ஜமுனாபாரி, தலைச்சேரி, நாட்டு ஆடுகள்!
* ஒரு ஈற்றுக்கு 2 முதல் 3 குட்டிகள் * ஆறு மாதங்களில் விற்பனை * விற்பனைக்கு அலையத் தேவையில்லை வி வசாயம் பொய்க்கும் நேரங்களில் எல்ல...
https://pettagum.blogspot.com/2016/09/blog-post.html?m=0
*ஆறு மாதங்களில் விற்பனை
*விற்பனைக்கு அலையத் தேவையில்லை
விவசாயம் பொய்க்கும் நேரங்களில் எல்லாம் விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். குறிப்பாக, குறைந்த பராமரிப்பிலேயே அதிக லாபம் கொடுக்கும் கால்நடைகளில் கோழிக்கு அடுத்தபடியாக இருப்பது ஆடுதான். அதனால்தான் விவசாயிகள் பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஆடு வளர்ப்பில் தற்போது பிரபலமாக இருப்பது பரண் மேல் ஆடு வளர்க்கும் முறைதான். தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்பதால், பலரும் இம்முறையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பரண்மேல் ஆடுவளர்ப்பு முறையில் கலப்பின ஆடுகளை வளர்த்து வருகின்றனர், சுல்தான் பாட்ஷா மற்றும் பிலால் ஆகியோர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் பதினைந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது சேத்தூர் எனும் கிராமம். அங்கிருந்து வலதுபுறம் பிரியும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கரையூர். இங்குதான் சுல்தான் பாட்ஷா மற்றும் பிலால் ஆகியோரின் ‘பாட்ஷா ஆட்டுப்பண்ணை’ இருக்கிறது.
ஒரு மதிய நேரத்தில் அவர்களின் ஆட்டுப்பண்ணைக்குச் சென்றோம். நம்மை வரவேற்று பேசிய சுல்தான் பாட்ஷா, “நான் நத்தத்துல குடியிருக்கேன். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பாத்துட்டு ரிட்டையர்டு ஆகிட்டேன். வேலையில இருக்கிற சமயத்துல சின்னதா தோட்டம் போட்டு, அதோட ஆடுகளையும் வளர்த்துட்டு இருந்தேன். அப்புறம் சூழ்நிலை காரணமா நிலமெல்லாம் கைவிட்டு போயிடுச்சு. அதுக்கப்புறம் விவசாயத்தை விட்டாச்சு. இருந்தாலும் ஆர்வம் குறையலை. என்னோட மூத்த மகன் பெங்களூருல இருக்கார். அவருக்காக வாங்கின நிலம்தான் இது. நானும், என் மகனோட மைத்துனர் பிலாலும் சேர்ந்துதான் இந்த ஆட்டுப்பண்ணையை வெச்சிருக்கோம். பிலால்தான் இங்கேயே பண்ணை வீட்டுல தங்கி ஆட்டுப்பண்ணையைப் பார்த்துக்கிறார். அவரே உங்களுக்கு பண்ணைக் குறித்து சொல்வார்” என்று பிலாலை அறிமுகப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிலால், “எனக்குச் சொந்த ஊர் பழநி. டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சுருக்கேன். கொஞ்ச நாள் அது சம்பந்தமான வேலை பார்த்தேன். அது பிடிக்காததால விலகிட்டேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயம், ஆடு வளர்ப்புல ஆர்வம் அதிகம். பக்ரீத் பண்டிகை அன்னிக்கு முஸ்லிம் மக்கள் ஆட்டுக்கறியை தானம் கொடுப்பாங்க. அதனால அந்த சமயத்துல செம்மறி ஆட்டுக்கு அதிக தேவை இருக்கும். அதை மனசுல வெச்சு, என்னோட நண்பர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன்.அங்கே செம்மறி கிடாக்களை வாங்கிட்டு வந்து ஆறேழு மாசம் வளர்த்து, பக்ரீத் சமயத்துல மொத்தமா விற்பனை செய்வேன். அதுலயே எங்க வீட்டுக்கும் ஒரு ஆட்டை எடுத்துக்குவோம்.
நான் வேலையை விட்ட சமயத்துல ‘பசுமை விகடன்’ புத்தகம் எனக்கு அறிமுகமாச்சு. அதுல வந்த ஆடு வளர்ப்பு கட்டுரைகளைப் படித்ததும் பெரிய அளவுல ஆடு வளர்க்கணும்னு ஆசை வந்துடுச்சு. அந்த சமயத்துல, அக்கா வீட்டுக்காரர் இந்த இடத்தை வாங்கினது எனக்கு தோதா அமைஞ்சது. அவரோட பேசிதான் நானும் மாமாவும் இங்க பண்ணையை ஆரம்பிச்சோம். பண்ணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பசுமை விகடன் மூலமா கிடைச்ச ஆடு வளர்ப்பாளர்கள்கிட்ட பேசினோம். நிறைய பண்ணைகளை நேர்ல போய் பார்த்துட்டு வந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருஷம் விஷயங்களை சேகரிச்சுட்டுத்தான் பண்ணையை ஆரம்பிச்சோம்” என்ற பிலால் பண்ணையை சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்...
“இங்க மொத்தம் எட்டு ஏக்கர் இருக்கு. அதுல ஆறு ஏக்கர்ல கோ-4, கோ.எஃப்.எஸ்-29, சூபாபுல், அகத்தி, வேலிமசால், கோ-31 மாதிரியான தீவனப் பயிர்களை பயிர் பண்ணியிருக்கோம். 120 தென்னங்கன்களையும், 700 தேக்கு மரக்கன்களையும் நடவு பண்ணிருக்கோம். அதோட பீநாரி, குமிழ் மரங்கள்ல ஆயிரம் கன்னுகளை நடவு பண்ணியிருக்கோம். தீவனப் பயிர்கள், மரங்கள் எல்லாத்துக்குமே, பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், பழக்காடினு இயற்கை இடுபொருட்களைத்தான் கொடுக்கிறோம். ஸ்பிரிங்லர் மூலமாத்தான் பாசனம் செய்றோம். வாரத்துக்கு ஒரு தடவை இடுபொருட்களையும் பாசனத் தண்ணியிலேயே கலந்து விட்டுடுவோம்.
ஆட்டுப்பண்ணை அமைக்க பேங்க் லோன் வாங்கியிருக்கோம். பண்ணை ஆரம்பிச்சு ரெண்டரை வருஷம் ஆச்சு. 21 அடி அகலம், 120 அடி நீளத்துல பரண் கொட்டகை இருக்கு. 20 அடிக்கு 20 அடி அளவுல உள்ளேயே தடுப்புகள் அமைச்சிருக்கோம். ஆரம்பத்துல ஜமுனாபாரி, தலைச்சேரி, நாட்டு ஆடுகள் எல்லாத்துலயும் கலந்து 80 குட்டிகள் வாங்கிட்டு வந்தோம். அதுல இருந்து குட்டிகளை பெருக்கினோம். பேங்க் லோனுக்கான தவணையை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கட்டணும். அதனால, தவணை சமயத்துல தாய் ஆடுகளை மட்டும் நிப்பாட்டிட்டு மீதியை விற்பனை செஞ்சுடுவோம். போன மாசம் 60 ஆடுகளை விற்பனை செஞ்சோம். இப்போ பட்டியில, 44 பெட்டை ஆடுகள் இருக்கு. அதோட வளர்ந்த கிடா 1, பருவத்துக்கு வராத கிடா 5 இருக்கு. கிட்டத்தட்ட எல்லா பெட்டை ஆடுகளுமே சினையா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல இருந்து வரிசையா ஒவ்வொரு ஆடா குட்டி போட ஆரம்பிச்சுடும்.
தாய் ஆடுகள் எல்லாமே ஒரே வயசுடைய ஆடுகள்ங்கிறதால பருவத்துக்கு வர்றது, சினை பிடிக்கிறது எல்லாமே ஒரே சமயத்துல நடந்துடும். அதனால குட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே வயசுல கிடைக்கும். குட்டிகளை வளர்த்து மொத்தமா விற்பனை செய்ய முடியுது. வியாபாரிகள் இங்கேயே வந்து வாங்கிட்டு போயிடுறாங்க. ‘பசுமை விகடன்’ புத்தகத்துல ‘பசுமைச் சந்தை’ பகுதியில ‘விற்க விரும்புகிறேன்‘ பகுதிக்கு எழுதிப் போட்டிருந்தேன். அதுமூலமா புதுசா பண்ணை வைக்கிறவங்க தாய் ஆடுகளை கேட்டு வர்றாங்க. அவங்களுக்கும் அப்பப்போ விற்பனை செஞ்சுட்டு இருக்கோம்’’ என்ற பிலால் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்...
“இதுவரை மூணுமுறை ஆடுகளை விற்பனை செஞ்சுருக்கோம். ஒவ்வொரு தடவையும் 60 ஆடுகள்னு 180 ஆடுகளை விற்பனை செஞ்சுருக்கோம். உயிர் எடையா ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை செய்றோம். 15 கிலோ எடை வந்த ஆடுகளைத்தான் விற்பனை செய்வோம். அந்த வகையில ஒரு ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போகும். சிலசமயம் பெட்டை ஆடுகளைக் கேக்குறவங்க குட்டியோட கேப்பாங்க. குட்டிகளை 1,000 ரூபாய்னு விலை வெச்சு விற்பனை செய்துடுவோம். அந்த வகையில இதுவரை, 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. ஒரு மாசத்துக்கு பிண்ணாக்கு, மருந்து, அடர் தீவனம்னு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். இந்த ரெண்டரை வருஷத்துல ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. பேங்க் தவணை தனி. எப்படியும் இன்னும் மூணு வருஷத்துக்குள்ள போட்ட பணத்தை முழுசா எடுத்துட முடியும்னு நம்பிக்கை இருக்கு” என்ற பிலால் நிறைவாக,
“பசுந்தீவன சாகுபடிக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தா போதும். ஒரே ஆள் 25 ஆடுகள் வரை பராமரிக்க முடியும். கொட்டில் அமைக்க, தாய் ஆடுகள் வாங்க என்று 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு பண்ணினா, வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கண்டிப்பா லாபம் எடுக்க முடியும்’’ என்று கண்களில் நம்பிக்கை மிளிரச் சொன்னார்.
தொடர்புக்கு,
எஸ்.கே.பிலால் : 78457 86486
இ.கே.சுல்தான் பாட்ஷா: 98428 51604
எஸ்.கே.பிலால் : 78457 86486
இ.கே.சுல்தான் பாட்ஷா: 98428 51604
நான் கற்ற பாடம்!
“ஆரம்பத்துல 80 ஆடுகள் வாங்கினப்போ எல்லாமே குட்டிகள். அதுவுமில்லாம மே மாசக் கடைசியில அந்த ஆடுகளை நாங்க வாங்கிட்டு வந்தோம். வந்த அடுத்த மாசமே பருவமழை ஆரம்பிச்சு மழை பெய்ஞ்சதுல குட்டிகள் குளிர் தாங்காம தவிச்சுடுச்சு. அதுல 16 குட்டிகள் இறந்து போயிடுச்சு. நாங்க ஆடுகளை வாங்கினதும் இன்ஷூரன்ஸ் பண்ணியிருந்ததால பெரியளவுல நஷ்டம் இல்லை. அதுல இருந்து எப்போ ஆடு வாங்கினாலும் உடனே இன்ஷூரன்ஸ் பண்ணிடுவோம். அதோட மத்த ஆட்டுப்பண்ணைகள்ல இருந்து பெரிய ஆடுகளை மட்டும்தான் வாங்குவோம். எக்காரணம் கொண்டும் சந்தையில ஆடு வாங்கவே மாட்டோம்’’ என்கிறார் பிலால்.
இரண்டு ஆண்டுகளுக்கு மூன்று ஈற்று...!
பராமரிப்பு முறைகள் குறித்துப் பேசிய பிலால், “தரையில் இருந்து நாலரை அடி உயரத்துல கிழக்கு மேற்கா, ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு, பரண் அமைச்சிருக்கோம். தாராளமா காத்தோட்டம் கிடைக்கிற மாதிரி அமைச்சுருக்குறதால வெக்கை இருக்காது. கொட்டகையை 6 பாகமா பிரிச்சிருக்கோம். குட்டிகளை அடைக்க தனி தடுப்பு இருக்கு. கழிவுகள் கீழ விழுற மாதிரி கொட்டகையோட தரைப்பகுதியில இடைவெளி இருக்கு. பரணுக்கு கீழே சேகரமாகுற கழிவுகளை அப்பப்போ அள்ளிடுவோம். 6 ஏக்கர்ல பசுந்தீவனம் இருக்குறதால தீவனத்துக்கு பஞ்சமே கிடையாது. அதில்லாம இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறதால சாகுபடி செலவும் குறையுது. ஆடுகளும் ஊட்டமா வளருது.
எல்லா வகை பசுந்தீவனங்களையும் கலந்து அறுத்து எடுத்து அதை பொடிப்பொடியா நறுக்கி, காலையில் 15 கூடை அளவுக்கு ஆடுகளுக்கு கொடுப்போம். மதிய நேரத்துல கொட்டிலைத் திறந்து விட்டுடுவோம். கொட்டிலுக்கு வெளியே கம்பி வலையடைச்சு ஆடுகள் உலாத்துறதுக்கு இடம் விட்டுருக்கோம். அங்க 3 தொட்டிகள்ல பிண்ணாக்கு கலந்த தண்ணி வெச்சுடுவோம். சாயங்காலமா கொட்டில்ல அடைச்சு திரும்பவும் பசுந்தீவனம் கொடுப்போம். கடலைக்கொடி கிடைக்கிற சமயங்கள்ல அதை வாங்கி போர் போட்டு வெச்சுக்குவோம். அதையும் சாயங்காலம் கொடுப்போம். கொட்டகைக்குள்ள தாது உப்பு கட்டிகளைக் கட்டி தொங்க விட்டுட்டா தேவைப்படுற ஆடுகள் அதை நக்கி சாப்பிட்டுக்கும்.
நம்ம இடத்துள்ளேயே இருக்குறதால தொற்றுநோய் எதுவும் வர்றதில்லை. புதுசா ஆடுகளை வாங்கிட்டு வந்தா மட்டும், ஒரு மாசம் தனியா வெச்சிருந்து தடுப்பூசி போட்டு, குடற்புழு நீக்கம் செஞ்சு கொட்டிலுக்குள்ள விடுவோம். அதேமாதிரி ஒவ்வொரு பருவத்திலயும் தவறாம தடுப்பூசி போட்டுடுவோம். அவசர நோய்களுக்கு நானே முதலுதவி செஞ்சுடுவேன். தேவைப்பட்டால் டாக்டரை வரவழைச்சுடுவோம். பெரிய ஆடுகளுக்கு 3 மாசத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம்.
எங்க பண்ணையில ஜமுனாபாரி, தலைச்சேரி நாட்டு ஆடுகளை கலப்பினம் செய்றோம். பெட்டை ஆடுகள் சினைபிடிச்ச ஆறு மாசத்துல குட்டி போடும். குட்டியை ரெண்டு மாசம் வரைக்கும் தாய் ஆட்டோட விடுவோம். அதுக்கப்பறம் தனியா பிரிச்சிடுவோம். பிரிச்ச பத்து, பதினஞ்சு நாட்கள்ல தாய் ஆடு திரும்பவும் பருவத்துக்கு வந்துடும். வெள்ளாடுகள் ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டி ஈனும். ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டுல இருந்து மூணு குட்டிகள் வரை கிடைக்கும். ஆறு மாச வயசுல ஆடுகள் பருவத்துக்கு வரும். வாலை ஆட்டிக்கிட்டே இடைவிடாம கத்துறதை வெச்சும், இனப்பெருக்க உறுப்பில் திரவம் சுரக்கிறதை வெச்சும் பருவத்துக்கு வந்ததைத் தெரிஞ்சுக்கிட்டு கிடாவோட இணை சேர்த்துடுவோம்’’ என்றார்.
Post a Comment