இன்றைய சமையல்! புதிய பகுதி --சமையல் குறிப்புகள்,
''தினமும் கண் விழிப்பதே சமையலறையாக இருக்கிறபோது, 'இன்றைக்கு என்ன சமையல்?’ என்ற கேள்விகள் வருவது...
https://pettagum.blogspot.com/2013/10/blog-post_9610.html?m=0
''தினமும் கண்
விழிப்பதே சமையலறையாக இருக்கிறபோது, 'இன்றைக்கு என்ன சமையல்?’ என்ற
கேள்விகள் வருவது இயல்பே. உங்களுக்காகத்தான் திங்கள் முதல் ஞாயிறு வரை, சில
எளிதான சமையல் குறிப்புகளைத் தரவிருக்கிறேன். தவிர, என்னுடைய கைமண
ரெசிபிகளும் இடையிடையே இடம்பிடிக்கும்.
இந்த இதழில், திங்கட்கிழமை அன்று என்ன சமைக்கலாம்
என்பது பற்றி சொல்லப் போகிறேன். மிகமிக எளிதான ரெசிபி இது'' என்று
சிரித்தபடியே தடதடவென ஆரம்பித்தார் தாமு. இவர் சொல்லும் ரெசிபியை,
உங்களுக்காக சுடச்சுட இங்கே சமைக்கும் சென்னையைச் சேர்ந்த அஞ்சனா, அந்த
ரெசிபி பற்றிய கருத்துகளையும் சேர்த்தே பரிமாறுகிறார்.
காலை சிற்றுண்டி : பொங்கனம்
தேவையானவை: மிகுந்து
போன இட்லி மாவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன், ரவை - 2
டீஸ்பூன், தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள்.
எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, மிகுந்து போன இட்லி மாவில்
கொட்டி நன்கு கலக்குங்கள். பிறகு மைதா மாவு, தயிர், ரவை ஆகியவற்றை மாவோடு
சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக்
கொள்ளுங்கள்.
அடுப்பில்
தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், கரண்டியில் மாவை எடுத்து, ஓரளவுக்கு
சின்னதாக ஊற்றுங்கள். எண்ணெய் விட்டு சுட்டெடுங்கள். தோசையின் நடுப்பக்கம்
கெட்டியாகவும், அதன் ஓரங்கள் மொறுமொறுவென்றும் இருக்க வேண்டும்.
அவ்வளவுதான்... பொங்கனம் ரெடி.
காலையில் பொங்கனத்தை சாப்பிட்டு கொள்ளலாம். ஒருவேளை
மதியமும் இதையே கொண்டு செல்ல விருப்பமாக இருந்தால், ஒரு பொங்கனத்தை வைத்து,
அதன் மீது தோசை மிளகாய்ப்பொடியை நல்லெண்ணெய் கலந்து தடவிவிடுங்கள்.
இப்படி பொடி தடவிய தோசையின் மீது மற்றுமொரு தோசையை
வைத்துவிடுங்கள். இறுதியாக வைக்கும் தோசையின் மீது கண்டிப்பாக
நல்லெண்ணெயில் கலந்த பொடியை தடவ வேண்டும். மதியத்துக்கு அற்புதமாக
இருக்கும் இந்த பொங்கனம்.
அஞ்சனா கமென்ட்: பெயரும் வித்தியாசம், செய்வதும் சுலபம். 'அட’ என்று சொல்ல வைக்குது இந்த ரெசிபி.
தோசை மிளகாய்ப்பொடி தயாரிக்க தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 2 கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும்,
எண்ணெய் விடாமல் அனைத்துப் பொருட்களையும் வறுத்து, தேவையான உப்பு சேர்த்து,
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தால்.... அற்புதமான தோசை - இட்லி
மிளகாய்ப்பொடி வீட்டிலேயே ரெடி.
மதிய சாப்பாடு : தயிர் சாதம்!
இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் தயிர் சாதம்
செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் செய்வதில்லை. நான் சொல்வதை அப்படியே
செய்தால்... நீங்கள் தயிர் சாதத்துக்கு அடிமையாகிவிடுவீர்கள்.
தேவையானவை: அரிசி
- அரை டம்ளர், தண்ணீர் - 3 டம்ளர், தயிர் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு
டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒன்றரை டம்ளர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ளுங்கள்.
இதில் காய்ச்சிய பாலை ஊற்றி, வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு
கலந்துகொள்ளுங்கள். இப்போது சாதம் திக்காக இல்லாமல் தளதளவென்று தண்ணீர்
மாதிரி இருக்கும். இதனை ஆற வைத்து டிபன் பாக்ஸில் வைத்து மூடும் முன் தயிர்
சேர்த்து நன்கு கிளறி மூடிவிடுங்கள். மதியம் பாக்ஸை திறக்கும்போது, தயிர்
சாதம் புளிக்காமல், ஸ்மூத் அண்ட் டேஸ்ட்டியாக இருக்கும். இதற்கு தக்காளி
தொக்கு... சூப்பர் சைட் டிஷ்!
அஞ்சனா கமென்ட்:
சின்னச் சின்ன சமையல் நுணுக்கங்களையும் எளிதாகச் சொல்லி இருக்கிறார்.
அதையெல்லாம் செய்து பார்த்தபோது வீட்டில் உள்ள அனைவரின் பாராட்டும்
கிடைத்தது.
இரவு உணவு : ஃபுல்கா சப்பாத்தி
இரவு, சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டீர்களா... ஃபுல்கா சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்.
தேவையானவை: கோதுமை மாவு - 2 டம்ளர், தண்ணீர் - 1 டம்ளர், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து
நிமிடம் ஊற வையுங்கள். இனி, சப்பாத்தி தயாரித்து, தவாவை அடுப்பில் வைத்து
சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் சப்பாத்தியை நன்கு வேக
வைத்து எடுக்க வேண்டும். அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில்
இரண்டு பக்கமும் காட்டி எடுத்துவிட்டால்... ஃபுல்கா சப்பாத்தி ரெடி.
தீயில் அதிக நேரம் வைத்தால், சப்பாத்தி கருகிவிடும்.
இந்த ஃபுல்கா சப்பாத்தியை எண்ணெய் தடவாமல் அப்படியே மடித்து வைத்தால்...
மறுநாள் வரைகூட சாஃப்ட்டாக இருக்கும்.
ஃபுல்காவுக்கு சைட் டிஷ் சப்ஜி
தேவையானவை: உருளைக்கிழங்கு,
கேரட், பீன்ஸ் போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள்
- கால் கிலோ. பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - 2
டம்ளர், உப்பு - தேவையான அளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகள்
எல்லாவற்றையும் கழுவி, நறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும்,
காய்கறிகளைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, தேவையான உப்பு, மஞ்சள்தூள்,
பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து,
தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 'சிம்’மில் வேக வைக்க வேண்டும். இரண்டு
விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காய்கறியில் இதைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
Post a Comment