கன்சல்டிங் ரூம்!
ராதிகா சுரேந்திரன், திருநெல்வேலி. “என் மகளுக்கு 10 வயது. கடந்த சில மாதங்களாக பேன் தொல்லையால் அவதிப்படுகிறார். வழக்கமான ஷாம்புக்கள் ...
https://pettagum.blogspot.com/2017/02/blog-post_85.html
“என் மகளுக்கு 10 வயது. கடந்த சில மாதங்களாக பேன் தொல்லையால் அவதிப்படுகிறார். வழக்கமான ஷாம்புக்கள் பயன்படுத்தியும் தீர்வு இல்லை. பேன் எதனால் உருவாகிறது? தீர்வு என்ன?”
டாக்டர் சந்தன், சரும மருத்துவர்
“சுகாதாரமான முறையில் தலைமுடியைப் பராமரிக்காமல் விட்டால் பேன்கள் பெருகும். பொதுவாக, பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது. பேன் தொல்லை உள்ளவருடன் நெருக்கமாக அமர்வது, அவரின் உடைகள், சீப்பை பயன்படுத்துவது போன்றவை மூலம் பரவுகிறது. பேன் தலையில் உள்ளதன் முக்கியமான அறிகுறி தலையைச் சொரிந்துகொண்டே இருப்பதுதான். பேன்கள் மூன்று நாட்கள் மட்டுமே உயிர் வாழும். ஏழு நாட்களில் முட்டைகள் பொரிக்கும். கூந்தலின் அடித்தண்டுப் பகுதிகளில் இவை ஒட்டிக்கொண்டும் ஊர்ந்துகொண்டும் இருக்கும்.
ஐவர்மெக்டின் (Ivermectin), பைரித்திரின் (Pyrethrin), பர்மெத்ரின் (Permethrin) உள்ள ஷாம்புக்களை சரும மருத்துவர் பரிந்துரையோடு பயன்படுத்தலாம். லின்டேன் (Lindane) கலந்த ஷாம்புக்களை குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது.
பேன்களுக்கான ஷாம்பு பயன்படுத்தும்போது அதில் குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். கண்ணிலும் மூக்கிலும்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சருமத்தில் எரிச்சல், நமைச்சல் போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக ஷாம்பு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரை நாட வேண்டும். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பேன் ஷாம்புக்களைப் பயன்படுத்தக்கூடாது.
பேன்களை நீக்கிய பிறகு, முட்டைகளையும் நீக்கினால்தான் முழுமையாகத் தடுக்க முடியும். தலையைச் சுத்தம் செய்தபின் தலையணை உறை, படுக்கை விரிப்புகளைத் துவைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேன் உள்ளது என்றால், ஒரே நேரத்தில் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டால், பேன் உள்ளவர்களிடம் இருந்து, மற்றவருக்குப் பரவும் நிலை ஏற்படலாம்.”
ஆர்.தவசிமுத்து, பொள்ளாச்சி.
“என் மகனுக்கு 14 வயதாகிறது. கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி பசி எடுக்கிறது என்கிறான். சாப்பிடும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எதையாவது கொறித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பழக்கத்தில் இருந்து அவனை எவ்வாறு மீட்டெடுப்பது?”
டாக்டர் கார்த்திக் சூர்யா, குழந்தைகள் நல மருத்துவர்
“பொதுவாக குழந்தைகள் டீன் ஏஜ் எனப்படும் பதின்பருவத்தில் காலடி எடுத்துவைக்கும்போது, அவர்களது உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறுகின்றன.
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப கலோரிகள் தேவை அதிகரிக்கும். இதன் விளைவாகப் பசி உணர்வு அதிகமாகத் தூண்டப்படும். இந்த வயதில், அதிகமான பசி எடுப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஓடியாடி விளையாடி கலோரிகளை எரிக்க வேண்டியதும் அவசியம்.
கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதைக் கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரக் கூடாது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை, அவர் அதீத உடற்பருமன் கொண்டவராக இருந்தால், குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி நிபுணரிடம் காட்ட வேண்டும். பரிசோதனைக்குப் பின்னர், தேவைப்பட்டால் நொறுக்குத் தீனிகள் சாப்பிடத் தூண்டும் உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகளை மருத்துவர் வழங்குவார்.
பசி எடுக்கும்போது, சிறுதானியங்கள், நட்ஸ், பயறு வகைகள் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை அளவாகச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதும் சிறந்ததே.”
ரா.பத்மாவதி, கோவில்பட்டி.
“எனக்கு வயது 23. மாதவிடாய் சமயத்தின்போதும் முடிந்த பின்னும் அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது. அது எதனால்? வலியைப் போக்க என்ன செய்யலாம்?”
டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர்
“மாதவிடாயின்போது சிலருக்கு அதிக ரத்தப்போக்கின் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் இதுபோன்று வலி ஏற்படும். மேலும், வயிற்றில் உள்ள புழுக்கள், உண்ட உணவு நீண்ட நேரம் வயிற்றில் இருத்தல், வாய்வுத்தொல்லை, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களாலும், மாதவிலக்குச் சுழற்சி முடிந்த பின்னும் வலி தொடரும். இதனால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய அவ்வப்போது தண்ணீரைத் தொடர்ந்து குடிக்கலாம்.
மாதவிடாயின்போது சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். திரவமாக எடுத்துக்கொள்வது நல்லது. வயிற்றில் ஹாட் அல்லது கூல் பேக் வைத்துக்கொள்ளலாம். இது வலியைச் சற்று குறைக்கும். வலி தொடர்ந்து இருப்பின், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்படி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.”
Post a Comment