பார்லர்
வெயில்
காரணமாக பாதிக்கப்படும் சருமத்துக்கு, பார்லர் மற்றும் பாரம்பரிய
சிகிச்சைகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, 'க்ரீன்
டிரெண்ட்ஸ்’ பார்லரின் சீனியர் டிரெயினர் பத்மா சொன்ன சம்மருக்கான பார்லர்
சிகிச்சைகள்...
''க்ளோயிங் ரேடியன்ஸ் என்றொரு சிகிச்சை இருக்கிறது.
இது, டல் சருமத்துக்கான ஸ்பெஷல் ஃபேஷியல். இது சருமத்தைப் பொலிவாக்குவதோடு,
தளர்ந்த சருமத்தை இறுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.
ஃபிரெஷ் பழங்கள் மற்றும் பிளாட்டின செல்லுலாய்டு கொண்ட
ஃபேஷியலை பிளாட்டினம் க்ளோ என்று சொல்வோம். இதில் டி - டேன் ஃபேஸ் பேக்கும்
உள்ளதால், கருமை மற்றும் மங்கு குறைந்து, முகம் பளபளப்பாகும். மேலும்
சருமத்துக்குக் குளிர்ச்சியும் தரவல்லது.
வெயிலினால் பாதிக்கப்பட்ட கைகளையும், கால்களையும்
ப்ளீச் செய்து, கைக்கு மெனிக்யூர், காலுக்கு பெடிக்யூர் செய்யலாம். இதன்
மூலம் இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்தி, சரும நிறத்தைக் கூட்டலாம்.
இதனுடன் 'வேக்ஸிங்’கும் செய்துகொள்வது, கூடுதல் அழகு தரும்'' என்று சொன்ன
பத்மா, பியூட்டி டிப்ஸும் தந்தார்...

''சருமத்தில்
வெயில் படாமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சன் பிளாக் க்ரீம்
மற்றும் லோஷன், குடை இவைதான் இதற்குச் சிறந்தவை.

அதிக கிளிசரின் கலந்த சோப்பு சருமத்தில் எண்ணெய்ப் பசையைத் தூண்டும். எனவே, அதைத் தவிர்க்கவும்.

சருமத்தின்
தன்மைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் அல்லது எண்ணெய்ப் பசை சருமத்துக்கான சோப்புகள்
(மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்) பயன்படுத்தினால், அதிக எண்ணெய்ச்
சுரப்பைத் தடுக்கலாம்.

வெயில்
காலத்தில், முகத்துக்கு மேக்கப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. மேக்கப் போட
வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், க்ரீம் மற்றும் ஆய்லி மேக்கப்பைத்
தவிர்க்க வேண்டும். 'மேட் ஃபினிஷ்’ மேக்கப் போட்டுக்கொள்ளலாம்.

மாய்ஸ்ச்சரைஸரை
இரவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகலில் பயன்படுத்த வேண்டியிருந்தால்
'க்ரீம் பேஸ்டு' மாய்ஸ்ச்சரைஸரைத் தவிர்த்து, 'வாட்டர் பேஸ்டு'
பயன்படுத்தலாம்.

திறந்திருக்கும்
சருமத் துவாரங்களை மூடக்கூடிய ஆஸ்ட்ரிஜின், 'வெட் டிஷ்யூ’ எனப்படும் ஈரமான
டிஷ்யூ பேப்பர்களில் உள்ளது. இதை எப்போதும் ஹேண்ட் பேக்கில்
வைத்துக்கொண்டால், முகத்தில் வடியும் எண்ணெய்ப் பிசுக்கை, ஒரு மணி
நேரத்துக்கு ஒருமுறை துடைத்து பொலிவாக வைத்துக்கொள்ளலாம்.''
பாரம்பரியம்
வெயிலினால்
ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து தற்காப்பதற்கான பாரம்பரிய முறையிலான
சிகிச்சையை வழங்குகிறார், 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் நிர்வாகி
கீதா அஷோக்...
''பாத எரிச்சல்:
வெயில் காலத்தில் வயதானவர்களுக்கு பாத எரிச்சல் வருவது இயல்பு. இதற்குத்
தினமும் இரவில் அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு
கைப்பிடி எப்சம் உப்பு (கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்), பத்து மில்லி
விளக்கெண்ணெய் விட்டு, பக்கெட் நீரில் பாதங்களை கால் மணி நேரம் ஊறவிடவும்.
விளக்கெண்ணெய் நக இடுக்கில் சென்று, பாதத்துக்கு குளிர்ச்சி தரும்.
கண் எரிச்சல்:
காதி கிராஃப்ட்டில் கிடைக்கக்கூடிய 'குளிர் தாமரை தைலம்’ மற்றும்
விளக்கெண்ணெய் இரண்டிலும் தலா ஐந்து மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து,
உச்சந்தலையில் வைத்து சூடு பறக்கத் தேய்க்கவும். பிறகு, தலைமுழுவதும்
தேய்த்து, 2 மணி நேரம் ஊறவைத்து அலசினால்... கண் எரிச்சல் மட்டும்
இல்லாமல், உடல் சூடும் சுத்தமாகக் குறைந்து, உடம்பே லேசானது போல இருக்கும்.
உடல் சூடு: சோற்றுக்கற்றாழையை
இரண்டாகக் கீறி, அதனுள் கைப்பிடி அளவு வெந்தயத்தை வைத்து, கற்றாழையை
திரும்பவும் ஒன்றாக வைத்து மூடி, கயிற்றால் கட்டி விடவேண்டும். இரண்டு நாட்
கள் கழித்து கயிற்றைப் பிரித்தால் உள்ளிருக் கும் வெந்தயம்
முளைவிட்டிருக்கும். அதை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து வழித்தெடுத்து
அரைத்து, அதில் ஐந்து மில்லி நல்லெண்ணெய், பத்து மில்லி விளக்கெண்ணெய்
கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால்... உடம்பு
குளிர்ச்சியாகும்.
எண்ணெய் வழியும் முகம்: அளவுக்கு
அதிகமான வெயிலால், புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் சருமத்தில்
ஊடுருவி, சீபம் எனும் எண்ணெயை அதிகமாக சுரக்கச் செய்யும். வெயிலினால்
ஏற்கெனவே வியர்வைத் துவாரங்கள் திறந்து வியர்ப்பதால், அதே துவாரங்கள்
வழியாக சீபம் எனும் எண்ணெயும் வெளியேறும். இதனால்தான் முகத்தில் எண்ணெய்
வழிகிறது.

காற்றில்
உள்ள தூசு, அழுக்கு என மாசுக்கள் சருமத்தோடு ஒட்டிக்கொண்டு முகத்தின்
பொலிவைக் குறைக்கும். இதன் விளைவாக முகப்பரு, கரும்புள்ளி, ரேஷஸ், மங்கு
போன்றவை ஏற்படும்'' என்று சொன்ன கீதா அஷோக் எண்ணெய் வழிவதைக்
கட்டுப்படுத்தி, முகத்தைப் பொலிவாக்க சில 'ஹோம் மேடு’ டிப்ஸ்கள் தந்தார்...

தர்பூசணி
பழ ஜூஸ் 10 மில்லி, மோர் 10 மில்லி இரண்டையும் கலந்து, அதில் பேண்டேஜ்
துணியை (மெடிக்கல் கடைகளில் கிடைக்கும்) நனைத்தெடுத்து, முகத்தின் மீது
படரவிடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் துணியை எடுத்துவிடவும். பிறகு,
குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை போய் முகம்
பொலிவாகும்.

நாட்டு
மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடிய சூரியகாந்தி விதை 1 ஸ்பூன் எடுத்து,
இதை மூழ்குமளவு பாலில் ஓர் இரவு ஊறவைத்து, மறுநாள் அரைத்து, அதனுடன் புதினா
சாறு 10 சொட்டுக்கள் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக்
கழுவவும்.

சாத்துக்குடி
ஜூஸ் 2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன், பொடித்த கற்பூரம் 1 சிட்டிகை
இவற்றை ஒன்றாகக் கலந்து, பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால், சரும
துவாரங்கள் மூடி, எண்ணெய் வழியாமல் இருக்கும்.

பார்லி
பொடி 2 ஸ்பூன் எடுத்து 25 மில்லி தண்ணீரில் கலந்து கஞ்சி பதத்துக்கு
கொதிக்க வைத்து, அதில் 10 சொட்டுகள் தேனும், எலுமிச்சைச் சாறும் விடவும்.
இதை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

சோள
மாவு 1 ஸ்பூன், மோர் கால் ஸ்பூன், பன்னீர் கால் ஸ்பூன் இவற்றைக் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால்,
எண்ணெய்ப் பிசுக்கு உடனடியாகப் போவதுடன், முகமும் பொலிவாகும் (இந்த பேக்
போட்ட பிறகு, மேக்கப் போட்டுக் கொண்டால், குறைந்தது 6 மணி நேரத்துக்கு
முகத்தில் எண்ணெய் வடியாமல், ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கும்).
பளீரிடும்...
சம்மர் ஸ்பெஷல் ஃபேஸ் பேக்!
நாட்டு மருந்துக்
கடையில் கிடைக்கக் கூடிய பாதாம் பிசினை பொடித்து, ஒரு ஸ்பூன் அளவுக்கு
எடுத்து, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து, 3 மணி நேரம் ஊறவிடவும். அதனுடன்
தர்பூசணிச் சாறு 2 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக்
கலக்கவும். கண், மூக்கு, வாய்க்கு மட்டும் துளையிட்ட மெல்லிய மஸ்லின்
துணியை முகத்தின் மீது போட்டு, அதன் மேல் இந்தக் கலவையை கனமான பேக்
போடவும். அரை மணி நேரம் கழித்துக் கழுவவும். இந்தக் கலவையை ரெடி செய்து
ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் பயன்படுத்தினால், முகம் குளிர்ந்து
பொலிவாவதுடன், நிறமும் கூடும். இது அனைத்து வகை சருமம் கொண்டவர்களுக்கும்
ஏற்றது!
Post a Comment