பழகிய பொருள்...அழகிய முகம்! வேப்பிலை...இனிக்கிற வேப்பிலை!
பழகிய பொருள்...அழகிய முகம்! வேப்பிலை...இனிக்கிற வேப்பிலை! வேப்பிலை என்று சொன்னாலே... வாய் கசக்கும்தான். ஆனால், வேப்பிலை தருகிற பலன்களை பார...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_9196.html?m=0
பழகிய பொருள்...அழகிய முகம்!
வேப்பிலை...இனிக்கிற வேப்பிலை!
வேப்பிலை என்று சொன்னாலே... வாய் கசக்கும்தான். ஆனால், வேப்பிலை தருகிற பலன்களை பார்த்தால் மனசு இனிக்கும். மிகச்சிறந்த ‘கிருமிநாசினி’யான வேப்பிலை... தலையில், உடலில் தலைவிரித்தாடுகிற பல இம்சைகளை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கிறது.
வேப்பிலையை வைத்து சில ‘ஆரோக்கிய மந்திரங்கள்’ இங்கே...
தாங்கமுடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு ‘கிடார்’ வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், ‘குப்’பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கும் ‘தலை மேல் பலன்’ கொடுக்கிற பேக் இது...
வேப்பிலை தூள் - அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள்-அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், பயத்த மாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன்... இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு ‘பேக்‘ போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள்.
வாரம் ஒருமுறை இந்த ‘பேக்‘ போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள்.
சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது, இந்த ட்ரீட்மெண்ட்...
வேப்பிலை - 1 பிடி, சீயக்காய் - 5, தோல் நீக்கிய கடுக்காய் - 1, கொட்டை எடுத்த புங்கங்கொட்டை - 3, செம்பருத்தி இலை - 1 பிடி... இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்து குளியுங்கள்.
இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.
‘குட்டையான கூந்தலா இருக்கே’ என்று ஏங்குபவர்களா நீங்கள்? நீளமான கருகரு கூந்தலாக வளரச் செய்கிறது இந்த ‘வேப்பிலைக் குளியல்.’
5, 6 வேப்பிலையுடன், கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தை சேர்த்து அரைத்து, தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வாருங்கள்.
வேப்பங்கொட்டை முடி வளர்ச்சியை தூண்டி, கருகருவென்று வளரச்செய்யும்.
தலையில் சர்க்கரை கொட்டியது போல...சிலருக்கு தலை முழுசும் முத்து முத்தாக... ஸாரி... கொத்து கொத்தாக ஈறுகள் நிரம்பியிருக்கும். ‘தலைகுனிவை’ தருகிற இந்த சிக்கலிலிருந்து விடுபடச் செய்கிற சிகிச்சை இது...
வேப்பங்குச்சி, பொடுதலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் ‘பேக்' போடுங்கள். காய்ந்ததும் அலசுங்கள்.
வாரம் இருமுறை இதுபோல் தேய்த்து குளித்து வந்தால், பொடுகு, ஈறு அடியோடு மறைந்து ‘பளபள’ என்று முடி பிரகாசிக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.
சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் தோன்றி கை பட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனையும் பீரிடும். இதற்கும் வேப்பிலையில் அருமையான சிகிச்சைகள் இருக்கின்றன. இரண்டை மட்டும் இங்கே பார்ப்போமா?
1. ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள். வேப்பிலை, மஞ்சளை சமஅளவு அரைத்து பருக்களின் மீது பூசுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள்.
2. சிறு துண்டுகளாக வெட்டிய வெட்டிவேரைஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி கொள்ளுங்கள். 5 கிராம் வேப்பந்தூள், 50 கிராம் கடலை மாவு இரண்டையும் கலந்து வைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, வெட்டிவேர் தண்ணீரை சேர்த்து பேஸ்டாக்கி பருக்களின் மீது பூசுங்கள்.
ஓரிரு வாரங்களில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
வெயில்காலம் ஆரம்பிச்சாச்சு.. வேனல்கட்டிகளின் தொல்லையும் வறுத்தெடுத்துவிடும்.இந்த சொரி, சிரங்கு, படைகளையெல்லாம் விரட்டியடிக்க, ஒரு வேப்பிலை பவுடர் தயாரிக்கும் முறையைச் சொல்லட்டுமா?
பாசிப்பயறு - அரை கிலோ, வேப்பிலை - 5 கிராம், பூலான் கிழங்கு - 50 கிராம், ரோஜா மொட்டு - 10 கிராம்... இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்தப் பவுடருடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளியுங்கள்.
இப்படிச் செய்தால், கட்டிகள் கிட்டே அணுகாது. சிறுவர்கள் மஞ்சள் சேர்க் காமல் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.
சிலர் வாயை திறந் தாலே அருகில் இருப்பவர் மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். அந்த அளவுக்கு துர்மணம் வீசி அருகில் இருப்பவர்களை நிலைகுலைய வைத்து விடும். இதை விரட்டிட, வீட்டிலேயே தயாரிக்க ஒரு பல் பொடி...
வேப்பங்குச்சியில் உள்ள இலைகளை நீக்கிவிட்டு, குச்சியை நன்றாக காய வைத்து பவுடராக்கி கொள்ளுங்கள். இந்தப்பவுடர் - 50 கிராம், பொடி உப்பு - 5 கிராம், பொடி கற்பூரம் - 2 கிராம், சர்க்கரை - 5 கிராம்... கலவையில் பல் தேய்த்துக் கொப்பளியுங்கள்.
வாய் துர்நாற்றம் போய், பற்கள் ‘பளிச்' சென்று இருக்கும்.
Post a Comment