கு ழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள் ‘மேத்ஸ்’ என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்...
குழந்தைகளிடம்
அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள்
‘மேத்ஸ்’ என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்று இன்றைய தேதியில்
எதுவும் இல்லை. மேலும், போட்டித் தேர்வுகள், ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று
எதிர்காலத்தை எதிர்கொள்ள, கணிதம் மிகவும் முக்கியம். அப்படியிருக்க,
பள்ளிப் பருவத்தில் கசக்கும் கணக்கை உங்கள் குழந்தைகளுக்கு இனிக்கவைக்க,
பெற்றோர்களுக்கு சில சூத்திரங்கள் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல
ஆலோசகர் தேவிப்பிரியா.
‘‘சூழ்நிலைதான் பல குழந்தைகளுக்கு கணக்கு என்றால் வெறுப்பு ஏற்படக் காரணம்.
மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், ‘மேத்ஸ்ல மார்க்
எடுத்தாதான் அறிவாளி’ என்றும், ‘கணக்கு வரலைன்னா மக்கு’ என்றும் பள்ளியில்
ஆசிரியர் தொடங்கி வீட்டில் பெற்றோர்வரை சொல்வதுதான், குழந்தைகளுக்கு கணக்கு
என்றால் பயமும் வெறுப்பும் ஏற்பட முதல் காரணம். முதலில் அதைத் தவிர்த்து,
கணிதத்தின் மீது படர்ந்திருக்கும் அதிமேதாவித்தனத்தை அகற்றி, ‘கணக்கு
ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. மற்ற பாடங்களைப்போலதான்’ என்று அவர்களுக்குச்
சொல்லுங்கள்.
கணக்கை மதிப்பெண் பாடமாக குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, பயமுறுத்தாமல், அதை
வாழ்க் கைப் பாடமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும்,
புரியவைக்கும்போதும் அதன் மீதான மிரட்சி விலகி, ஆர்வம் ஏற்படும். அதற்கு...

தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு
இயல்பாகவே ஆர்வம் இருக்கும். அதில் வரும் கதைகளும் இதற்குக் காரணம். எனவே,
பாடப்புத்தகத்தில் இருக்கும் கணக்குகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லித்
தீர்க்கச் சொல்லுங்கள். 10+10 என்ன என்பதை, ‘உங்கிட்ட 10 சாக்பீஸ்,
எங்கிட்ட 10 சாக்பீஸ்... மொத்தம் எத்தனை?’ என்று கேட்கலாம். அதேபோல,
பாடப்புத்தகங்கள் தவிர்த்தும் நீங்களாக அவர்களுக்கு சின்னச் சின்ன
கணக்குகள் தரலாம்.

தினசரி வாழ்க்கையில் கணக்கு எங்கெல் லாம் பயன்படுகிறது என்பதை, அவற்றைப்
பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலேயே அவர்களுக்குப் பொறுமையுடன் எடுத்துச்
சொல்லுங்கள். ‘பாலுக்கு எத்தனை டீஸ்பூன் சர்க்கரை போட்டிருக்கேன்?’, ‘நம்ம
வீட்டுல இருக்கிற கதவெல்லாம் என்ன வடிவத்துல இருக்கு?’, ‘இந்த சுவர்
கடிகாரம் வட்ட வடிவமா, கூம்பு வடிவமா?’, ‘உங்க ஸ்கூலுக்கும் நம்ம
வீட்டுக்கும் உள்ள தூரத்தை மீட்டர்னு சொல்வோமா, லிட்டர்னு சொல்வோமா?’
என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம்... அவர்களுக்கு வகுப்பில்
நடத்தப்படும் பாடம் தொடர்பான கணித அம்சங்களை, வீட்டிலும் உரையாடல்கள்
வழியாக அறிவுறுத்திக்கொண்டே இருங்கள்.

மைண்ட் மேப்பிங், பொருட்கள் மூலமாக கணக்கு செய்யவைப்பது என அவர்களின் கற்பனைக்கு வாய்ப்பளியுங்கள்.

ஒரு விஷயத்தை கேட்பதைவிட, பார்க்கும்போது எளிதாகப் புரியும் (விஷுவல்
லேர்னிங்). உதாரணமாக, லிட்டர், கிலோகிராம் போன்ற அளவீடுகளைப் புரியவைக்க,
பால் வாங்கும்போது, மார்க்கெட் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச்
செல்லலாம். மளிகைக்கடைக்கு அழைத்துச் சென்று, வாங்கும் பொருட்களுக்கு பணம்
கொடுப்பதை கவனிக்கவைத்து... கூட்டல், கழித்தல் கணக்குகளைப் புரியவைக்கலாம்.

வடிவங்கள், அளவீடுகள், கூட்டல், பெருக்கல், கழித்தல் என ஏதாவது ஒரு
தலைப்பை எடுத்து, ‘இது சரியா, அது சரியா?’ என்று சுவாரஸ்யமான விவாதங்களாக
அதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதனால் வகுப்பில் ஆசிரியரின்
கேள்விக்குப் பதில் அளிக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும்.

கணித ஃபார்முலாக்களை பாடல்களாகக் கற்றுக்கொடுங்கள்.

வீடியோ கேம்ஸ், கணினி பயன்பாடு பழக்கமுள்ள குழந்தைகளுக்கு, ஆன்லைன் மேத்ஸ்
கேம்ஸ் அறிமுகப்படுத்தலாம். இதில் ‘டைமிங்’ முக்கியம் என்பதால்,
விரல்களில் கணக்கு செய்யும் குழந்தைகள் விரைவாக மனக்கணக்குக்கு
மாறிவிடுவார்கள்.

மூளைக்கு வேலை தரக்கூடிய சுடோக்கு, மேத்ஸ் ட்ரிக்ஸ் போன்ற கணித விளையாட்டுகள் அவர்களுக்கு பயத்தை போக்கும்.
மொத்தத்தில், குதூகலமாகக் கணக்குபோடக் கற்றுத் தந்தால் உங்கள் பிள்ளையும் குட்டி ராமானுஜம்தான்!’’
Post a Comment