கைகளுக்குக் கச்சிதமான ஆசனங்கள்!!!
'கைகளுக்கு ஆசனமா..!’ என்று சிலர் வியக்கலாம். ஆசனங்கள் அனைத்தும் பொதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப மாற...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_9041.html?m=0
'கைகளுக்கு ஆசனமா..!’ என்று சிலர் வியக்கலாம். ஆசனங்கள்
அனைத்தும் பொதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யும்போது,
பலன்களும் மாறும். கைகளுக்கு வலுவூட்டும் ஆசனங்களில், எல்லோராலும்
செய்யக்கூடிய, வலிமைதரக்கூடிய ஒருசில ஆசனங்கள் மட்டுமே
தேர்வுசெய்துள்ளோம். இந்தத் தொடரில் முன்பு சொன்ன ஆசனங்களைச்
செய்திருந்தால், இந்த ஆசனங்களையும் எளிதில் செய்ய முடியும். மற்றவர்கள்,
முன்அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே, செய்ய வேண்டும்.
கைகளுக்கான ஆசனங்கள், நரம்புகளை வலுவாக்கக்கூடியவை.
அதனால் உடலும் மனமும் கூடுதல் ஆற்றல் பெறும். இந்தப் பயிற்சிக்கும் முறையான
அணுகுமுறை உள்ளது. எப்படித் தொடங்கி எப்படிச் செய்ய வேண்டும், கடுமையான
ஆசனத்தை எப்படி அடைவது, செய்து முடித்த பின் எந்த மாற்று ஆசனம் அதன்
பாதகமான அம்சத்தை நீக்கக்கூடியது என்றெல்லாம் இந்தப் பயிற்சியில்
சொல்லப்படும்.
சக்கரவாகாசனம்
கால் முட்டிகளுக்கு இடையில் சிறிது இடைவெளி
இருக்கட்டும். முட்டிபோட்டு உடலை முன்புறமாகக் கொண்டுசென்று, கைகளை நீட்டி,
தலையைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் இருந்து, மூச்சை
உள்ளிழுத்து, கைகளைத் தரையில் ஊன்றியபடி, உடலை மேல்நோக்கி முன்னுக்குக்
கொண்டுசெல்ல வேண்டும். அதேநேரம், ஒரு காலை மேல்நோக்கி நேராகத் தூக்க
வேண்டும். முதுகு லேசாக வளைந்து இருக்கும். பார்வை சற்று மேல்நோக்கி
இருக்கும். இதுபோல் கால்களை மாற்றி மாற்றி இருபக்கமும் ஆறு முறை செய்ய
வேண்டும்.
பலன்கள்: முதுகெலும்பு நன்கு பின்புறம் வளையும். மார்பு
விரிவடையும். கீழ் முதுகு நன்றாக வேலை செய்யும். கால், கணுக்கால்,
கட்டைவிரல் நெகிழ்வுத்தன்மை பெறும். மணிக்கட்டுகள் வலுவடையும். கைகள்
பலம்பெறும். இடுப்பு நெகிழ்வுத்தன்மை பெறும். இதைச் செய்தாலே பிற ஆசனங்கள்
செய்ய, உடல் தயாராகிவிடும்.
சதுரங்கதண்டாசனம் (சூரிய நமஸ்காரத்தில் வரும் ஆசனம் இது)
தொப்புள் பகுதி வரை உள்ள உடலின் முன்பகுதி நன்கு
வளைந்து மேல்நோக்கிப் பார்ப்பதுபோல இருக்க வேண்டும். பார்வை நேராக
இருக்கும். கால்களின் கட்டைவிரல்கள் தரையில் பதிந்து கால்களின் எடையைத்
தாங்கியிருக்கும். இந்த நிலையில், மூச்சை வெளியேவிட்டபடி மேல் உடலை,
தரைக்குச் சமமாகக் கொண்டுசெல்ல வேண்டும். உடலின் எடை இரு கைகளிலும் கால்
விரல்களிலும் இருக்கும். சிறிது நேரம் இந்த நிலையில் இருக்கலாம். பிறகு,
மெள்ள நேரத்தைக் கூட்ட முயலலாம்.
பலன்கள்: கைகளும், தோள்பட்டையும் வலிமை பெறும். வயிற்றுப் பகுதி பலம் அடையும். மனது ஒருநிலைப்படும். நரம்புகள் வலுப்பெறும்.
வசிஸ்டாசனம்
கைகள் மற்றும் கால்களைத் தரையில் ஊன்றி, ஆங்கில 'வி’
கவிழ்ந்த நிலையில் இருப்பதுபோன்று உடலை உயர்த்த வேண்டும். இது
அதோமுகஸ்வானாசனம். இந்த நிலையில் இருந்து, மெள்ள உடலை மேல் நோக்கிக்
கொண்டுசென்று, ஒரு கையை மேல் புறமாக உயர்த்த வேண்டும். மற்றொரு கையில்
உடலின் எடை அதிகரிக்கும். ஒரு கால் பாதத்தின் மேல் மற்றொரு பாதம்
ஏறியிருக்க வேண்டும். இடுப்புப் பகுதி முடிந்த வரை மேலே தூக்கி, மேலே
உயர்த்தப்பட்ட உள்ளங்கையைப் பார்த்தபடி இருக்க வேண்டும். இதுபோல் ஆறு முறை
செய்யவேண்டும்.
பலன்கள்: கைகள் நன்கு வலுப்பெறும். தோள்கள் பலம்
கூடும். கழுத்துப் பகுதி மேல் நோக்கி இருப்பதாலும், இடுப்பு நன்றாக மேலே
தூக்கப்பட்டு இறங்குவதாலும் நெகிழ்வுத்தன்மை பெறுகின்றன. கவனம்
அதிகரிக்கும். கால்கள் ஓரளவு வலுப்பெறும்.
Post a Comment