''அவ்வைப்பாட்டிக்கு
அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் அற்புதமான காயகல்பம். நம்ம தங்கம்மா
வீட்டுல நிறைய நெல்லிக்கா இருக்காம். பறிச்சிட்டு வருவோமா..?'' என்றபடியே,
வாசம்பாவின் விரல் பிடித்து நடக்கத் தொடங்கினாள் அம்மணி.
வாசலில் உட்கார்ந்திருந்த தங்கம்மா, இருவரையும்
பார்த்து, ''இது என்னடி அதிசயமா இருக்கு? ரெண்டு மருத்துவ சம்பந்திகளும்
வழி தெரியாம என் வீட்டுக்கு வந்துட்டீங்களா?''
''அடிப் போடி இவளே... உனக்கு எப்பவும் குசும்புதான்.
உன் வீட்டுல, பந்திக்கு இல்லாத நெல்லிக்கா, பறிக்க ஆளில்லாம நிறையக்
கிடக்குதுன்னு சேதி வந்திச்சு. அதான், எப்படி காக்காக்கு மூக்குல
வேர்த்தமாதிரி நாங்க வந்துட்டோம் பார்த்தியா?''
'''கொல்லப்புறத்துல கொட்டிக்கிடக்கு... போய் அள்ளிக்கோங்கடி அரை நெல்லியை...''
''அரை நெல்லிக்கா நெறைய இருக்கு. ஆனா, பெரிய நெல்லிக்கா மரத்துல கொஞ்சமாத்தானே கிடக்கு. ஏன் அம்மணி?''
''நம்மூர்ல அரை நெல்லிக்காய்தான் அதிகமா வெளையுது. வட
நாட்டுலதான் பெரிய நெல்லிக்காய் கிடைக்குது. ரெண்டுலயும் நிறைய மருத்துவக்
குணம் இருக்குடி.

தெனமும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தா, உடம்புல தெம்பு கூடி, எப்பவும் இளமையாவே வெச்சிருக்கும். தொற்று நோய் எதுவும் வராது.
வாய் துர்நாற்றம் வீசினா, நெல்லிக்காயைக் காயவெச்சு
அந்தப் பொடியை வாயில் போட்டுக் கொப்பளிக்கணும்.'' என்று அம்மணி
நெல்லிக்காய் டிப்ஸ் தந்தபடியே, உதிர்ந்த நெல்லிக்காய்களையும், நாலஞ்சு
மரக் கிளையையும் ஒடிப்பதைப் பார்த்து வாசம்பா,
''எதுக்கு அம்மணி... கிளையை ஒடிக்கிற... அதுல என்ன இருக்கு?''
''கிணத்துத் தண்ணில நெல்லிக்கா இலை, மரக்கிளையைப்
போட்டா, தண்ணி அப்படியரு இனிப்பா இருக்கும்டி. இந்தத் தண்ணியில கண்ணைக்
கழுவிட்டு வந்தா, கண் சிவக்கிறது, வலி, புண் எல்லாமே சரியாயிடும். சமையலும்
ருசிக்கும்.''
''ஆமா... மா... நெல்லிக்கா சாப்பிட்டு உடனே தண்ணி
குடிச்சா, தித்திப்பா இருக்குமே...'' என்றபடியே மடியில் நெல்லிக்காய்களை
முடிந்தபடி, தங்கம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு, விறுவிறுவென அங்கிருந்து
நடையைக் கட்டினர்.
''முடி கொட்டுறதேனு கவலைப்பட்டாலே, முடி கொட்டும்
வாசம்பா. நெல்லிக்கா தைலத்தை செஞ்சு வெச்சிக்கிட்டா அரை அடிக் கூந்தல்கூட
ஒரே வருஷத்துல ஒரு அடிக்கு மேல வளர்ந்திடும். பச்சை நெல்லிக்காய்கூட துளசி,
கடுக்காய் தோலு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து நல்லா
அரைச்சிக்கணும். இந்த விழுதைத் துணியில மூட்டை மாதிரி கட்டி உத்திரத்துல
தொங்கவிடணும். அதிலேர்ந்து துளித் துளியா சாறு வடிஞ்சிவிழும். இந்தச் சாறு
அளவுக்கு மூணு மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சிக்கணும். இந்த
எண்ணெயைத் தெனமும் தலையில் தடவிட்டு வந்தா முடி கொட்டுறது நின்னுடும்.
முடியும் அடர்த்தியா வளர ஆரம்பிச்சிடும்.''
''அப்படிப் போடு அருவாளை... முடியுள்ள சீமாட்டி கொண்டை முடிப்பாளாங்கிற மாதிரியில்ல என் கதை ஆகப்போகுது.
சரி, லீவுக்கு சென்னையிலேர்ந்து வந்திருக்கிற
ராசாத்தியோட பேத்திங்க, தலைமுடியில செம்பட்டை, மஞ்சளும், சிவப்புமா கலர்
கலரா சாயம் போட்டிருக்காங்க அம்மணி. அதுவும் பார்க்க அழகாத்தான்
இருக்கு.''
''ஆமா வாசம்பா, வயசுக்குக்கூட வராத பிள்ளைங்க.
கூடப்படிக்கிற பிள்ளைங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு இளநரையை மறைக்க முடிக்கு
கலரைப் போட்டிருக்கறதா, சொன்னதுங்க. அதுக்கும் கைவசம் வைத்தியம்
சொல்லிட்டுத்தான் வந்தேன்.
20 நெல்லிக்காய்கூட, எலுமிச்சை இலையைச் சேர்த்து நல்லா
அரைச்சு பாலில் கலந்து, எங்கெல்லாம் நரை இருக்கோ, அங்க தடவி, ஒரு மணி நேரம்
நல்லா ஊறவைக்கணும். மிதமா சூடு தண்ணீர்ல வாரம் ஒரு முறை, குளிச்சிட்டு
வந்தா, இளநரை இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்.''
''ஓ...''
''நெல்லிச்சாறுகூட பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், சர்க்கரை நோயைத் தடுத்திடும்.
நெல்லிக்காயை தேன்ல ஊறவெச்சு, காஞ்சதும், டப்பால
போட்டுவெச்சு, தெனமும் ஒண்ணு சாப்பிடலாம். என் அப்பத்தா, டப்பாலேர்ந்து
தெனமும் நாலு நெல்லிக்காய் எடுத்துத் தரும். இதைத்தான், நாட்டு மருந்துக்
கடையிலேயே, டிரை நெல்லின்னு சொல்லி விக்கறாங்க. வாசம்பா.''
''நெல்லியில இத்தனை மருத்துவமாடீ?''
''இன்னும் கேளு... நெல்லிக்காய், உடம்புக்குக்
குளிர்ச்சி. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். மலமிளக்கி, சிறுநீர்
பெருக்கியாவும் இருக்கும். ஆப்பிளை விடவும் நெல்லிக்காய்ல நிறைய சத்து
இருக்குதுனுதான் உனக்கும் தெரியுமே!''
''அரை வயிற்றுக்கே ஆலாய் பறக்க... ஆப்பிளுக்கு எங்கே
போறதுனு ஏக்கப் பெருமுச்சு விடற ஏழைகளுக்கே நெல்லிக்காய்தான் காயக்கல்பம்.
நெல்லிக்காயோட பலனை உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி சொல்லிட்ட.
அய்யய்யோ மறந்தேபோயிட்டேன் அம்மணி.... சூடு தாங்காம
வயித்துவலி, அல்சரால அலர்றாரு கோனாரு. அவங்க வீட்ல உன்னைப் பார்த்தா கையோட
அழைச்சிட்டு வரசொன்னாங்க.''
வாசம்பா பதட்டம் காட்ட, ''சூட்டைத் தணிச்சு,
குளிர்ச்சியூட்ட வெந்தயக்கீரை இருக்கு... கையோட எடுத்திட்டுப் போயிடலாம்
வாசம்பா...'' என்றபடி ஆயத்தமானார் அம்மணி. அப்புறம் என்ன... வெந்தயக்கீரை
புராணம்தான்!
Post a Comment