சமையல் குறிப்புகள் ! முள்ளங்கி சப்பாத்தி
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்ற...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_4743.html?m=0
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் செய்யும் சத்தான சப்பாத்தி பற்றி பார்க்கலாம்.
முள்ளங்கியின் முக்கியத்துவம்
முள்ளங்கி சப்பாத்தி செய்யும் முன் முள்ளங்கியின் முக்கியத்துவத்தை பார்த்து விடுவோமா?
உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி.
உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதிலும் முள்ளங்கி முக்கியப்பங்கு வகிக்கிறது. முள்ளங்கியில் பொதிந்து கிடக்கும் `வைட்டமின் சி', ஆஸ்துமா தொல்லையைக் குறைத்து சைனஸ் பிரச்சினை உள்ளோருக்கு பெரும் நிவாரணத்தை அளிக்க வல்லது.
முள்ளங்கியில் உள்ள `வைட்டமின் கே' சத்து சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து அவை சேர விடாமலும் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
மேலும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.
முள்ளங்கியில் இத்துணை நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு அதன் வாசனை பிடிப்பதில்லை. முள்ளங்கியை சாம்பார் செய்கையில் மற்ற பொருட்களுடன் சேர்ப்பதால் அதன் வாசனை அவ்வளவு விரும்பத்தகாததாக இருப்பதில்லை.
முள்ளங்கி சப்பாத்தி செய்கையில் ஓமம் உபயோகப்படுத்தினால் முள்ளங்கி வாசனை அவ்வளவாக தெரியாமல் இருப்பதுடன் ஓமத்தின் நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
நம் வயிறாருக்கு ஆத்மார்த்த தோழனாக செயல்படுவது ஓமம் என்றால் மிகையில்லை. மிகச்சிறிய குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த பெரியோர் வரை அனைவரின் வயிற்றுக்கும் வயது வித்தியாசமின்றி நன்மை நல்குவது ஓமம்.
ஓமத்தை ஒரு துணியில் கட்டி, அதை முகர்ந்தாலே மூக்கடைப்பு, ஜலதோஷம் முதலியவை நீங்கும். படுக்கும் தலையணையின் கீழ் சிறிய ஓம பொட்டலம் ஒன்றை வைத்து படுக்கும் பழக்கமும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது.
வாசத்திலேயே இவ்வளவு நன்மை பயக்கும் ஓமம் உடலுக்கு உள்ளே சென்றால் இன்னும் பலப்பல நன்மைகளைத் தரும். வாயுத்தொல்லை, பசியின்மை, செரிமானமின்மை போன்ற அனைத்துத் தொல்லைகளுக்கும் நிவாரணம் அளிக்கும். ஓமத்தை வீட்டு மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்.
மனம் ஒத்த தம்பதியர் இணைந்து குடும்பம் நடத்துகையில் விளையும் நன்மைகள் பல என்பதுபோல் முள்ளங்கி + ஓமம் சேர்ந்து கிடைத்தால் நம் உடலும் பலப்பல நன்மைகளைப் பெறும்.
இனி முள்ளங்கி சப்பாத்தி செய்யக் கற்றுக்கொள்ளலாம்.
முள்ளங்கி சப்பாத்தி
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை
முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.
சுவைக்கான குறிப்பு
சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.
முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல் தானே!
Post a Comment