தேவையானவை: கோப்தா செய்ய; கடலைப்பருப்பு - அரை கப், துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கிரேவிக்கு: துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோஃப்தாவுக்கு கொடுத்துள்ளவற்றில் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கிரேவி: துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். எண்ணெய், நெய்யை சேர்த்து காய வைத்து அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி, மிளகாய்த்தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கியதும், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து சூடாகப் பரிமாறவும். சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக் கொள்ளவும், பாசுமதி சாதத்தில் கலந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். |
Post a Comment