சமையல் குறிப்புகள்! சப்பாத்தி ரோல்
சப்பாத்தி ரோல் தேவையானவை: மேல் மாவுக்கு: கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_8682.html?m=0
சப்பாத்தி ரோல்
தேவையானவை: மேல் மாவுக்கு: கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா ஒரு கப், சோயா உருண்டைகள் (விருப்பப்பட்டால்) - 8, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: சோயா உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இரண்டு நிமிடம் கழித்து எடுத்துப் பிழிந்து, பச்சைத் தண்ணீரில் நன்றாக அலசவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காய விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில், பிழிந்து வைத்துள்ள சோயா உருண்டைகளை 4 துண்டுகளாக நறுக்கி சேர்த்து, பனீர் துண்டுகளையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து தண்ணீர் வற்றி வந்ததும், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து, சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து, சிறு சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் பனீர் பூரணத்தை நீளமாக வைத்து, ஒருமுறை சுற்றி, தண்ணீரைத் தொட்டு இரு பக்கவாட்டு ஓரங்களையும் மடித்துக் கொள்ளவும். பிறகு மொத்தமாக பாய் போல் சுருட்டி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
------------------------------------------------------------------------------
Post a Comment