பஞ்சவர்ணப் பொங்கல் அம்மா ரெசிபி --- சமையல் குறிப்புகள்,
''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என் சமையல்தான் ரொம்பப் பிடிக்கும். அதிலும் சத்து நிறை...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_4946.html?m=0
''81 வயதாகும் என் அம்மாவுக்கும், என் கணவருக்கும் என்
சமையல்தான் ரொம்பப் பிடிக்கும். அதிலும் சத்து நிறைந்த சிறு, குறு
தானியங்களைக்கொண்டு நான் செய்யும் பஞ்சவர்ணப் பொங்கலை விரும்பிச்
சாப்பிடுவார்கள். எளிதில் ஜீரணமாகும். சாதாரணப் பொங்கலைவிட, அதிகச்
சுவையுடன் இருப்பதால், நெய் தேவைப்பட்டால் மட்டுமே சேர்த்துக்
கொள்ளலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, நெய்யில் முந்திரியை
வறுத்துச் செய்து தருவேன்.
தினமுமே சிறு தானியங்களில், காலையில் தினைக் கஞ்சி.
மத்தியானம் அரிசியுடன் வரகு சேர்த்த சமையல். சாயங்காலம், அரிசி கறுப்பு
உளுந்துடன், கோதுமை, ராகி மாவுகளைக் கலந்து தோசை செய்வேன். வீட்டில்
இருக்கும் வயதானவர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுதான் காரணம்.'' -
சிலாகித்துச் சொல்லும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி மோகன், பஞ்சவர்ணப்
பொங்கல் செய்வது பற்றிச் சொல்கிறார்.
தேவையானவை: தினை, வரகு, அரிசிக் குருணை, கோதுமை ரவை,
பாசிப் பருப்பு இவற்றைச் சம அளவு கலந்து அதில், ஒரு தம்ளர் அளவுக்கு
எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சித்
துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு
டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு
சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தானியக் கலவையை வெறும் கடாயில் லேசாக வாசனை
வரும் வரை வறுக்கவும். பிறகு சிறிது தண்ணீர் விட்டுக் களைந்து
சுத்தம்செய்து எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய
வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு இஞ்சி, சீரகம், பெருங்காயம்,
கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, கடைசியில் மிளகுத் தூளை லேசாக
வறுக்கவும். வேகவைத்த தானியக் கலவையில் இதைச் சேர்த்து சூடாகப்
பரிமாறவும்.
சித்த மருத்துவர் கண்ணன்: புரதம், நார்ச் சத்து, மாவுச்
சத்து, தாது உப்புகள் சிறு குறு தானியங்களில் நிறைந்து இருப்பதால், உடலில்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் வலுவாகும். உடல் பருமனைக்
குறைக்கும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை
நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஊட்டச் சத்துக் குறைபாடின்றி, உடல் நன்றாக
வலுவடையும்.
Post a Comment