முந்திரி 50 கிராம், சாரப்பருப்பு 50 கிராம், பாதாம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சுக்கு 50 கிராம், பிஸ்தா 50 கிராம், ஜாதிக்காய் 2, மாசிக்காய் 2, ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும்.
அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள் ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.925. அரவை கூலி கிலோ ரூ.5 வீதம் ரூ.75. 1 ஆள் கூலி ரூ.200, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.1200. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.30,000, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.5,000. மொத்த மாத செலவு ரூ.35,000. வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,800. 25 நாளில் வருவாய் ரூ.45,000. செலவு போக லாபம் ரூ.10,000. இவைகள் உத்தேச மதிப்பாகும். செலவுக்கு தகுந்த மாதிரி குறைந்த விலை நிர்ணயம் செய்து விற்பனையை அதிகரித்து மேலும் லாபம் அடையலாம்!
சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை!
Post a Comment