இன்றைய சமையல்! - 7 சன்டே ஸ்பெஷல்! சமையல் குறிப்புகள்!!
இன்றைய சமையல்! - 7 சன்டே ஸ்பெஷல் அ ரக்கப்பரக்க சாப்பிட்டுவிட்டு படிப்பு, வேலை என்று ஓடுபவர்களின் இதயம் க...
https://pettagum.blogspot.com/2014/01/7.html
இன்றைய சமையல்! - 7
சன்டே ஸ்பெஷல்
அரக்கப்பரக்க
சாப்பிட்டுவிட்டு படிப்பு, வேலை என்று ஓடுபவர்களின் இதயம் கவர்ந்த நாள்...
ஞாயிற்றுக்கிழமை! அன்று, ரிலாக்ஸ்டாக செய்து, சாப்பிட்டு, பரிமாறி மகிழ...
அட்டகாசமான வெஜ், நான்-வெஜ் ரெசிபிகளை அள்ளிக் குவித்திருக்கிறார் 'செஃப்’
தாமு. வெஜ் ரெசிபிகளை சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்,
நான்-வெஜ் ரெசிபிகளை சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் கலைச்செல்வி
சொக்கலிங்கம் ஆகியோர், 'சபாஷ்’ போடும் விதத்தில், ஆர்வத்துடன் செய்துகாட்டி
அசத்துகிறார்கள்.
காலை சிற்றுண்டி:
வெந்தய இட்லி
தேவையானவை: பச்சரிசி - ஒரு ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - கால் ஆழாக்கு, வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயம் மற்றும் உளுத்தம்பருப்பை ஒன்றாகவும், பச்சரிசியை தனியாகவும் முதல்
நாளே எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, எல்லாவற்றையும்
களைந்து சுத்தம்
செய்து, ஒன்றுசேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள் (இப்படி
ஒன்றாக அரைப்பதுதான் இதன் ஸ்பெஷலே!). மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு,
கைகளால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வையுங்கள். மறுநாள் காலை
தேவைக்கேற்ற மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து, உப்புப் போட்டு
கரைத்து, இட்லிகளாக செய்து கொள்ளுங்கள்.
இதற்குத் தொட்டுக் கொள்ள... நாட்டுக்கோழி குழம்பு, அருமையான சைட் டிஷ்.
நாட்டுக் கோழி குழம்பு
தேவையானவை:
நாட்டுக்கோழி - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 3 (நறுக்கவும்), நறுக்கிய
தக்காளி - 3 கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 3
டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 3 டீஸ்பூன், இஞ்சி -
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 10
இலை, பட்டை, லவங்கம் - தலா 2, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: அடுப்பில்
வாணலியை வைத்து சூடாக்கி, எண்ணெய் ஊற்றி... சோம்பு, பட்டை, லவங்கம்,
கறிவேப்பிலையை தாளித்துக் கொள்ளுங்கள். இதில் நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்குங்கள். அடுத்ததாக, தக்காளியைப் போட்டு சுருள வதக்கிக்
கொள்ளுங்கள். பிறகு,
இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கவும்.
இதனுடன் நன்கு கழுவி சுத்தம் செய்த கோழி இறைச்சியைப் போட்டு வதக்கிக்
கொள்ளுங்கள். கூடவே, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு
வதக்குங்கள். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம்
வேகவிடுங்கள். இதனுடன் மிளகுத்தூளை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். குழம்பு
நன்கு கொதித்ததும் இறக்கி, இட்லியோடு தொட்டுச் சாப்பிட்டால்... காலைப்
பொழுது அமோகமாக நிறைவடையும்.
மதிய சாப்பாடு:
பிரிஞ்சி
தேவையானவை:
உரித்த பூண்டு - 2 கைப்பிடி அளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
அளவு, பச்சை மிளகாய் - 4, அரிசி, தேங்காய்ப் பால், தண்ணீர் - தலா ஒரு கப்,
பட்டை, லவங்கம் - தலா 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தை அடுப்பில்
வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம் சேர்த்து
வதக்கவும். அடுத்ததாக பூண்டு, கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, களைந்து
சுத்தம் செய்த அரிசியைப் போட்டு நன்கு வதக்கவும். இனி... தேங்காய்ப் பால்,
தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். பாத்திரமாக இருந்தால்
தண்ணீர் கொதித்து, குமிழ் குமிழாக வரும்போது, அடுப்பை 'சிம்’மில் வைத்து
தட்டைக் கொண்டு மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும். குக்கராக இருந்தால் ஹை
ஃப்ளேமில் இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு தீயைக் குறைத்து,
ஐந்து நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால்... அட்டகாசமான பிரிஞ்சி ரெடி.
இதற்கு மீன் வறுவல், மட்டன் குருமாவை சைட் டிஷ்ஷாக வைத்துக் கொடுத்தால்... நிமிஷத்தில் தட்டு காலியாகிவிடும்.
மீன் வறுவல்
தேவையானவை: மீன் -
அரை கிலோ (எந்த மீனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மெலிசாக இருப்பது
போல பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - 2
டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை
பழம் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
தட்டில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு,
இஞ்சி - பூண்டு விழுது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து
கொள்ளுங்கள். மீனில் இந்தக் கலவை நன்றாக ஒட்டி இருப்பது போல தடவுங்கள்.
அப்படியே பொட்டுக்கடலை மாவின் மீது மீனை ஒற்றி எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள் (மீனில் ஒட்டியிருக்கும் மசாலா பிரிந்து வராமல்
இருப்பதற்காகத்தான் பொட்டுக்கடலை மாவில் ஒற்றி எடுக்கிறோம்).
அடுப்பில் தவாவை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா தடவிய மீனைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
மட்டன் குருமா
தேவையானவை: மட்டன்
- அரை கிலோ, சின்ன வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 200 கிராம்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - 4
டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தண்ணீர் - 3 டம்ளர், பச்சை
மிளகாய் - 2, தேங்காய் - அரை மூடி, முந்திரிப் பருப்பு - 10, பட்டை,
லவங்கம் - தலா 2, தயிர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில்
குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி... பட்டை, லவங்கம் தாளித்து, நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி - பூண்டு
விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்ததாக, நறுக்கிய
தக்காளியைப் போட்டு சுருள வதக்கி, பச்சை மிளகாயை கீறிப் போட்டு வதக்கவும்.
இனி, சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை இதனுடன் சேர்த்து வதக்கி,
கூடவே மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு, தயிர் சேர்த்து 2
நிமிடம் வதக்க வேண்டும். இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை
மூடி ஹை ஃப்ளேமில் ஐந்து விசில் வரும் வரை வைத்து... பின்பு, அடுப்பை ஐந்து
நிமிடம் 'சிம்’மில் வைக்கவும். பின்னர், குக்கரில் பிரஷர் போனதும் திறந்து
பார்த்தால் மட்டன் பஞ்சு போல நன்றாக வெந்திருக்கும். இனி... தேங்காய்,
முந்திரிப் பருப்பை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து, வேக வைத்த
குருமாவில் சேர்த்துக் கிளறி இறக்கி, சாப்பிட வேண்டியதுதான்.
இரவு உணவு:
ரவை சேமியா கிச்சடி
தேவையானவை: ரவை,
சேமியா - தலா ஒரு டம்ளர், பெரிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சை
மிளகாய் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
தக்காளி - ஒன்று, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 4 டம்ளர், உரித்த
பூண்டு - ஒரு கைப்பிடி அளவு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு குழிக்
கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில்
வாணலியை வைத்து சூடானதும், சேமியா, ரவையை வெறும் வாணலியில் நன்கு வறுத்து
எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை
போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். கூடவே, பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அடுத்ததாக உரித்த பூண்டு சேர்த்து
வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் போட்டு நன்கு வதக்கவும். இதில்
நான்கு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும், தண்ணீர் கொதிக்கும் போது
வறுத்த சேமியா, ரவையை போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும் (அடுப்பை
'சிம்’மில் வைத்து விட வேண்டும்). ரவை, சேமியா வெந்து தண்ணீர் வற்றியதும்
மேலே நெய் விட்டுக் கிளறி, இறக்கி வைக்கவும்.
இதற்கு பெஸ்ட் காம்பினேஷன் தேங்காய் சட்னி.
தேங்காய் சட்னி
தேவையானவை: தேங்காய்
- அரை மூடி, பச்சை மிளகாய் - 2, பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்,
பச்சை மிளகாய், பொட்டுக்கடலையை ஒன்றாக போட்டு மிக்ஸியில் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து அரைத்து, தேவையான உப்பை சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
தாளித்து, அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையுடன் சேர்த்துக்
கலக்கிவிடுங்கள்.
Post a Comment