தாய்ப்பால் தரும் சக்தி! தாய்ப்பாலே தடுப்பூசிதான்!!ஹெல்த் ஸ்பெஷல்!!!

தாய்ப்பாலே தடுப்பூசிதான்! பெ ற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்ன...

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!
பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.


'தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் கடமை.
சீம்பால் (Colostrum)
மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தை விரும்பிக் குடிக்கும் அளவுக்கு சீம்பால் தித்திப்பாக இருக்கும். சீம்பாலில் ஐ.ஜி.ஏ (Immunoglobulin A) என்ற 'நோய் எதிர்ப்பொருள்’ (Antibodies) உள்ளது. இது குழந்தைக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்படாமல் காப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். சீம்பாலில் ரத்த வெள்ளை அணுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

புகட்டும் முறை
சீம்பாலைத் தொடர்ந்து சுரக்கும் தாய்ப்பாலை இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். ஒரே பக்கமாக பால் கொடுக்கக் கூடாது. அதேபோல் படுத்துக்கொண்டு பால் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் குழந்தையின் வாயில் இருந்து மூக்குக்குள் பால் செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. 

பால் கொடுக்கும் முன்பு, மார்புக் காம்புகளை சுத்தம் செய்யவேண்டும்.  தண்ணீரால் சுத்தம் செய்வதைவிட, சில சொட்டுக்கள் தாய்ப்பால் எடுத்து, அதைத் தடவியே சுத்தம் செய்துகொள்ளலாம். இதனால், எந்தத் தொற்றும் குழந்தையை அண்டாது. முதலில் 5 நிமிடங்கள், பிறகு 10 நிமிடங்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தாய்ப்பால் தருமே பலம்!
தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைகள் பெறும் நலன்களைப் பட்டியலிடுகிறார், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் ரமா சந்திரமோகன்.

  ''குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் தடுப்பூசி, சீம்பால்தான். நோய் எதிர்ப்பு குணங்கள் அனைத்தும் அதில் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்ததும், முதல் அரை மணி நேரத்துக்கு பயங்கர சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நேரத்தில் சீம்பால் கொடுக்கப்பட்டுவிட வேண்டும். அதே போல் தாய்ப்பாலில் 88 சதவிகிதம், தண்ணீர்தான். அதுவே தாகத்தையும் தணித்துவிடும் என்பதால், குழந்தைக்குத் தனியாகத் தண்ணீர் தரத் தேவை இல்லை. குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப் பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

  குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தாய்ப்பாலில் உள்ளன. பாலில் இருக்கும் சத்துக்களே குழந்தையின் நோய்த் தடுப்பாற்றலை கட்டமைக்கப் போதுமானது.

  அம்மாவுடனான பிணைப்பு அதிகரிப்பதுடன், பாதுகாப்பாகவும் உணர்கிறது குழந்தை. குழந்தை முழுமுனைப்போடு தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க, அதன் கன்னங்கள் செழுமையாகும். பற்கள் ஒழுங்காக முளைத்து, வளரும்.

  சில குழந்தைகளுக்கு, பால் குடித்த பிறகு நாக்கில் ஒரு வெள்ளைப் படலம் இருக்கும். சுத்தமான துணியை, வெந்நீரில் நனைத்தெடுத்து, நாக்கைத் துடைத்துவிட வேண்டும்.

  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் எடை ஒவ்வொரு மாதமும் 800 கிராம் முதல் ஒரு கிலோ வரை ஏறவேண்டும். பால் குடித்த பிறகு 2 - 3 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 - 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மலம் கழிக்கும்போது, கட்டியாக, கல் போல இல்லாமல், சகஜமாகப் போகவேண்டும். இவையெல்லாம் இருந்தால், குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் அருந்துகிறது என்று அர்த்தம்.'
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் நல்லதே
  பிரசவத்துக்குப் பின், பால் கொடுக்கும் தாய்க்கும் கர்ப்பப்பை சுருங்கி, பழைய நிலைக்குத் திரும்புகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.

  தொடர்ச்சியாகத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், கொடுக்கும் காலங்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு.

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல சத்துக்களும் நிறைந்து எளிதில் செரிக்கும் தன்மை கொண்ட தாய்ப்பால் சிறந்ததாக மட்டுமின்றி ஒரு முழுமையான இயற்கை உணவாகவும் அமைகின்றது.


குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், உயிர்சத்துக்கள் அனைத்தும் சமநிலையில் அடங்கியிருப்பதோடு, நோயை எதிர்க்கும் சக்தி கொண்ட புரதங்களும் (Immunoglobulins) தாய்ப்பாலில் உள்ளன. இவை சளி, இருமல், வயிற்றுப்போக்கு, அலர்ஜியினால் (Allergy) ஏற்படும் ஆஸ்துமா, படை (Eczema) போன்ற வியாதிகள் குழந்தையின் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.


தாய்ப்பால் பருகுவதன் மூலம் இதமான அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைப்பதைக் குழந்தை உணர்கின்றது. தாய்க்கும் சேய்க்கும் அதிகப் பிணைப்பு உண்டாகின்றது. தாயும் சேயும் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி இருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் அவர்களிடையே பிணைப்பு ஏற்படுகின்றது.


குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்கு அதன் சப்பும் உணர்ச்சி தீவிரமாய் இருக்கும். அதன் பின்னர் குழந்தை தூங்க ஆரம்பித்துவிடும். எனவே, குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக தாய்ப்பால் புகட்ட இயலுமோ அவ்வளவு சீக்கிரம் புகட்டத்துவங்குவது நல்லது.


குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கு (Premature Baby) போதிய சப்பக்கூடிய திறன் இருக்குமாயின் உடனே பால் கொடுக்கத் துவங்கலாம்.


அறுவைச் சிகிச்சையினால் (Ceasarean) பிறந்த குழந்தைகளுக்கு உடனே பால் கொடுக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்காக தாய்க்குக் கொடுக்கப்பட்ட மயக்க மருந்து உணவுகள் தாயின் உடலில் இருந்து முற்றிலும் மறைந்த பின்னரே பால் கொடுக்கவேண்டும்.


சீம்பால் : குழந்தை பிறந்த பின் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்த அளவில், மஞ்சள் நிறத்துடன், தடிப்பாக சுரக்கும் பால் சீம்பால். இது அதிக சத்துக்கள் கொண்டது. நோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பொருட்கள் (Anti-infective Agents) நிறைந்ததும் ஆகும். சீம்பால் குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது; அதிகப் பயனுள்ளது. குறைந்த அளவிலே சுரக்கப்பட்டாலும் முதல் மூன்று நாட்களுக்குக் குழந்தையின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானது.


தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரங்கள் :

குழந்தைக்குத் தேவையான பொழுதெல்லாம் பால் புகட்ட வேண்டும். அதோடு எவ்வளவு நேரம் குழந்தை குடிக்கின்றதோ அவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும். மார்பகம் பால் நிறைந்து இருக்குமாயின் குழந்தை பால் குடிக்கும் இடைவேளை 3 மணிக்கு அதிகமாகக் கூடாது. பால் பருக வேண்டிய நேரத்தில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தால் எழுப்பிப் பால் கொடுக்கவேண்டும். பால் கொடுக்கும்பொழுது குழந்தையின் பால் சப்பும் வேகம் குறையும் பொழுதோ அல்லது பால் குறைந்து மார்பகம் மிருதுவாகும் பொழுதோதான் தாய் தனது அடுத்த மார்பகத்திலிருந்து பால் புகட்ட வேண்டும் பால் குடிக்கத் துவங்கிய முதல் சில நாட்களில் குழந்தை பாலை 2 அல்லது 3 நிமிடங்கள் பருகியவுடன் தூங்கிவிடும். பின்னர் நன்கு பால் குடிக்கப் பருகியவுடன், அநேகமாக 10 நிமிடங்களில் ஒரு மார்பகத்திலிருக்கும் பாலை குடித்துவிடும்.

தாய்ப்பாலை தவிர்க்கவேண்டிய சமயங்கள் :

ஏதாவது மருந்து சாப்பிட வேண்டியிருந்தால் மருத்தவரைக் கலந்தாலோசித்து அவர் பால் கொடுக்கலாம் என்று சொன்னால் மாத்திரமே குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான உணவு :

ஏற்கனவே சரிவிகித உணவை உட்கொள்ளும் தாய்மார்கள் பருப்பு வகைகளையும், கீரை வகைகளையும், பீன்ஸ், அவரை வகைகளையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பழங்களையும், பால், தயிர் முதலியவற்றையும் சேர்த்துச் சாப்பிடுவது அவசியம். அசைவ உணவு உட்கொள்பவர்கள், மாமிசமும் முட்டையும் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் அதிகமான மசால் பொடி சேர்க்கப்பட்ட உணவு வகைகள் அளவுக்கதிகமான நெய் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுப்பதை இந்த மாதத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று கணக்கில்லை. எவ்வளவு காலம் தொடர்ந்து கொடுக்க இயலுமோ அவ்வளவு காலம் கொடுப்பது நல்லது. ஆனால், நிறைய பெண்களுக்குக் குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு பாலின் அளவு குறைந்துவிடும். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய் பாலிலிருந்து மட்டும் கிட்டாது. எனவே தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

தாய்ப்பால் குறையும்பொழுது ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ராகிக்கூழ், அரிசிக்கஞ்சி, மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம். இதைத் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து 3 அல்லது 4 வாரம் கழித்து அரை டம்ளர் கூழ் அல்லது வாழைப்பழம் கொடுக்கலாம். வேக வைத்த முட்டை, கீரை மசியல் என்று பல வகையான உணவுகளைக் கொடுக்கலாம். கடையில் குழந்தைகளுக்கென்று விற்கப்படும் உணவுகளைக் காட்டிலும் இந்த உணவுகள் நல்லது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4755547762738319508

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item