சமையல் குறிப்புகள்-30 வகை மாலை நேர டிபன்
30 வகை மாலை நேர டிபன் கோடைக்காலம்... வெயிலுக்கு மட்டுமல்ல, விருந்து உபசரிப்புக்கும் குறைவில்லாத காலம். குழந்தைகளுக்கு லீவு விட்டதும், '...
https://pettagum.blogspot.com/2011/04/30_27.html?m=0
30 வகை மாலை நேர டிபன்
கோடைக்காலம்... வெயிலுக்கு மட்டுமல்ல, விருந்து உபசரிப்புக்கும் குறைவில்லாத காலம். குழந்தைகளுக்கு லீவு விட்டதும், 'யார் வீட்டுக்குப் போவது...? மாமா வீட்டுக்கா... பாட்டி வீட்டுக்கா? எந்த ஊருக்குப் போவது? எத்தனை நாள் தங்குவது?' என்று குடும்பமே குதூகலத்துடன் திட்டம் போட, வீடே சந்தோஷத்திலும் பரபரப்பிலும் திக்குமுக்காடும்.
ஆசையுடனும் பாசத்துடனும் வரும் சொந்த பந்தங்களுக்கு மதிய நேரத்து சமையலை தடபுடலாக சமைத்து, அசத்திவிடலாம். ஆனால், மாலை வேளையில்... 'என்ன டிபன் செய்வது..? என்று மண்டையைக் குடைய ஆரம்பித்துவிடுவோம்.
'இன்னிக்கும் பஜ்ஜியா..?' என்று நம் வீட்டு வாண்டுகளே விருந்தினர்களை முந்திக் கொண்டு, உதட்டைப் பிதுக்கும்.
'டிஃபரன்டாக செய்து அசத்துகிறேன் பார்!' என்று சவால் விட்டுக் கொண்டு களத்தில் குதித்தால்... 'ஐயோ' என டைனிங்டேபிளில் இருந்து சமயங்களில் அலறல் சத்தம் கிளம்பி வந்து, தர்மசங்கடத்தில் நம் தலையைத் தொங்க வைத்துவிடும்.
அப்படி எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்துவிடாமல், உறவுகள் கூடும் தருணங்களை இனிமையாக்க, அசத்தலான மாலை நேர சிற்றுண்டி
"எல்லாம் ஈஸியா, சிம்பிளா செய்யக்கூடிய... ஆனா, ரொம்ப ரொம்ப சுவையான பதார்த்தங்கள். கஷ்டமே இல்லாம மனசு முழுக்க இஷ்டத்தோடும் அன்போடும் சமைச்சு கொடுத்தீங்கனா, பலகாரமும் சுவையா இருக்கும்... பந்தமும் சந்தோஷமா இருக்கும்.
இந்த கோடைக்கால மாலைகளில் உங்கள் வீடுகளிலும் அந்த இனிமையான அனுபவங்கள் நெஞ்சமெல்லாம் நிறையட்டும்!
பிரெட் பால்ஸ்
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8, சோள மாவு - கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல், நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, முட்டைகோஸ், கேரட் துருவல், நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கலந்து இறக்கவும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும். அந்த பிரெட்டை தண்ணீரில் நனைத்து, அதில் மசாலா உருண்டைகளை வைத்து உருட்டிக் கொள்ளவும். அதை சோள மாவில் லேசாக ஒற்றி எடுத்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
ஓட்ஸ் அடை
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், முட்டைகோஸ் - தலா கால் கப், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, புதினா கலவை - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் ஓட்ஸைப் பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலந்து, பொடித்த ஓட்ஸை சேர்த்து, நன்கு கலக்கவும். பிறகு தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இதனை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். .
மிக்ஸட் பக்கோடா
தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், பஜ்ஜி மிளகாய், கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பீட்ரூட், இஞ்சி கலவை - ஒரு கப், அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய காய்கறி கலவைவை, அகலமான பாத்திரத்தில் போட்டு, அதில் எல்லா மாவுகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்-ளவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மீண்டும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகக் கலந்து கொள்ள-வும். கடாயில் எண்ணெய் விட்டு சூடான-தும், கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவை மாவை உதிர்த்துப் போட்டு, பக்கோடாக்-களாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
சில்லி மசாலா ரோல்ஸ்
தேவையானவை: ஊற வைத்த வெந்தயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், சோள மாவு - கால் கப்.
செய்முறை: ஊற வைத்த வெந்தயத்தை வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும். பிறகு, வெந்தயத்துடன் கடலை மாவு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசறவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய பஜ்ஜி மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பிசறிய வெந்தயத்தை அதில் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து கொள்ளவும்.
பிறகு, மைதா மாவுடன் சோள மாவு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கலந்து, அதனை முக்கோண வடிவில் தேய்த்துக் கொள்ளவும். அதனுள், கலந்த மசாலாவை வைத்து உருட்ட... ரோல்ஸ் ரெடி! இதே போல் ஒவ்வொரு ரோல்ஸையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய ரோல்ஸ்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
பிரெட் பணியாரம்
தேவையானவை: அரிசி - அரை கப், தூளாக்கிய பிரெட் - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய கொத்த-மல்லி - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிரெட்டை உதிர்த்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உதிர்த்த பிரெட்டை சேர்த்து, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி, அதை மாவில் போட்டுக் கலந்து கொள்ளவும். பணியாரச் சட்டியில் மாவை விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேக வைத்து பணியாரங்களாக சுட்டெடுக்-கவும்.
கார்ன் சமோசா
தேவையானவை: அமெரிக்கன் கார்ன் (இந்த சோளம், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, சன்னா மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய வைத்து, அதை மைதாவில் கொட்டிப் பிசறவும். கொஞ்சம் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டமாக இட்டு, அதை சூடான தோசைக்கல்லில் போடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு உடனே எடுத்து விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சோளத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, சன்னா மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் போட்டு எடுத்த பூரிகளை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதில் அரை வட்டத்தின் பாதியில் தண்ணீர் தடவி, சுருட்டி ஒட்டினால், கோன் வடிவத்தில் வரும். அதன் உள்ளே வதக்கிய சோளத்தை வைத்து, கோனின் மீதமிருக்கும் பகுதியை தண்ணீர் தொட்டு ஒட்டி விடவும். இதே போல் ஒவ்வொரு பூரியையும் செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்க, சுவையான சமோசா பரிமாற ரெடி!
பேல் பூரி
தேவையானவை: அரிசிப் பொரி - 3 கப், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை - கால் கப், ஓமப்பொடி - கால் கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - கால் கப், சாட் மசாலா - கால் டீஸ்பூன்.
காரச் சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா கலவை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.
ஸ்வீட் சட்னிக்கு: புளி - 50 கிராம், பொடித்த வெல்லம் - கால் கப், பேரீச்சம்-பழத் துண்டுகள் - சிறி த-ளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கார சட்னி அரைத்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி, வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதை புளி-வெல்லக் கரைசலில் விட்டு, கொதிக்க வைத்து, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால், ஸ்வீட் சட்னி ரெடி!
அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், துருவிய கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேவைக்கு ஏற்ப, ஸ்வீட் சட்னி, காரச் சட்னி கலந்து, அதன்மேல் ஓமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
அவல் கிச்சடி
தேவையானவை: அவல் - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, நறுக்கிய தக்காளி - கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் அவலைப் போட்டு, ஒன்றிரண்டாகப் பொடித்து, லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிசறிய அவல் சேர்த்துக் கிளறி, இறக்கவும். பரிமாறுவதற்கு முன், பொடித்த வேர்க்கடலை தூவிக் கொடுக்கவும். .
வெஜ் மேக்ரோனி
தேவையானவை: மேக்ரோனி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய வெள்ளை வெங்காயம், காளான், குடமிளகாய் - தலா கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வெள்ளை சாஸ்க்கு: மைதா மாவு - ஒரு டீஸ்பூன், பால் - அரை கப், துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அளவான தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேக்ரோனியைப் போட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்குமாறு செய்யவும். கடாயில், வெண்ணெயைப் போட்டு வெங்காயம், குடமிளகாய், காளான் சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். பால், மைதா, சீஸ் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். அதை காய்கறி கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வேக வைத்த மேக்ரோனியை அதில் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கீரை காட்டே
தேவையானவை: சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், தயிர் - அரை கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கீரையுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சீரகத்தூள், கடலை மாவு, உப்பு ஆகியவற்றை அரைத்தக் கீரையுடன் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருளை வடிவில் உருட்டி, ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி, வட்ட வடிவத்தில் துண்டுகளாக்க... காட்டே ரெடி!
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, கட்டே துண்டுகளைப் போட்டு வறுத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சன்னா கட்லெட்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் - தலா கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடித்த பிரெட் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கொள்ளவும். அதை முக்கால் பதத்துக்கு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து மீண்டும் வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து எல்லாம் ஒன்றாக சேரும் வரை வதக்கவும். அரைத்த சன்னாவை சேர்த்துக் கிளறி, பிரெட் துகள்களைப் போட்டுக் கலந்தது, அடுப்பை அணைக்கவும். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விரும்பும் வடிவத்தில் கட்லெட்டாக செய்து கொள்ளவும். இதை தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதை எண்ணெயில் பொரித்தெடுத்தும் சாப்பிடலாம்.
ராகி வெஜ் அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் - தலா கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய குடமிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதில் தண்ணீர் விட்டு, அது கொதித்ததும் கேழ்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி இறக்கவும். அந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அடைகளாகத் தட்டவும். அதனை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்க... ராகி வெஜ் அடை ரெடி!
ஸ்வீட் பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய பனீர் - ஒரு கப், கோவா - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, துருவிய பனீர் போட்டு வதக்கவும். பிறகு கோவா, சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். கோதுமை மாவில் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்திக்கல்லில் சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். அதில் சிறிது பனீர் கலவையை வைத்து நான்குபுறமும் மடித்துத் தேய்க்கவும். இதே போல் ஒவ்வொரு சப்பாத்தியையும் செய்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
ஆப்பிள் பக்கோடா
தேவையானவை: ஆப்பிள் துருவல் - அரை கப், கடலை மாவு - அரை கப், ரவை - கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் துருவிய ஆப்பிளுடன் கடலை மாவு, ரவை, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
பிரெட் பீட்ஸா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8, ஆலிவ் துண்டுகள் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், துருவிய பீட்ஸா சீஸ் - கால் கப், நறுக்கிய தக்காளி - கால் கப், நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் - சிறிதளவு.
செய்முறை: ஒரு பிரெட் துண்டை எடுத்து, அதன் மேல் கொஞ்சம் தக்காளி, சிறிதளவு குடமிளகாய், ஆலிவ் துண்டுகள் வைத்து, அதன் மேல் மிளகாய்த் துகள்களைத் தூவவும். அதன் மேல் துருவிய சீஸைப் பரவலாகப் போடவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, அதில் பிரெட் துண்டை வைத்து ஒரு மூடியால் மூடவும். சில நிமிடங்களில் சீஸ் உருகியதும் எடுத்துப் பரிமாறவும். இதேபோல் ஒவ்வொரு பிரெட் துண்டையும் செய்து கொள்ளவும்.
ஆனியன் பராத்தா
தேவையானவை: மைதா மாவு - ஒன்றரை கப், மெல்லிய வட்டங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சுருள வதக்கவும். ஆறியதும், மைதா மாவை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி
தேவையானவை: பஜ்ஜி மிளகாய் - 6, எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப்பிங் செய்ய: கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - கால் கப், சர்க்கரை - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில், எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே கடாயில் நெய் விட்டு கடலை மாவை வறுத்து, கொப்பரைத் துருவல், சர்க்கரை, சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து நன்றாகக் கலந்து கொள்ளவும். வறுத்த எள்ளை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொள்ள... ஸ்டஃப்பிங் ரெடி!
பஜ்ஜி மிளகாயை ஒன்றரை இன்ச் நீளத்துக்குக் கீறி, உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். அதனுள் தயார் செய்த கலவையை வைத்து ஸ்டஃப் செய்யவும். இதேபோல் ஒவ்வொரு மிளகாயையும் ஸ்டஃப் செய்யவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஸ்டஃப் செய்த மிளகாய்களை அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க... சூடான ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி பரிமாற ரெடி.
புரோட்டீன் ரோல்ஸ்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், சோள மாவு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளை கட்டிய பச்சைப் பயறுடன் உப்பு சேர்த்து வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனை, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயம் தாளித்து, வேக வைத்த பருப்புக் கலவை சேர்த்து வதக்கி, பிறகு வேக வைத்த பயறையும் சேர்த்து நன்கு கிளறி, ஆற விடவும்.
மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு மூன்றையும் உப்பு, தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து கொஞ்சம் மாவு எடுத்து, நீள வடிவில் தேய்க்கவும். அதில் ஒரு பக்கத்தில் பருப்புக் கலவையை வைத்து, உருளை போல் உருட்டி, ஓரங்களை அழுத்தி ஒட்ட.. ரோல்ஸ் ரெடி! இதே போல் ஒவ்வொரு ரோல்ஸையும் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்த ரோல்ஸ்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
உப்பல் அடை
தேவையானவை: புழுங்கலரிசி மாவு - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, புழுங்கலரிசி மாவுடன் ஊற வைத்த பருப்புக் கலவை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, அடைகளாகத் தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தட்டிய அடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
இது, சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்!
சாபுதானா வடை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், தயிர் - அரை கப், அரிசி மாவு, தேங்காய் துருவல் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு பெருங்-காயத்தூள், அரிசி மாவு சேர்த்து, கெட்டி-யான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்-தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.
புளி உப்புமா
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை: புளியை இரண்டரை கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, புளித் தண்ணீரை விடவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். புளி நீர் கொதித்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, அரிசி ரவையை சீராகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். குக்கரை மூடி மிதமான தீயில் வேக வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, பொடித்த தனியா-மிளகாய் பொடியை சேர்த்து நன்றாகக் கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து, பிறகு பரிமாறவும்.
டோக்ளா
தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், ட்ரை ஈஸ்ட் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், வெதுவெதுப்பான பால் - கால் கப், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில், ஈஸ்ட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்கவும். கடலை மாவுடன் ஈஸ்ட் கலந்த பால், இட்லி மாவு சேர்த்துக் கலந்து, உப்பு சேர்க்கவும். இட்லி மாவு பதத்திலேயே இருக்கும்படி தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி மாவை விட்டு நிரப்பி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடான நீரில், சர்க்கரையைக் கரைத்து அதன் மேல் தெளித்து, சிறு சிறு பீஸ்களாக நறுக்கினால் டோக்ளா ரெடி.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தாளித்து, அதனை ‘கட்’ செய்த டோக்ளாக்களின் மேல் பரவலாகப் போட்டுப் பரிமாறவும்.
மைதா போண்டா
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், தயிர் - அரை கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தயிருடன் மைதா மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறு கரண்டியால் கலந்த மாவை எடுத்து எண்ணெயில் விடவும். சிவக்க வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
ஆலு டிக்கி
தேவையானவை: நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், பிரெட் துண்டுகள் - 4, நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கடாயில் சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வேக வைத்த பாசிப் பருப்பை அதில் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொள்ளவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், நனைத்த பிரெட் துண்டுகள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளுக்குள் பாசிப்பருப்பு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, விரும்பும் வடிவத்தில் செய்து கொள்ளவும். அதனை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
ஃப்ரைடு இட்லி
தேவையானவை: துண்டுகளாக நறுக்கப்பட்ட இட்லி - இரண்டு கப், தக்காளி விழுது - அரை கப், நீளமாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - 4, நறுக்கிய வெங்காயம், தக்காளி சாஸ் - தலா கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய இட்லிகளைப் போட்டு வறுத்தெடுக்கவும். அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், பஜ்ஜி மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் தக்காளி விழுது சேர்த்து, அது கொதித்ததும் தக்காளி சாஸ் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், வறுத்த இட்லி துண்டுகளைப் போட்டுக் கலந்து, கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பயறு அடை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பச்சைப் பயறு - அரை கப், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, தேங்காய் துருவல் - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முதல் நாள் இரவே பச்சைப் பயறை ஊற வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். இதனுடன் ஊற வைத்த பச்சைப் பயறு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஆப்பிள் ஸ்டஃப்டு பேன் கேக்
தேவையானவை: ஆப்பிள் துருவல் - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள், காய்ச்சிய பால் - தலா அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு
செய்முறை: மைதா மாவுடன் பால், சமையல் சோடா, சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். துருவிய ஆப்பிள் துருவலுடன் பேரீச்சம்பழத் துண்டுகள், தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். மைதா மாவுக் கலவையில் கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் போட்டு தோசை போல் வார்த்து, நடுவில் பேரீச்சம்பழக் கலவையை வைத்து, சுற்றி லும் நெய் விட்டு, வெந்தவுடன் மடித்து எடுத்து, பரிமாறவும்.
வெஜ் பூரி
தேவையானவை: கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய குடமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி கலவை - அரை கப், மைதா மாவு - ஒரு கப், சோள மாவு - கால் கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறி கலவையைப் போட்டு, சுருள வதக்கி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும். மைதா மாவு, சோள மாவு, ரவை மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவில் சிறிது சிறிதாக எடுத்து, பூரியாகத் தேய்த்து.. அதில் காய்கறிக் கலவையை வைத்து, நான்குபுறமும் மூடவும். இப்படி மூடிய பூரியை ஒருமுறை லேசாக தேய்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தயார் செய்த பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
பனீர் டிக்கி
தேவையானவை: சதுர வடிவில் நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, நறுக்கிய வெங்காயம் - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, எலுமிச்சைச் சாறு, தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். கொதிக்கும் நீரில் காய்ந்த மிளகாயைப் போட்டு, 10 நிமிடம் ஊற விடவும். வதக்கிய வெங்காயம், ஊற வைத்த மிளகாய், எலுமிச்சைச் சாறு, தக்காளி சாஸ், உப்பு கலந்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையில் பனீர் துண்டுகளைப் போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை வறுத்துப் பரிமாறவும்.
கோபி 65
தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவர் - 2 கப், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மைதா மாவு, சோள மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய காலிஃப்ளவரைப் போட்டு 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். பிறகு, கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை போட்டு எடுத்து, அகலமான பாத்திரத்தில் போடவும். அதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கலக்கவும். தயிரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசறி, அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப் போட்டுப் பொரித்து எடுத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Post a Comment