கால்களுக்கு வலுவூட்டும் ஆசனங்கள்! --- ஆசனம்,
யோகா பயிற்சியில் ஆர்வத்தோடும், தேடலோடும் ஒருவர் நுழைந்துவிட்டால், பல்வேறு அதிசயங்களை அறியமுடியும். ஆசனத்தில் ...
https://pettagum.blogspot.com/2013/10/blog-post.html?m=0
யோகா பயிற்சியில் ஆர்வத்தோடும், தேடலோடும் ஒருவர்
நுழைந்துவிட்டால், பல்வேறு அதிசயங்களை அறியமுடியும். ஆசனத்தில் ஆழமாகப்
போகும்போது அது எத்தனைவிதமானப் பலன்களைத் தருகிறது என்பதை உள்ளார்ந்து உணர
முடியும்.
இதுவரை பெரும்பாலும் எளிய ஆசனங்களைக்கொண்டு, மாணவர்கள்,
பெண்கள், அலுவலகம் செல்பவர்கள் எப்படியெல்லாம் பயன்பெறலாம் என்பதைப்
பார்த்தோம். இப்போது சற்று கடினமான ஆசனங்களைக்கொண்டு, ஓர் குறிப்பிட்ட
அம்சத்தில் வேலை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தொடர்ந்து ஆசனம்,
உடற்பயிற்சி, ஜிம், விளையாட்டு, நடனம் என்று இருப்பவர்கள், கால்களை
வலுவாக்கும் ஆசனங்களைச் செய்வதில் பிரச்னை இருக்காது. இந்தப் பயிற்சிக்கு
கவனமும், உரிய ஆலோசனையும் தேவை.
தாடாசனம்
இரண்டு பாதங்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கைகள்
உடலை ஒட்டி இருக்கட்டும். நேராக நிற்கிறீர்கள். தலை சற்றுக் கீழ்நோக்கி
இருக்கிறது. இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கைகளை
பக்கவாட்டில் உயர்த்தவும். அதேநேரம் இரு குதிகால்களையும் மேலே உயர்த்தவும்.
கைவிரல்களைப் பின்னி மேல்புறமாக நகர்த்தவும். இப்போது உடலின் முழு எடையும்
கால்விரல்களில் இருக்கும். உடலும் நன்கு நீட்டப்பட்டிருக்கும். ஓரிரு
விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி கைகளையும், குதிகால்களையும்
பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இவ்வாறு ஆறுமுறை செய்ய வேண்டும்.
பலன்கள்: உடலின் அனைத்துத் தசைகளும் நன்கு
இழுக்கப்பட்டு உற்சாகம் பெறுகும். முதுகெலும்பு லேசாக வளைந்து சக்தி
அதிகரிக்கும். கணுக்கால்கள், கெண்டைச் சதைகள், தோள்பட்டைத் தசைகள்
கூடுதலாக இழுக்கப்பட்டுத் தளர்வடையும். உள் மூச்சும், வெளிமூச்சும்
அதிகமாகும். மொத்தத்தில் புத்துணர்ச்சி பொங்கும்!
பகீரதாசனம்
எடை இருகால்களிலும் சமமாக இருக்கும்படி இருகால்களையும்
ஒன்றாக வைத்துக்கொள்ளவும். பார்வை நேராக இருக்கட்டும். கைகள் உடலை ஒட்டி
இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையிலிருந்து ஒரு காலை மடித்து, குதிகாலை இரு
தொடைகளுக்கு இடையில் மேல்பகுதியில் வைக்கவும். பாதம் ஒரு பக்கத்தொடையில்
நன்கு அழுத்தமாகப் பதிந்திருக்கும். நிலையைச் சரிசெய்துகொண்டபின், மூச்சை
உள்ளிழுத்தவாறு இரு கைகளையும், குதிகாலையும் மேல்நோக்கி உயர்த்தவும். கைகள்
தலைக்குமேல் சென்று இணையும். முழு எடையும் ஒருகால் விரல்களில் இருக்கும்.
மூச்சை வெளியேவிட்டுக்கொண்டே கைகளையும், குதிகாலையும் கீழிறக்கி பழைய
நிலைக்கு வரவும். இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் ஆறு முறை செய்யவேண்டும்.
பலன்கள்: கால்கள் வலுவடையும். கணுக்கால், கெண்டைச் சதைகள் நன்கு பலம் பெறும். மனம் ஒருநிலைபட உதவும். கவனம் அதிகரிக்கும்.
ஏகபாத உத்தானாசனம்
இருகால்களையும் ஒன்றாக வைத்து நேராக நிற்கவும். மூச்சை
உள்ளிழுத்துக்கொண்டே இரு கைகளையும் முன்புறமாக மேலே தூக்கவும். ஓரிரு
விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி கைகளை முன்புறமாக உடலோடு
கீழே இறக்கவும். வலதுகாலைப் பின்புறமாக மேலே உயர்த்தவும். இருகைகளையும்
இடது பாதத்தின் பக்கங்களில் வைக்கவும். தலை முட்டியைத் தொடலாம். வலது கால்
முடிந்தவரை மேலே போகலாம். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை
உள்ளிழுத்துக்கொண்டே பழையநிலைக்கு வரவும். மூச்சை வெளியேவிட்டுக்கொண்டே
கைகளை மட்டும் கீழிறக்கவும். இதுபோல் ஆறு முறை இரு பக்கமும் செய்யவும்.
பலன்கள்: கால்கள் பலமடையும். முழு உடலையும் கட்டுக்குள்
கொண்டுவர முயற்சிக்கலாம். வயிறு நன்கு உள்ளிழுக்கப்பட்டுப் பலனடையும்.
முதுகெலும்பு பலமாகும். கைகளில் இறுக்கம் குறையும்.
Post a Comment