என் உலகம்...கவிதைத்துளிகள்
என் உலகம்... நான்... தனித்துவமானவள் இதோ விரிகிறது என் உலகம்... கோடிக்கோடியாய் வாசனை மிக்க வண்ண மலர்கள் இதழ் விரித்து இதமாய்ச் சிரிக்குது...


நான்... தனித்துவமானவள் இதோ விரிகிறது என் உலகம்...
கோடிக்கோடியாய் வாசனை மிக்க வண்ண மலர்கள் இதழ் விரித்து இதமாய்ச் சிரிக்குது இதயத்திலே!
வண்ணப்போட்டி நடக்குதோ? மலருக்கு இரண்டாக வண்ணத்துப் பூச்சிகள் கண்சிமிட்டித் தேனெடுக்குது இதழ்களிலே!
மார்கழி மாத முன்பனி மூழ்கடிக்க வண்ணக் கோலத்தின் நடுவே பூசணிப்பூ தன்னை அலங்கரிக்க என்னை அழைக்குது!
இலட்சம் மழலைகள் என்னைச் சுற்றி... கள்ளமற்ற சிரிப்பு வார்த்தையற்ற பேச்சு!
பறவைகள் சிறகடித்து வானத்திற்கு வழிகாட்டியது வானம் வசப்பட்டுவிட்டது!
விண்மீன்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொண்டேன்... சந்திர சூரியன் முன் வகிட்டில் நிலைபெற நட்சத்திரங்கள் பின்னலை அலங்கரிக்க கோள்களைக் கோர்த்து மாலையணிந்தேன்
கோள்களையாளும் செங்கோல் என் கையில்!
வருடங்கள் மின்னலாய் மறைந்தாலும் என்றும் மாறாது "என் இளமை!"
Post a Comment