நாட்டுப்புற மருத்துவம்!

 நாட்டுப்புற மருத்துவம் - வகைப்பாடு நாட்டுப்புற மருத்துவம் காலந்தோறும் தன்நிலையில் வளர்ச்சி பெற்று வந்த...

 நாட்டுப்புற மருத்துவம் - வகைப்பாடு

நாட்டுப்புற மருத்துவம் காலந்தோறும் தன்நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இந்நாட்டுப்புற மருத்துவ முறைகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் காணலாம்.

நாட்டுப்புற மருத்துவம்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
மந்திர மருத்துவம்
கை மருத்துவம் குழந்தை மருத்துவம் பொது மருத்துவம்
 
1 இயற்கை மருத்துவம்

நாட்டுப்புற மருத்துவம் என்பது நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் நம்பிக்கை சார்ந்த இயற்கை மருத்துவத்தைக் குறிப்பதாகும். ஆதி கால மனிதனின் மருத்துவ அறிவிற்கு இயற்கை மருத்துவமே சான்றாக விளங்குகிறது. நாட்டுப்புற மருத்துவத்திற்கு இயற்கைப் பொருள்களே ஆதாரமாகக் கொள்ளப் படுகின்றன. இந்த இயற்கைப் பொருள்களைக் கொண்டு மருந்துகள் தயாரித்து உட்கொள்வதன் மூலமும் பூசிக்கொள்வதன் வாயிலாகவும் நோய்கள் போக்கப்படும் முறை இயற்கை மருத்துவ முறையாகும்.

உணவு

நாட்டுப்புற மருத்துவத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இயற்கைப் பொருள்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாகவே உட்கொள்வதைக் காணலாம். கீரை வகைகள், தண்டுகள், கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம் போன்ற பொருட்களை இயல்பாகவே அம்மா தினசரி சமையலில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமே பயன்படுத்தப் படுகின்றன.

கை மருத்துவம்

“பாட்டி ஏங் குழந்தைக்கு அடிக்கடி நீரா வெளிய போகுது”


“அப்பிடியா, ரெண்டு சொட்டு தேனை எடுத்துக் குழந்தையோட நாக்குல தடவிவிடு. நின்று போகும்”.


“பாட்டி...... பாட்டி ஏங் குழந்தை சாப்பிடவே மாட்டீங்குது. அடிக்கடி அழுதுக்கிட்டே இருக்குது. என்னா செய்றது பாட்டி?


“வயித்தில அஜீரணக் கோளாறு இருக்கும். வெத்தலையக் கிள்ளி வாயில போட்டு மெல்லச் சொல்லு, சரியாப் போயிடும்”.


“பாட்டி. ஏம் மகனுக்குச் சளிப் பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா ஒழுகுது”.


“அப்படியா, நொச்சி இலைகளைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா வேக வச்சு நீராவி பிடிக்கச் சொல்லு. சளி ஓடிப் போயிடும்”.


மேற்கூறிய உரையாடல்களை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ நீங்கள் கேட்டிருக்கலாம். இதுதான் கை மருந்து. கை வைத்தியம், பச்சிலை வைத்தியம் என்ற பெயர்களில் நாட்டுப்புற மக்களால் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ முறைகள் முன்னோரிடமிருந்து மரபு வழியாகப் பயிலப்பட்டு மேற்கொள்ளப் படுபவையாகும். வீட்டிற்கு அருகில் எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. கை மருத்துவத்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரையோ, பிற மருத்துவ முறைகளையோ நாடுவர்.

குழந்தை மருத்துவம்

குழந்தைகளுக்கான நோய்களில் பெரும்பாலானவை கை மருத்துவத்திலேயே குணப்படுத்தப் படுகின்றன. குழந்தை மருத்துவத்தில் தாய்ப்பால் மிகவும் சிறப்பிற்கு உரியதாகும். குழந்தை பிறந்து ஓராண்டிற்குத் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கூடும் என்பது மருத்துவ உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தாய்ப்பால், தேனோடு கலந்து கொடுக்கும் வழக்கத்தை நாட்டுப்புறங்களில் காணலாம்.


குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் குறைபாடுகள் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், மந்தாரம் (சீரணக் கோளாறு) போன்றவையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைப் போக்குவதற்குத் தேங்காய் எண்ணெயில் சூடத்தைப்(கற்பூரம்) போட்டுக் காய்ச்சிக் காலில் தேய்ப்பது, மஞ்சளையும் வெள்ளைப் பூண்டையும் சேர்த்துத் தட்டிச் சாறெடுத்து, அதனைச் சூடு செய்து நெற்றியில் தேய்ப்பது போன்ற மருத்துவ முறைகள் கையாளப் படுகின்றன.


குழந்தை தலைகுப்புற விழுந்தாலோ, குழந்தையைத் தலைகீழாகத் தூக்கினாலோ குடல் இடம் மாறிவிடும். இதனைக் குடல் ஏற்றம் என்பர். இதனால் குழந்தைக்கு வயிற்று உளைச்சலும் பேதியும் ஏற்படும். தொடர்ந்து அழுது கொண்டும் இருக்கும். இந்நிலையில் குடல் தட்டுதல் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். அதாவது குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்து வயிற்றுப் பகுதியைத் தட்டி விடுவர். அவ்வாறு செய்தவுடன் குடல் சரியாகிவிடும். அழுகையும் நின்றுவிடும்.


உணவுப் பொருட்களில் சில வெப்பத்தையும் சில குளர்ச்சியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டவையாகும். இத்தகைய உணவுப் பொருட்களைச் சீராகச் சேர்த்துக் கொடுப்பதன் மூலமாகக் குழந்தைகளை நோய்களிலிருந்து காக்கலாம்; நலம் சேர்க்கலாம்.

விசக்கடி மருத்துவம்

இயற்கை சூழ்ந்த பகுதிகளில் தங்களின் வாழிடத்தையும் வேளாண் முறைகளையும் கொண்டவர்கள் நாட்டுப்புற மக்கள். இவர்கள் வாழும் பகுதிகளில் விசம்(நஞ்சு) கொண்ட பூச்சிகளும் ஊர்வனவும் உயிர் வாழும். இத்தகைய விசப் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவற்றிற்கான மருந்துகளை நாட்டுப்புற மக்கள் அறிந்து வைத்துள்ளனர். எப்படிப்பட்ட விசத்தையும் முறிக்கும் தன்மையுள்ள மருந்துகளைத் தங்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருப்பதைக் காணலாம்.


எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்கள், குறைந்த செலவு, பூரண நிவாரணம், உடனடித் தீர்வு போன்றவை இயற்கை மருத்துவத்தின் சிறப்பு என்பதை இப்பொழுது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா?

பொது மருத்துவம்

எல்லா வயதினருக்கும் உரிய கை மருத்துவ முறைகளே பொது மருத்துவம் என்ற பெயரில் இங்கு விளக்கப்படுகின்றன. நோய்கள் தோன்றுவதற்கான காரணங்கள் பலவாகும். நோய்களுக்கான காரணங்களும் அறிகுறிகளுமே அந்நோய்களுக்கான மருந்தைத் தயார் செய்வதற்கு உதவுகின்றன. பொதுவாக நோய்கள் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. அவை சீரற்ற உணவு முறை, தட்ப வெப்பநிலை மாற்றம், நீர் மாசுபாடு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையாகும்.


இவற்றின் பொருட்டு மனிதனுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மருந்துகள் மேற்பூச்சு மருந்துகளாகவும் (உடல் பகுதிகளில் தடவப்படுவதின் வாயிலாக நோயைப் போக்குவன) உள் மருந்துகளாகவும் (மருந்துகளை உட்கொள்வதன் வாயிலாக நோயைப் போக்குவன) பயன்படுத்தப் படுகின்றன. சில நோய்களுக்கு மேற்பூச்சு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில நோய்கள் உள்மருந்துகளினால் மட்டுமே குணமாகும். இம்மருந்துகள் பச்சையாகவோ, சாறு எடுத்தோ, நீர், பால், தேன் இவற்றுடன் கலந்து காய்ச்சிய நிலையிலோ நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும்.

2 நோய்களும் நாட்டுப்புற மருத்துவமும்

தெளிவிற்காக மனிதர்களுக்கு ஏற்படும் சில நோய்களையும் அவற்றைப் போக்குவதற்கான நாட்டுப்புற மருத்துவ முறைகளையும் இங்குக் காணலாம். இது உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

வெப்பு நோய்கள்

மனித உடலில் தோன்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் மிகையான குளர்ச்சியினாலுமே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. அதிகப்படியான உடல் வெப்பத்தினைப் போக்கக் கீழ்வரும் மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வெப்பம் தொடர்பான நோய்க்குக் குளிர்ச்சியான மருந்தும் (உடல் சூட்டைத் தவிர்க்க மோர் குடிப்பது) குளிர்ச்சி தொடர்பான நோய்களுக்குச் சூடான மருந்தும் கொடுப்பது (சளி பிடித்தால் ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் பொது முறையாகும்.


கோடை காலங்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்பட்டால் அதனை அம்மைக் கட்டு(mumbs) என்று கூறுவர். வீக்கமுள்ள பகுதியில் வேப்பிலையோடு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் அம்மைக் கட்டு பூரண குணமாகிவிடும். இதேபோல் அம்மை நோய் கண்டவர்களுக்கு உடலில் வேப்பிலை தடவப்படும். அம்மைக் கொப்புளங்கள் வற்றிய நிலையில் வேப்பிலையுடன் மஞ்சள் அரைத்துப் பூச நோய் பூரண குணமாகும்.


கோடைகாலத்தில் தோன்றும் மற்றொரு நோய் அக்கி என்பதாகும். அக்கி உள்ளவர்களுக்குச் சிறிய, பெரிய கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவிக் காணப்படும். இதற்குச் செந்நிற மண் சாந்தினால் அக்கி உள்ள இடங்களில் படம் வரையப்படும். இவ்வாறு ஒருவாரம் செய்தால் அக்கி மறைந்துவிடும். ஏனெனில் காவி மண் நீரை உறிஞ்சி வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் உள்ள அசுத்த நீர் செம்மண்ணால் நீக்கப்பட்டு நோய் குணமாகின்றது.


கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டி என்பதும் உடல் வெப்பத்தினால் உண்டாவதாகும். இதற்குக் கறிவேப்பிலையைப் பாலுடன் கலந்து அரைத்துக் கட்டியின் மீது தடவினாலோ, உமிழ்நீரைக் கட்டியின் மீது தடவினாலோ, கைவிரலை உள்ளங்கையில் தேய்த்து மிதமான சூட்டில் கட்டியின் மீது தொடர்ந்து வைத்தாலோ கண்கட்டி நீங்கிவிடும்.


உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும் எண்ணெய் வகைகளைப் பூசிக் கொள்வதும் எண்ணெய்க் குளியல் செய்வதும் களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும் அருவி, நீர்நிலைகளில் அதிக நேரம் நீராடுவதும் நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் வழக்கமாகும்.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் வெந்நீரில் உப்புப் போட்டுக் குடித்தால், மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கசாயம் செய்து குடித்தால், தேயிலை நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.

கபம்

மிதமிஞ்சிய சளியாலும் சளி கெட்டிப் படுவதாலும் ஏற்படும் நோய் இதுவாகும். இது கோழை கட்டுதல் என்றும் கூறப்படும். வெள்ளைப் பூண்டை அரைத்து ஒரு துணியில் கட்டி அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால் கபம் நீங்கும். மேலும் வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேகவைத்துக் கடைந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும் குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும் இந்நோய் குணமாகிவிடும்.

இருமல்

சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்துத் தொண்டையில் பூசினாலோ, பனைக் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ இருமல் நின்றுவிடும்.

வாதநோய்

பெருங்காயம், கடுகு, நல்ல மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், வெள்ளைப் பூண்டு இவற்றைச் சேர்த்து அரைத்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் வாத நோய்கள் தீரும்.

மூல நோய்

மூல நோய் உள்ளவர்கள் தேங்காய் நாரின் சாறெடுத்துக் குழந்தைகளின் சிறுநீரில் சேர்த்து, மூலத்தில் தேய்த்தால் குணமாகும். பசும் பாலை, ஆடு அல்லது மாட்டுக் கொழுப்பில் குழைத்து மூலத்தில் தடவிவந்தாலும் மூல நோய் குணமாகும்.

கால் வீக்கம்

கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம் பழச்சாறு இவற்றைச்சேர்த்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோய்க்கு இன்றுவரை நாட்டுப்புற மருத்துவமே சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி (வேர் தவிர்த்து) இலையை அரைத்துப் பசும்பாலுடன் சேர்த்துத் தொடர்ந்து மூன்று வேளை (வாரம் ஒருமுறை) குடித்து வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு வேரை நீரில் போட்டுக் காய்ச்சிக் கசாயம் செய்து கசாயத்துடன் பசும்பாலும் சர்க்கரையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் தீரும். கொன்றை இலை, கொன்றை இலைக் கொழுந்து இவைகளை நீர்வீட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தாலும் மலச்சிக்கல் தீரும்.

இளநரை

இளைஞர்களை மனம் நோகச் செய்வது இளநரையாகும். உடலில் பித்தம் அதிகமாவதால் இளநரை ஏற்படுகிறது. இதற்கு நெல்லிச் சாறு, செஞ்சந்தனம். மகிழம்பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால் பித்தம் தணியும். இளநரையும் நீங்கும். கண்ணிற்கும் குளிர்ச்சி உண்டாகும்.

தாய்ப்பால் குறைவு

பிள்ளை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரக்கக் காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டினாலோ அல்லது வெள்ளரி விதையை அரைத்து மார்பில் பூசினாலோ அல்லது ஆலம் விழுது. ஆலம் விதைகளை அரைத்துப் பசும்பாலில் கலந்து காய்ச்சிக் குடித்தாலோ நன்கு பால் சுரக்கும்.

3 வலிகளும் நாட்டுப்புற மருத்துவமும்

மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு வகையான உடல் வலிகளுக்கு நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய வழிகளும் மருத்துவ முறைகளும் வழக்கத்தில் உள்ளன.

தலைவலி

தலையும் நோவும் தனக்கு வந்தால் தெரியும் என்பது பழமொழி. தலைவலி சிலருக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு எப்பொழுதாவது வரும். இத்தலைவலியைப் போக்க, செஞ்சந்தனக் கட்டையை உரைத்து நெற்றியில் பூசுவர். கரிசலாங் கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணெய்யில் சேர்த்து மூக்கிலிடுவர். மேலும் கடுமையான இருமலும் தலைவலியும் சளியும் இருந்தால் காட்டுப் பகுதியில் மண்டிக் கிடக்கும் நொச்சி இலைகளைப் பறித்து வந்து மண்சட்டியில் போட்டு நீர் விட்டுக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் நீராவியை மூக்கு வழியாக உள்ளே இழுத்து ஆவி பிடிக்கும் முறையைப் பின்பற்றுவர். தலைவலிக்கு இதுபோன்ற எளிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு நலம் பெறலாம்.

காது வலி

ஐம்புலன்களில் காது மிக முக்கியமான உறுப்பாகும். காதில் ஏற்படும் வலியினைப் போக்கத் தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது உள்ளியைப் (வெங்காயம்) பிழிந்து காதில் விட்டாலோ காது வலி உடனடியாகக் குணமாகும்.

பல் வலி

பற்களில் ஏற்படும் வலியினைப் போக்க வேப்பிலைக் கொழுந்து, மஞ்சள், திருநீறு இவற்றைச் சேர்த்து அரைத்துக் கன்னத்தில் பூசினால் பல் வலி மற்றும் வீக்கம் குறையும். புழு விழுந்த பல்லில் சூடம் அல்லது கிராம்பு வைத்தால் குணமாகும். மிளகு, உப்பு ஆகியவற்றை அரைத்துப் பல்லில் தேய்த்தாலும் வலி நீங்கும்.

வயிற்று வலி

வயிற்று வலிக்கான காரணம் மிகையான உணவும் உண்ட உணவு செரிக்காமையுமே ஆகும். வெற்றிலையில் உப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும். வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கும். உப்பு வாயுவை அகற்றும். இரண்டும் கலந்து உருவாகும் உமிழ்நீர்ப் பெருக்கால் செரிமானம் சரியாகும். இதனால் வயிற்று வலி தீரும்.

மூட்டு விலகுதலும் எலும்பு முறிவும்

நாட்டுப்புற மருத்துவ முறையில் மூட்டு விலகுதல், எலும்பு முறிவு போன்ற சிக்கலான நோய்களுக்குத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் முறை இன்றும் இருந்து வருகிறது. இதேபோல் கழுத்து, இடுப்பு, கால் பகுதிகளில் ஏற்படும் நரம்புச் சுளுக்குகளுக்கும் நரம்புகளை நீவி விட்டுச் சுளுக்கெடுக்கும் முறையும் காணப்படுகிறது. எலும்பு, நரம்பு தொடர்பான சிகிச்சை முறைகளை ‘முரட்டு வைத்தியம்’ என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Related

நாட்டு வைத்தியம் 7553136036723372425

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item