அமுத மொழிகள்! இறைவனிடம் கையேந்துங்கள்!
இறைவனிடம் கையேந்துங்கள்! மனிதன் தன்னுடைய இயக்கங்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவான அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையும், தன்னுடைய தேவைகளை அவன...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_4577.html?m=0
இறைவனிடம் கையேந்துங்கள்!
மனிதன் தன்னுடைய இயக்கங்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவான அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையும், தன்னுடைய தேவைகளை அவனிடமே கேட்டுப் பெறுவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
மனிதன் கருவில் உருவாகும் முன்னரே உலக வாழ்வில் அவன் நிலைமைகள் அத்துனையும் நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன. "எங்கே பிறப்பான்? எப்படி வாழ்வான்? எங்ஙனம் ஆடி அடங்குவான்?' என்பதெல்லாம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலையில்தான் உலகில் அவனது பிரவேசம் நிகழ்கிறது. "லஹ்வுல் மக்ஃபூல்' என்ற ஏட்டில் பதியப்பட்ட இந்த விதிகள் ஒவ்வொன்றும், அந்தந்தக் காலகட்டத்தில் எவ்வித மாற்றமுமின்றி நிகழ்ந்தே தீரும். நிர்ணயிக்கப்பட்ட இந்த நியதிகளைக்கூட மாற்றியமைக்கக்கூடிய ஒன்று உண்டு என்றால் அதுதான் "துஆ.' இறைவனிடம் கையேந்திப் பிரார்த்தனை செய்தல் என்ற இந்த ஒன்றுக்கு மட்டும்தான் அந்தச் சக்தி உண்டு. நிச்சயமாக விதித்த விதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.
""ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்துடைய அதிகாலை வேளையிலே அடிவானத்தில் வந்து நின்று கொண்டு என்னிடம் கேட்பவர்கள் யாராவது இருக்கின்றார்களா? அள்ளித் தரக் காத்திருக்கிறேன். ஆரோக்கியம் வேண்டுமா? ஐஸ்வர்யம் வேண்டுமா? என் கஜானா என்றுமே குறைந்து விடுவதில்லை'' என்று கூறிக் கொண்டு மனிதனிடம் பிரார்த்தனையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லாஹ்.
""என்னை நோக்கி ஒருவன் ஓரடி வந்தால், நான் அவனை நோக்கி இரண்டு அடிகள் முன்னேறுகிறேன். என்னை நோக்கி நடந்து வந்தால் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்பதோடு ஒவ்வொருவரின் கழுத்துப் பிடரி உயிர் நரம்பின் அருகில் இருந்து கொண்டு உங்களின் துஆக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். "ஆகுக' என்று ஆணையிட்டால் அதுவாக ஆகிவிடக் கூடிய அதீத சக்தியை உள்ளடக்கியவனாக உள்ளேன். என்னால் முடியாதது எதுவுமே இல்லை. எனவே என்னிடமே உள்ளத் தூய்மையோடு கேட்டுப் பாருங்கள். நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள்'' என்று அறைகூவலும் இடுகின்றான் இறைவன்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், உள்ளத் தூய்மையோடு செய்யப்படுகின்ற பிரார்த்தனைகளுக்குத்தான் இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்கும். நம்பிக்கையற்ற நிலையில் செய்யப்படுகின்ற எந்த "துஆ'வுமே வானளவில் உயர்த்தப்படுவதுமில்லை.
""எழுபது தாயின் அன்பைவிட அபரிதமான அன்பினால் மிகைத்தவனாகவும், உங்கள் கோரிக்கைகள் அத்தனையும் அங்கீகரிப்பதை என் மீது கடமையாகவும் ஆக்கிக் கொண்டுள்ளேன்'' என்று இன்னுமொரு இடத்திலே அல்லாஹ்வால் எடுத்தியம்பப்பட்டுள்ளது.
இறைவனிடம் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமானதாகவும், ஏற்புடையதாகவும் இருத்தல் அவசியம். இல்லையேல் அதற்கான பலனில் கால தாமதம் ஆகலாம்; அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்படலாம். இங்கு பொறுமையைக் கையாள்வது அவனின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும்.
இவற்றை எல்லாம் மீறி "துஆ'க்கள் மறுக்கப்பட்டால் அதில் நன்மை இருக்கலாம் என்று அதனை ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவமும் வேண்டும். "பிரார்த்தனையில் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டதா?' என்று சுய பரிசோதனை செய்து, அதனை திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம்!
Post a Comment