யோகா 24,ஆசனம்!!
முழு உடலும் கைகளில்... க டந்த இரு இதழ்களில் பரிந்துரைக்கப்பட்ட ஆசனங்கள், உங்கள் கைகளை நன்கு வலுவாக்கி இருக்கும். அவை குறிப்பாக கால்க...
https://pettagum.blogspot.com/2013/12/24.html?m=0
முழு உடலும் கைகளில்...
கடந்த இரு
இதழ்களில் பரிந்துரைக்கப்பட்ட ஆசனங்கள், உங்கள் கைகளை நன்கு வலுவாக்கி
இருக்கும். அவை குறிப்பாக கால்களின் உதவியோடு செய்யப்பட்டவை. இப்போது
பார்க்க இருக்கும் இரு ஆசனங்கள், கைகளை மட்டுமே பயன்படுத்திச்
செய்யப்படுபவை. அதாவது, உடலின் முழு எடையும் கைகளில் தாங்கக்கூடிய
ஆசனங்களாக இருக்கும்.
இரு கைகளால் உடலைத் தாங்கும் நிலையை எதிர்கொள்ளத்தான்
இதுவரைக்குமான ஆசனங்களைச் செய்துவந்தோம். முன்பு பார்த்த ஆசனங்களை
முறையாகச் செய்திருந்தால், துணிந்து எதையும் செய்யலாம். மனம் முழுதும்
'முடியும்’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
இரு கைகளிலும் உடலை நிறுத்தி, ஒரு சில விநாடிகள் அல்லது
சில மூச்சுகளை இருந்து செய்யும்போது, பெரிதாக சாதித்த உணர்வு ஏற்படும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். முந்தைய இரு இதழ்களின் ஆசனங்களை
செய்திருந்தாலும் இந்த ஆசனத்தைச் செய்யும் முன்பு, மீண்டும் உங்கள் கை
பலத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
லோலாசனம்
இரண்டு கால்களை முன்னால் நீட்டி உட்காரவும். இந்த
நிலையில் இருந்து பத்மாசன நிலைக்கு வரவும். அதாவது ஒவ்வொரு காலையும்
மடித்து, பாதத்தின் வெளிப்பகுதி, அடுத்த கால் தொடை மீது இருக்கும்படி
வைத்து வசதியாக அமர்ந்துகொள்ளவும். இரு கைகளையும் உடலின் பக்கவாட்டில்
நெருக்கமாகவைக்கவும். உள்ளங்கைகள் தரையில் பதித்து, விரல்கள் முன்புறம்
பார்த்து நீட்டிவைக்கவும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தவாறு
கைகளை தரையில் அழுத்தியபடி, முழு உடலையும் மேலே உயர்த்தவும். இப்போது முழு
உடலும் இரு கைகளில் இருக்கும், தரையை விட்டு, சற்று மேலே. ஓரிரு
விநாடிகளுக்குப் பின் மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும்.
ஆரம்பத்தில் ஓரிரு முறை செய்வது நல்லது. தொடர் பயிற்சிக்குப் பிறகு
எண்ணிக்கையை அதிகரிக்கலாம். தேவையான முறை செய்ததும் கால்களை நீட்டிச்
சிறிது ஓய்வெடுக்கலாம்.
பலன்கள்: மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டைகள் நன்கு
பலம்பெறும். நரம்புகள் வலிமைபெறும். கவனம் ஒருநிலைப்படும். இளம்
வயதினருக்கு இது ஒரு சவாலான ஆசனமாக அமையும்.
பகாசனம்
மண்டியிட்டு உட்காரவும். இரு கால்களுக்குமிடையில்
போதுமான இடைவெளி இருக்கட்டும். இரு பாதங்களும் தரையில் நன்கு
பதிந்திருக்கட்டும். உள்ளங்கைகளை இரு முட்டிகளுக்குமிடையில் வைக்கவும்.
இந்த நிலையில் இருந்து உடலை முன்புறமாகச் சாய்த்து, கை முட்டிகளின் மேல்,
கால் முட்டிகளைக் கொண்டுவந்து நிறுத்தவும். இப்போது முழு உடலின் எடையும்
கைகளில் இருக்கும். பார்வை, தரையைப் பார்த்து இருக்கும். இந்த நிலையில் சில
விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்கு வரவும். முதலில் பிறரின் உதவியோடு
மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். முகத்துக்குக் கீழே தலையணை அல்லது
மெத்தை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
பலன்கள்: கணுக்கை மற்றும் கைகள் நன்கு பலமடையும்.
வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள் அழுத்தப்பட்டு பலம்பெறும். முழுக்
கவனத்துடன் செய்யப்படுவதால் மனம் ஒருநிலைப்படும். தன்னம்பிக்கை
அதிகரிக்கும். நேர்மறையான, சாதகமான எண்ணங்கள் அதிகரிக்கும். நரம்புகள்
வலுப்பெற்று உடலை வலிமையாக்கும். பகாசனத்துக்குப் பிறகு சிறிது நேரம்
படுத்து ஓய்வு எடுக்கலாம். சில தடவை மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிட்டு,
உடலைத் தளர்த்திக்கொள்ளலாம்.
வயது, செய்யும் நேரம், உடல் சக்தி, முந்தைய பயிற்சி
அனுபவம் பிற அம்சங்களைப் பொறுத்து எத்தனை முறை செய்ய வேண்டும், எவ்வளவு
நேரம் இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். எனவே, அனுபவப்பட்டவரின்
துணையோடு செய்து, நீங்களும் புது அனுபவம் பெறுங்கள். கைகள் நன்கு
வலிமைபெறும்.
Post a Comment