சோளப் பாயசம் -- கேழ்வரகு (ராகி) பகோடா -- சிறுதானிய சமையல் !
சிறுதானிய சமையல் ஒ ரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்ற...
https://pettagum.blogspot.com/2015/02/blog-post_90.html
சிறுதானிய சமையல்
ஒரு
காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன.
இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது
அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில்,
ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை,
பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக
மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு
ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது...
இந்த சமையல் பகுதி!
இந்த இதழில் பரிமாறுபவர்... சந்தியா
சோளப் பாயசம்
தேவையானப் பொருட்கள்:
நாட்டுச் சோளம் - 2 கப்
பார்லி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிதளவு
பனை சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை:
நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி
நேரம் ஊறவைத்து, நீர் சேர்த்து மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும். பிறகு,
அரைத்த பார்லி மற்றும் நாட்டுச் சோளத்தை, பெரிய கண்ணுள்ள வடிகட்டியில்
வடிகட்டினால், அதிலுள்ள சக்கைகள் நீங்கி விடும். பிறகு அந்தக் கலவையில் பனை
சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கொதிக்க
வைக்கவும். கேசரி பவுடர் சேர்த்து, திரவ நிலை அடைந்தவுடன் இறக்கி, சூடாகப்
பரிமாறவும்.
கேழ்வரகு (ராகி) பகோடா
தேவையானப் பொருட்கள்:
கடலை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - ஒரு கப்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் - 2 கப்
தேவையான அளவு வெங்காயம், பச்சைமிளகாய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், உப்பு, நெய்,
நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் உடன் சிறிது நீர்
சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். பிறகு, கொதிக்கும் எண்ணெயில் போட்டு,
பொன்நிறம் வரும்வரை பொரித்தெடுத்தால்... ராகி பகோடா ரெடி.
''கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு!''
சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
''கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோ
பிரமாதமா இருக்குது. அரிசியை வெச்சு செய்யற எல்லா பலகாரங்களையும்...
சிறுதானியங்கள்லயும் செய்ய முடியும். கேழ்வரகு அவலை வெச்சு, உப்புமா
செஞ்சும் சாப்பிட முடியும். கேழ்வரகுல அதிக கால்சியம் சத்துக்கள்
இருக்கறதால, எலும்புகளுக்கு நல்லது. அதனால உடம்புக்குக் கூடுதல் பலம்
கிடைக்குது. தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகிலே கிடைச்சுடுறதால,
பாலோட தேவையைக் குறைச்சுக்கலாம்.
எங்க வீட்ல கம்பு, வரகு, பருப்பு, சோளம் இதையெல்லாம்
ஊறவெச்சு, செய்யுற அடையை விரும்பி சாப்பிடுவாங்க. அதோட திணையரிசியில செய்ற
சர்க்கரைப் பொங்கலும் அவ்ளோ ருசியா இருக்கும். அரிசியில கிடைக்காத சுவையும்
சத்தும் சிறுதானியங்கள்ல கிடைக்குது'' என்றவர்,
''சிறுதானியங்கள சாப்பிடறதால பலவித நன்மைகள் இருக்குற
மாதிரியே அதை விளைவிக்கறதுலயும் பல நன்மைகள் இருக்கு. தண்ணியும் குறைவாதான்
தேவைப்படும். பூச்சிக்கொல்லியும், ரசாயன உரங்களும்
போட வேண்டியத் தேவையிருக்காது. இதனால, நிலமும் வளமாயிருக்கும். விவசாயிகளுக்கும் வேலை குறைச்சலா இருக்கும்'' என்றார்.
2 comments
நல்ல பகிர்வு...
அருமை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! பெட்டகம் A.S.முஹம்மது அலி.
Post a Comment