''மா ற்றுத்திறனாளியான என் மகள், தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு சென்றுவர சிரமப்படுகிறாள். மாற்றுத்திறனா...
''மாற்றுத்திறனாளியான
என் மகள், தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு சென்றுவர சிரமப்படுகிறாள்.
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு இலவசமாக வழங்கும் பிரத்யேக மூன்று சக்கர
மோட்டார் வாகனத்தைப் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அரசு தவிர்த்து
வேறு ஏதேனும் உதவிகள் நடைமுறைக்கு உதவுமா? பேட்டரி அல்லது பெட்ரோல் இதில்
எந்த வகை வாகனம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடியது?''
- கார்த்திகா, திருச்சி
சூர்ய.நாகப்பன், தலைவர், 'காலிபர்’ - மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம், கோவை:
''18 வயது பூர்த்தியான, மேற்கல்வி பயிலும்
மாற்றுத்திறனாளி மாண வர்கள், அரசின் மூன்று சக்கர மோட்டார் வாகனம் பெற
விண்ணப்பிக்க முடியும். டிப்ளமா மற்றும் பள்ளி மாணவர்களும் 18 வயது
பூர்த்தியாகியிருப்பின் விண்ணப்பிக்கலாம். சுயதொழில் புரியும்
மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.

பயிலும்
கல்லூரி அல்லது கல்வி நிறுவன முதல்வரிடம் இருந்து, மாணவர் என்பதற்கான
அத்தாட்சியுடன், கைவசமிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள
அட்டை நகல் இவற்றை இணைத்து, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுத் தபாலில் அனுப்பி அத்தாட்சியை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.
இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர் நேரடியாக அழைக்கப்பட்டு,
சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும். பிறகு, அவர்கள் தனியாக
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த முடிவைப்பொறுத்து
முன்னுரிமை முடிவு செய்யப்படும். அதாவது உடற்குறைபாட்டின் தீவிரம் கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படும் அதேசமயம், வாகனம் ஓட்டும் அளவுக்கு அவர்களின்
கரங்களுக்கு வலு உள்ளதா என்பதும் உறுதி செய்யப்படும்.

விண்ணப்பதாரரில்
தொழில்முனைவோரை விட, மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த
வகையில், ஒவ்வொரு ஆண்டும், மாநிலம் முழுக்க தேர்வு செய்யப்படும் சுமார்
1,000 பயனாளிகளுக்கு சுதந்திர, குடியரசு தினங்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் சர்வதேச தினமான டிசம்பர் 3 போன்ற நாட்களில் மேற்படி
வாகனம் அளிக்கப்படுகிறது. உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டும் வாகனம்
வழங்கப்படுவது தாமதமாக உணர்ந்தால், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
அளிக்கலாம். அடுத்த கட்டமாக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் (சி.எம்.செல்)
மனு அளித்து உங்கள் உரிமையை விரைவாகப் பெறலாம்.
மத்திய அரசின் நிதியுதவியோடு மாநில அரசு வழங்கும் இந்த
உதவி தவிர்த்து, உங்கள் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களின் தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்தும் குறிப்பிட்ட சதவிகிதம் மாற்றுத்திறனாளிகள்
மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த வகையில் உதவியைப்பெற மாவட்ட
ஆட்சித்தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
உங்கள் பகுதியில் இயங்கும் தனியார் பெரும்
நிறுவனங்களையும் அணுகலாம். ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தாங்கள்
இயங்கும் பகுதியின் சமூகநல மேம்பாட்டுக்காக 'கார்ப்பரேட் சோஷியல்
ரெஸ்பான்ஸிபிலிட்டி புராஜெக்ட்' (CSR-Corporate Social Responsibility
project) என்ற பெயரில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் கீழ்
பிரதானமாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
உங்கள் பகுதி கார்ப்பரேட் நிறுவனத்தின் மேற்படி திட்ட இணைப்பாளரை அணுகி,
கூடுதல் விவரங்களைப் பெறலாம். மேலும் உங் கள் பகுதியில் இயங்கும் தொண்டு
நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்றவற்றையும் அணுகலாம். இந்த
அமைப்புகள் தங்களுக்குக் கிடைக்கும் கோரிக்கைகளைப் பொறுத்து நலத்திட்ட
உதவிகளில் மாற்றம் செய்து விரைவாக உதவ முன்வருவதுண்டு.

'ராஜீவ் காந்தி மெமோரியல் டிரஸ்ட்' அவரின் பிறந்த நாளை
முன்னிட்டு வருடந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வாகனங்களை 100
என்ற எண்ணிக்கையில் வழங்கி வருகிறது. கல்வி நிறுவனங்களும் தங்களது டிரஸ்ட்
மூலம் சமூகத்தில் பின்தங்கிய கல்வி பயில ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குவதுண்டு. உங்கள் மகள்
பயிலும் கல்வி நிறுவனத்திலும்கூட இதுகுறித்து விசாரிக்கலாம்.
மேற்கல்வியில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கான உதவியைப் பெற எந்த வகையிலும் தயக்கம் வேண்டாம். சமூகத்தில்
உதவிகள் கிடைப்பதில் குறையில்லை. ஆனால், தட்டுகின்ற கதவுகள் மட்டுமே
திறக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் உதவிக்கான மேலதிக தகவலுக்கும்,
ஆலோசனைக்கும் 'காலிபர்’ மையத்தின் ஹெல்ப்லைனை 0422-243555 என்ற எண்ணில்
பெறலாம்.
ஒப்பீட்டளவில் பேட்டரி வாகனம் பெட்ரோல் வாகனத்தைவிட
விலை அதிகம்; பேட்டரிக்கு கிடைக்கும் வாரன்ட்டி காலம் குறைவு; பேட்டரி
வாகனங்களுக்கு சர்வீஸ் போன்ற அவசர உதவிகள் பரவலாக இன்னும் கிடைப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களினால் மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பெட்ரோல் வாகனமே
கைகொடுக்கும்.
Post a Comment