ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17 எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை!
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17 எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை! ''என்ன பாட்டி இது..., கலர் கலரா தோசை பண்ணுவேனு ...
https://pettagum.blogspot.com/2014/11/17.html?m=0
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17
எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை!
''என்ன பாட்டி இது..., கலர் கலரா தோசை பண்ணுவேனு பார்த்தா, கருப்புக் கலர்ல இருக்கு, இதை எப்படிச் சாப்பிடுறது?'
''இது கம்பு சோள தோசை! அம்புட்டும் ஆரோக்கியம் பொண்ணு.'
''இப்படியே எதையாவது சொல்லிச் சாப்பிடவைச்சிடு.''
''ஆமாம்டி... அரிசியைக் காட்டிலும் கம்பு தானியத்தில்
இரும்பும் கால்சியமும் பலமடங்கு அதிகம். நார்ச்சத்தும் இருக்கு. வைட்டமின்,
மினரல் டானிக்கும்கூட இருக்கு. பாட்டி சத்தானதாத்தான் தருவேன்னு உனக்குத்
தெரியும்ல!'
''அது தெரியும். நீ கம்பு மட்டும் சொல்லலியே... கூட எதோ சோளமும் சொன்னியே?''
''சோளம் சேர்த்துச் செய்றப்ப, எண்ணெய் விடாமலேயே தோசை மொறுமொறுன்னு வரும். அதோட, சோளத்தில் உள்ள புரதம், சாதா தோசை
யவே ஊட்ட தோசையா மாத்திடும்.'
''நான்தான் அடிக்கடி பீச்ல சுட்ட சோளம் சாப்பிடறனே... .''
''அடியே அறிவாளி... அது மக்காச்சோளம். வெளிநாட்டுல
இருந்து இங்க கொண்டுவந்து விக்கிறாங்க. நான் சொல்லுறது வெள்ளைச் சிறு
சோளம். இப்பல்லாம் யாரு அதைச் சாப்பிடறா? மாட்டுத் தீவனத்துக்குதான்
வாங்குறதே!''
''ஓ... அதுதான் எனக்குத் தோசை பண்ணிக் குடுத்திருக்கியா?''
''உன் நக்கல் இருக்கு பாரு... சோளம். கம்பு எல்லாமே உரம் இல்லாமல், பூச்சிக்
கொல்லி விஷம் இல்லாமல் விளையக்கூடியது. ஆர்கானிக்னு சொல்லி வாங்குறீங்கல்ல.. இதெல்லாம்தான் முழு ஆர்கானிக்.''
''சரி பாட்டி, டென்ஷன் ஆகாத. நான் சாப்பிடறேன். கம்பு,
சோளத்தை தோசையா மட்டும்தான் சாப்பிடணுமா. வெரைட்டியா வேற எதுவும் பண்ண
முடியாதா?''
''அதெல்லாம் அருமையாப் பண்ணலாம். சோளப் பணியாரமும், கம்பங்கூழும்தான் நாளைக்குக் காலையில உனக்கு டிபன். ஓகே வா.?''
''கூழா, சும்மா கேட்டா உடனே ஆப்பு வைக்கிற பாரு.'
''போன வாரம் ஹோட்டல்ல, சாப்பிடறதுக்கு முன்னாடி
சப்புக் கொட்டிக் குடிச்சியே, 'ஸ்வீட்கார்ன் சூப்’ அந்த இங்கிலீஷ் கூழ்
இறங்கும்... தமிழ்க் கூழ் அலுக்குதாக்கும்?'
''வரிக்கு வரி என்னை அடிச்சா எப்படி? ரைட் விடு.. கூழுக்கு வடகம் பொரிச்சுத் தருவியா?'
''வடகம்லாம் கிடையாது. பிரண்டைத் துவையல்தான். எலும்புக்கு வலிமையான பிரண்டை, வயித்துப் புண்ணையும் போக்கும்.''
'ம்... எதோ டேஸ்ட்டியா குடுத்தா சரிதான்.''
''டேஸ்ட் இல்லாம எப்படி? பிரண்டையை வதக்கி கொஞ்சமாய்
உப்பு, புளி, வரமிளகாய் சேர்த்து அரைச்சு கூழுக்கும், மோர்்சோறுக்கும்
சாப்பிட்டுப்
பாரு. பிரண்டைக்கு ஃப்ரெண்ட் ஆயிடுவே.'
''எவ்ளோ நேரம் வெறும் தோசையை சாப்பிட? தொட்டுக்க எதாவது குடு பாட்டி.''
''இந்தா பக்கத்துலதான் கடலை சட்னி வைச்சிருக்கேன் பாரு. எடுத்துக்கோ...''
''ஓ இதானா? இதை எப்படிப் பண்றது பாட்டி?''
''நிலக்கடலையை வறுத்து புளி சேத்து, கொஞ்சம்
தேங்காயும், வரமிளகாயும் வறுத்துச் சட்னியா அரைச்சுச் சாப்பிட்டா... அத்தனை
டேஸ்ட். இந்தச் சட்னி மெலிஞ்ச உடலை பருக்க உதவும். சின்னப் பிள்ளைகளுக்கு
நல்லது.
பிரண்டை, கடலை மாதிரியே வல்லாரை, தூதுவளை இதையெல்லாமும் வதக்கிச்
சட்னியா செஞ்சு சாப்பிடலாம்.''
'சிறுதானியங்களிலே கம்பு, சோளம் தவிர வேற என்னல்லாம் காலை உணவுக்கு நல்லது பாட்டி?
'கேழ்வரகு தோசை, ரொட்டி, தினையரிசி வெண் பொங்கல்
பண்ணலாம். கேழ்வரகு எலும்புக்கும் தினையரிசி கண்ணுக்கும் நல்லது. தினை
மஞ்சளா இருக்கறதுக்குக் காரணம், அதுல இருக்கிற பீட்டா கரோட்டினால்தான்.
கூடவே பொங்கல்ல சேர்க்கிற மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பாற்றலைத்
தரக்கூடியது. சிறுதானியங்களை காலையில் சாப்பிடுறது, ரொம்ப நேரம் பசியைக்
காக்கும். இட்லியையும், புட்டையும் வெள்ளை அரிசியில செய்யாம, பாலிஷ் போடாத
சிறுதானியத்துல சாப்பிடணும்.
''சரி என்ன கையில இஞ்சித் துண்டை வெச்சிருக்க?'
''காலையில் ரெண்டு துண்டு இஞ்சி, மத்தியானம் ரெண்டு
ஸ்பூன் சுக்குத்தூள், சாயங்காலம் அரை டீஸ்பூன் கடுக்காய்த்தூள் தொடர்ந்து
சாப்பிட்டா, மலச் சிக்கல் தொந்தரவு இருக்காது. நேரத்துக்குப் பசிக்கும்.
காலை பித்தக் கிறுகிறுப்பும் வராது. இளமையா, நோய் வராம இருக்கலாம்.'
''நீ கலக்கு பாட்டி!''
3 comments
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
Thanks for sharing, Nice article @
New Latest Technology Tricks !!
www.techfetz.blogspot.com
http://techfetz.blogspot.com
* Mobile Tricks
* Computer Tricks
* Online Jobs
* Earn Money Online
* Latest Technology News
* Internet Tips
தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து பெட்டகம் பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும்.Thanks-அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment