கிச்சன் கிளினிக் - உணவே விருந்து உணவே மருந்து

உடல் ஆரோக்கியத்துக்கு, பிரதானமே உணவுதான்!    ஆனால், இன்றோ, சாப்பிடக்கூட நேரம் இன்றி, கிடைத்ததைச் சா...


உடல் ஆரோக்கியத்துக்கு, பிரதானமே உணவுதான்!  
 ஆனால், இன்றோ, சாப்பிடக்கூட நேரம் இன்றி, கிடைத்ததைச் சாப்பிட்டு, நம்மில் பலர் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம்.
அன்று பள்ளிக்கூடக் குழந்தைகளுக்குக்கூட, சமையலைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தனர் பெற்றோர்.  ஆனால், இன்றோ திருமணம் முடிந்து, புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வரை, பெண்ணுக்கு சமைக்கத் தெரியாது. வேலை நிமித்தம் வெளியூர்களில் வசிக்கும் இளைஞர்கள் பாடு இன்னும் கஷ்டம்.      எல்லாமே பாக்கெட்டில் வந்துவிட்டதால், 'சமைப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை’ என்று நினைப்பது தவறு. உணவு விஷயத்தில் நாம் மிக முன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது  அவசியம். பாட்டியின் பக்குவத்துடன் சத்துக்களின் சாம்ராஜ்யமாக இந்த இணைப்பு இதழில் சமைத்து ருசிக்க பச்சடி, ஊறுகாய், மூலிகை டீ, வல்லாரை தோசை, இலந்தைப்பழப் பாயசம், வாழைப்பூ சூப் என சத்தான ரெசிப்பிகளை, பக்கத்துக்குப் பக்கம் தலைவாழை இலை போட்டு, பந்தி விரித்திருக்கிறோம்.  
வாழும் நிலப்பரப்புக்குத் தகுந்த உணவு, சூழலுக்கு ஏற்ற உணவு மற்றும் காலத்துக்கு ஏற்ற (சீஸனல்) உணவு என்று நமது பாரம்பரிய மருத்துவம், உணவை வடிவமைத்துத்தந்து இருக்கிறது
மருத்துவச் சிறப்புமிக்க நம் பாரம்பரிய உணவை இந்தக் காலத்துக்கு ஏற்ற சுவையாக மாற்றி, எளிமையான ரெசிபிகளை வழங்குகிறார் மூத்த சித்த மருத்துவரும் ஆசிரியருமான, திருநாராயணன்.  25 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆரோக்கிய ரெசிப்பிகளைச் செய்துகாட்டியிருப்பவர், மருத்துவரின் மனைவி சுந்தரவல்லி. வேளாண் பட்டதாரி. பாரம்பரிய உணவுகளைச் செய்வதில் திறமையும் அனுபவமும் மிக்கவர்.
ஐந்து ஆண்டுகளாக கேரள ஆயுர்வேத ரிசார்ட்டுகளில் பணிபுரிந்து வரும் செஃப் ராஜா, நோயின் தன்மைக்கு ஏற்ப உணவு வகைகளைச் செய்வதில் வல்லவர்.'உணவே மருந்து’ என்பதில் உறுதியானவர்.
டாக்டர் திருநாராயணன், அவருடைய மனைவி சுந்தரவல்லி மற்றும் செஃப் ராஜா ஆகியோரின் ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகள் இங்கே பரிமாறப்படுகின்றன.
ரசித்துச் செய்து, ருசித்து மகிழுங்கள்.
ஓமவல்லிப் பச்சடி
தேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, மிளகு - 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் - அரை டீஸ்பூன், தயிர் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.
செய்முறை: கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய ஓமவல்லி இலை அல்லது கற்பூரவல்லி  இலை, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு முறை வதக்கி, அடுப்பை அணைக்கவும். இல்லையெனில் இலை மிகவும் வெந்துவிடும். இதனுடன் இஞ்சி, தேங்காய், உப்பு, ஒரு கரண்டி தயிர் விட்டு அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.  
பலன்கள்:
 மழைக் காலத்தில்  சுவாசப்பாதை  சீராகும். அலர்ஜி, ஜலதோஷத்தை விரட்ட சிறந்தது.
 தோல் சம்பந்தமான அலர்ஜி, உணவு அலர்ஜிக்கு ஓமவல்லி சிறந்தது. ஜீரணத்துக்கும் நல்லது.
ஹெர்பல் டீ
தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி  - தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.
செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்கவும்.
டீ போடும்போது, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு, அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடிவிடவும்.  ஐந்து நிமிஷங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.
குறிப்பு: டீயில் வேறு ஃப்ளேவர் வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம். அல்லது கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடலாம்.
பலன்கள்:
 ஹெர்பல் டீ தும்மல், தடுமனைக் குறைக்கும்.
கபத்தைக் குறைக்கும்.
 குளிர்காலத்தில் இருக்கும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்.
ஐங்காயப்பொடி (அங்காயப்பொடி)
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் - தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், நெய் - தலா அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 3 கிராம்.
செய்முறை: கடாயைக் காயவைத்து,  நெய் விட்டு, வற்றல்கள், வேப்பம்பூ, மிளகு, சீரகம், காயம் இவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியே போட்டு வாசம் வர வறுத்து, தட்டில் தனியாக வைக்கவும்.
வறுத்த பொருட்கள், இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்து, டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்த அங்காயப்பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டியதுதான்.
பலன்கள்:
 செரிமானத்துக்கு உற்ற நண்பன், இந்தப் பொடி.
மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவினால், செரிமானம்  பாதிக்கப்பட்டு,  வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்தப் பொடி கட்டுப்படுத்தும்.  
 வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும். இந்தப் பொடியைப் போட்டுச் சாப்பிட்டால், உடம்பு வலி, அசதி எல்லாம் பறந்துவிடும்.
களாக்காய் ஊறுகாய்
தேவையானவை: களாக்காய் - 100 கிராம், வெந்தயம் - 5 கிராம், கடுகு  3 கிராம், மிளகுத்தூள் - 20 கிராம், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், இந்துப்பு - மிகச் சிறிதளவு.
செய்முறை: களாக்காயைக் கழுவி, கொட்டையை நீக்கி, நறுக்கி இந்துப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். வெறும் கடாயில் வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பொரிந்ததும், களாக்காயில் கொட்டி, வறுத்து பொடித்த வெந்தயம், கடுகைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நன்றாகக் கலந்துவிடவும். ஒரே வாரத்தில் நன்றாக ஊறி, ஊறுகாய் தயாராகிவிடும்.
மாற்று முறை: மிளகுத்தூளுக்குப் பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் ஊறுகாய் தயாரிக்கலாம்.
பலன்கள்:
 ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
 இதய நோய்க்கு மிகவும் நல்லது.
பொதுவாக, உயர் ரத்த அழுத்தம் மற்றும், இதய நோய் இருப்பவர்களை ஊறுகாயே சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால், மிளகுத்தூள் சேர்த்த களாக்காய் ஊறுகாயை  உபயோகிக்கலாம்.
வாழைப்பூ வடகம்
தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.
பலன்கள்:
மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும்.  
அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.
இஞ்சி தேனூறல்
தேவையானவை: இஞ்சி - 100 கிராம், தேன் - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, மெல்லியதான வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு, அது மூழ்கும் அளவு தேனை ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடவும். நான்கு ஐந்து நாட்களில், அது நொதித்து, நுரைத்தாற்போல் வரும். இந்தச் செய்கை, நல்ல பாக்டீரியாவால் இப்படி நிகழும். ஏழு, எட்டு நாட்கள் கழித்து, நுரைத்தல் தானாகவே அடங்கிவிடும். 10 நாட்கள் கழித்து, தேனில் இஞ்சி நன்கு ஊறி இருக்கும். தினமும் ஒன்று எடுத்துச் சாப்பிடலாம். ஒரு முறை தயாரித்த தேனூறலை இரண்டு, மூன்று மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.
பலன்கள்:
 இஞ்சி, வாதத்தைத் தடுக்கக்கூடியது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
செரிமானத்துக்கும் நல்லது.
கேழ்வரகு இடியாப்பம்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு பங்கு, பச்சரிசி மாவு - ஒரு பங்கு.
செய்முறை: கேழ்வரகு இடியாப்பத்துக்கு, முதலில் அது தயாரிப்பதற்கான மாவைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.  இந்தக் கேழ்வரகு மாவை, கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு, வாசம் வரும் வரை அல்லது நிறம் மாறும் வரை வறுத்து, ஆறவிடவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்க்கவும்.
இந்த மாவு அளவுக்கு 2 1/2 அல்லது 3 பங்கு தண்ணீரைப் பாத்திரத்தில்விட்டு, சிறிது உப்பு, நல்லெண்ணெய்விட்டுக் கொதிக்கவிடவும் (உதாரணமாக ராகி பச்சரிசி மாவு 1 கப் என்றால், தண்ணீர் 3 கப்). தண்ணீர் நன்றாக நடுக்கொதிநிலைக்கு வந்ததும், இடது கையால் அதைப் பிடித்து மாவில் ஊற்றிக்கொண்டே, வலது கையால் மாவைக் கிளறவேண்டும். நன்றாகச் சுருண்டு, மாவு பந்து போல வரும். அதே சூட்டோடு இடியாப்பக் குழலில் வைத்துப் பிழிந்து விடலாம்.
இந்த இடியாப்பத்தை வெங்காயம், வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சாப்பிடலாம். அல்லது சர்க்கரை, தேங்காய் கலந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை சேவை போல செய்தும் சாப்பிடலாம்.
பலன்கள்:  
சிறு தானியங்களில் எல்லாமே சர்க்கரைச் சத்து, ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும் என்றாலும், கேழ்வரகில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், மெதுவாக ஜீரணித்து, ரத்தத்துடன் கலக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இடியாப்பம் சிறந்த உணவு.
லெமன்கிராஸ் - நெல்லி இலை டீ
தேவையானவை: லெமன்கிராஸ், நெல்லி இலை (உலர்த்திய கலவை) - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய லெமன் கிராஸ் 3 பங்கு என்றால், அதில் ஒரு பங்கு முழுநெல்லி இலைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் நிழல்காய்ச்சலாக உலரவிட வேண்டும். நன்கு உலர்ந்ததும், ஒரு பாட்டிலில் எடுத்துவைத்துக்கொள்ளலாம். டீ போடும்போது, முக்கால் டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, 2 சிட்டிகை லெமன் கிராஸ், நெல்லி இலைக் கலவையை எடுத்துப் போட்டு மூடிவிட வேண்டும். ஐந்து நிமிஷங்களில், அதிலிருக்கும் சத்துக்கள் தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம்.
பலன்கள்: நல்ல ரெஃப்ரஷ்னர். உடம்புக்குப் புத்துணர்ச்சி ஊட்டும். உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட நீரை வெளியேற்றும். நீண்ட தூரப் பிரயாணம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காலில் நீர் கட்டி, வீங்கிக்கொள்ளும். அவர்கள் இந்த டீ குடித்தால், நீர் வடிந்துவிடும். நெல்லி இலை, முதுமையைத் தள்ளிப்போடும்.
பிரண்டைத் துவையல்
தேவையானவை: இளம் பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், எள்ளு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, மிளகு - 4, காய்ந்த மிளகாய் (அல்லது) பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையை நுனிப்பகுதியில் இளசாக ஒடித்து, கணுக்களை நீக்கிவிட்டு, மற்ற பகுதிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், மிளகு, எள்ளு ஆகியவற்றைத் தனித்தனியே வதக்கி, எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு மிதமாக அரைத்துக்கொள்ளவும். விரும்பினால், கடைசியாக ஒரு சிறு துண்டு வெல்லம் போட்டுச் சுற்றி எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில், பிரண்டைக்குப் பதிலாக முடக்கத்தான் அல்லது கறிவேப்பிலை சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.
பலன்கள்:
மூட்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஓர் அருமருந்து.
இந்தத் துவையலை வாரத்துக்கு இரண்டு முறை என்று, நான்கு முதல் ஆறு வாரம் வரை சாப்பிட்டால், மூட்டுவலி பெரும்பாலும் குறைந்துவிடும்.
நெல்லிக்காய்ப் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 2, பச்சை மிளகாய் - சிறிய துண்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு,  கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு, தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: நெல்லிக்காயைத் துருவி, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் தயிர் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: தயிர் அதிகமாகச் சேர்த்தால் புளிப்பாகிவிடும். எனவே, புளிக்காத தயிரை மிதமாகச் சேர்க்கவும். நெல்லிக்காய் மலிவாகக் கிடைக்கும்போது வாங்கி, அதைத் துருவி, கூடவே  இஞ்சியையும் துருவி, ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துக்கொண்டால், தேவையானபோது பச்சடி செய்யலாம்.
பலன்கள்:
 வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய பச்சடி இது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
திப்பிலி ரசம்
தேவையானவை: ரசப்பொடி, சீரகம், வறுத்த வெந்தயம், பெருங்காயம், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், புளி, திப்பிலி இலை - 4, பருப்புத்தண்ணீர், உப்பு, தாளிக்க: கடுகு, சீரகம், நெய்.
செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, ரசப்பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புத் தண்ணீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சின்னதாக நறுக்கிய  திப்பிலி இலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். கடைசியாக நெய்யில் தாளித்துக் கொட்டி மூடவும்.
மாற்று முறை: கரைத்துவைத்த புளித் தண்ணீரில் ரசப்பொடியைச் சேர்த்துக் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். திப்பிலி இலையை அரைத்து, பருப்புத் தண்ணீருடன் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும். கடைசியாகத் தாளித்துக் கொட்டி மூடவும்.
பலன்கள்:
 சளித் தொல்லை, இருமல், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இந்த ரசத்தை இளஞ்சூட்டில் அருந்தலாம்.
பாரம்பரிய தீபாவளி லேகியம்
தேவையானவை: திப்பிலி, ஏலக்காய், கிராம்பு - தலா 5 கிராம், மிளகு, சீரகம், கொத்துமல்லி, சுக்கு, தேசாவரம், தேன் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, அரத்தை - 2 துண்டு, ஓமம், நெய் - 2 டீஸ்பூன், சாதிக்காய் - சிறு துண்டு, கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அரத்தை, சுக்கு இரண்டும் கடினமாக இருப்பதால், நன்கு தட்டிக்கொள்ள வேண்டும். (சுக்குத் துண்டுக்குப் பதில் சுக்குப் பொடியும் உபயோகிக்கலாம்). இவை எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு நன்கு கொதிக்கும் வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு, எல்லாப் பொருட்களும் மிருதுவாகிவிடும். பிறகு மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதுக்கு சமமாக, கருப்பட்டி அல்லது வெல்லம் எடுத்துத் தட்டிக்கொள்ளவும். கருப்பட்டி என்றால் அப்படியே போடலாம். வெல்லம் என்றால், லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, தூசியை வடிகட்டி, ஊற்றிக்கொள்ளவும். இனிப்புக்கு, பாதி அளவு வெல்லமும் மீதி அளவுக்கு, தேன் சேர்த்தும் லேகியம் கிளறலாம்.
அடுப்பில் கடாயை வைத்து, நல்லெண்ணெய், நெய் விட்டு, சூடானதும் அரைத்த விழுது, கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் சேர்த்துக் கிளறவும். கைவிடாமல் கிளறும்போது, அடிபிடிப்பது போல் இருந்தால், இன்னும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
எல்லாம் வெந்து, எண்ணெய் பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். பாதி அளவு தேன் சேர்ப்பதாக இருந்தால், அடுப்பை அணைத்த பிறகு சேர்த்துக் கிளறிவிட வேண்டும். ஆறியதும் இந்த லேகியத்தை, ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு வைத்து, காற்று நுழையாமல் மூடிவைக்கவும். நான்கு, ஐந்து மாதங்களுக்கு நன்றாக இருக்கும்.
தீபாவளி அன்று அதிகாலையில், எண்ணெய்க் குளியல் முடிந்த பிறகு, வெறும் வயிற்றில் இந்த லேகியத்தை, சுண்டைக்காய் அளவு உருண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிடவேண்டும். பிறகு எந்த வகை இனிப்பானாலும் காரமானாலும் எண்ணெய்ப் பலகாரமென்றாலும் அவற்றால் வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் இல்லாமல் நன்றாக ஜீரணமாகிவிடும்.
பலன்கள்:
செரிமானத்துக்கு அருமருந்து. இது குளிர்காலம் என்பதால், வயிறு பசி எடுக்காமல் மந்தமாக இருக்கும். அதைப் போக்கி, நல்ல பசியைத் தூண்டச் செய்யும்.
சமையற்கலை நிபுணர் ராஜாவின் கைமணத்தில் மணக்கும் ரெசிபிகள்...
துளசி ஆரஞ்சுச் சாறு
தேவையானவை: துளசி - 5 கிராம்,  பழுத்த ஆரஞ்சு - 2, ஆரஞ்சுப் பழத் தோல் - ஒரு துண்டு, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஆரஞ்சுப் பழத்தின் விதைகளை எடுத்து, அதனைச் சாறு பிழிந்துகொள்ள வேண்டும். அதனுடன் துளசியை நறுக்கிச் சேர்த்து ஆரஞ்சு பழத் தோலையும் சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து, சர்க்கரை சேர்த்தால், துளசி - ஆரஞ்சு பானம் தயார். மிக விரைவில் தயாரிக்கக்கூடிய எளிய வகை பானம் இது.
பலன்கள்:
வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள் இந்தச் சாற்றை அருந்துவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
முகப் பளபளப்பை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
 துளசியானது வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, சளி, கபம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
அருகம்புல் சப்பாத்தி
தேவையானவை: அருகம்புல், கோதுமை மாவு - தேவையான அளவு, ஏலக்காய் மற்றும் சுக்குப் பொடி - 2 கிராம்.
செய்முறை: சாதாரணமாக சப்பாத்தி செய்யும்போது மாவு பிசைய, சேர்க்கும் தண்ணீருக்குப் பதிலாக, அருகம்புல்லை நன்கு கழுவி, அரைத்து எடுத்துவைத்த சாறோடு சேர்த்து, ஏலக்காய், சுக்குப்பொடி போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். இதனை எண்ணெய் சேர்க்காமல் சாதாரண சப்பாத்தி சுடுவது போல, சுட்டு எடுக்க வேண்டும். அருகம்புல் சாறு மிகவும் நல்லது. ஆனால் அதன் சாற்றை நேரடியாக அருந்த பலரும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
பலன்கள்:
கோதுமை, சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்.
அருகம்புல்லில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் ஏற்றது.
ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
சுக்குபேரீச்சை சாண்ட்விச்
தேவையானவை: துண்டு துண்டாக வெட்டிய பேரீச்சம்பழங்கள், சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள், வெண்ணெய், பிரெட் துண்டுகள்.
செய்முறை: நறுக்கிய பேரீச்சம்பழத்தை, சுக்கு மற்றும் ஏலக்காய்த்தூளுடன் நன்கு தோய்த்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பிரெட் துண்டை எடுத்து அதில் வெண்ணெய் தடவி, அதில் பேரீச்சம் பழக் கலவையை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டால் மூடி, டோஸ்ட் செய்ய வேண்டும். சில குழந்தைகள் பேரீச்சம்பழத்தை அப்படியே உண்ண விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இந்த முறையில் கொடுக்கலாம்.
பலன்கள்:
சுக்கு இருமல், சளி, கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் தரும்.
 பேரீச்சையில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, வளரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
வெந்தய  தேங்காய்ப் பால்
தேவையானவை: வெந்தயம், துருவிய தேங்காய், இளநீர், இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கை சிறிதளவு, சர்க்கரை.
செய்முறை: வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். இதனால் கசப்புச் சுவை அறவே போய்விடும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் இளநீர் வழுக்கை ஆகியவற்றுடன் இளநீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்க வேண்டும். ஊறவைத்த வெந்தயத்தைத் தனியாக அரைத்து,  இளநீர் கலவையில் சேர்க்க வேண்டும். இதனுடன் (விருப்பப்பட்டால்) தேவையான சர்க்கரை கலந்து குடிக்கலாம். வெந்தயத்தின் பலனைப் பலர் அறிந்தாலும், அதன் கசப்புச் சுவை காரணமாகப் பலரும் விரும்புவது இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கவே இந்த வெந்தய-தேங்காய்ப் பால்.
பலன்கள்:
 வெந்தயம் உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும் இயல்புடையது.
அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் பலம் பெறும்.
இலந்தைப் பழப் பாயசம்
தேவையானவை: இலந்தைப் பழம் - கால் கிலோ, சர்க்கரை - தேவையான அளவு, ஜவ்வரிசி - 50 கிராம், நெய், முந்திரி, திராட்சை, பால் - சிறிதளவு.
செய்முறை: இலந்தைப் பழத்தை நன்றாகக் கழுவி விதையுடன் அரைத்துக்கொள்ள வேண்டும். இலந்தைப் பழம் கிடைக்காதவர்கள் இலந்தை வடை வாங்கி நீரில் கரைத்துக் கொள்ளலாம். முந்திரி, திராட்சையை நெய்யில் வதக்கி, வேகவைத்த ஜவ்வரிசியுடன் சேர்க்கவேண்டும்.  பிறகு பால், சர்க்கரை சேர்த்து, அனைத்தையும் கொதிக்கவைத்து இறக்கினால் பாயசம் ரெடி
பலன்கள்:
இலந்தைப் பழத்தில் க்ளூடாமிக் அமிலம் உள்ளது. இது மூளைக்கு நல்ல சுறுசுறுப்பைக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 கால்சியம் அதிக அளவில் உள்ளதால் குழந்தைகளின் பல், எலும்புகள் வலுப்பெற உதவும்.
வல்லாரைகோதுமை தோசை
தேவையானவை: வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு.  
செய்முறை: கீரையை முதலில் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கோதுமை மாவை தோசைப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவேண்டும். தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.
பலன்கள்:
ஞாபகசக்தி அதிகரிக்கும்.
 ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும்  குழந்தைகளுக்கும் ஏற்றது.
வாழைப்பூ பருப்பு சூப்
தேவையானவை: சிறிய வாழைப்பூ - 1, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்பொடி, சீரகம்.
செய்முறை: பருப்பை முதலில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். எண்ணெயில் சீரகம், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை வதக்கிக்கொள்ளவும்.  பிறகு வாழைப்பூவை நன்றாக இடித்து, பருப்பையும் சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைந்தவுடன் தண்ணீரை மட்டும் வடிகட்டினால் அருந்தலாம்.  
பலன்கள்:
 சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள் இதனைத் தினசரி குடித்துவந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.  
சிறுநீரகக் கற்களுக்கும் இது அருமருந்து.
கொத்துமல்லி பூண்டு சூப்
தேவையானவை: இடித்த பூண்டு, கொத்துமல்லி, சின்ன வெங்காயம், உப்பு.
செய்முறை: வெங்காயம், பூண்டுடன் மல்லித்தழை சேர்த்து வேகவிட வேண்டும். நன்றாகக் குழைந்தவுடன் தண்ணீரை வடிகட்டினால் சூப் தயார். உப்பு சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்:
 பூண்டு உடலில் உள்ள வாயுவைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்கும். முகப்பருக்கள் வராமல்  தடுக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்.
அவல்தேங்காய் உப்புமா
தேவையானவை: அரிசி அவல், துருவிய தேங்காய், சுக்குப்பொடி, ஏலக்காய்ப்பொடி.
செய்முறை: அவல், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இட்லிக் கொப்பரையில் வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும் இறக்கலாம்.
பலன்கள்:
  எண்ணெய் இல்லாமல் செய்வதால், உடல் எடை குறைக்க  நினைப்பவர்களுக்கு ஏற்றது.
வெந்தயக்கீரை பருப்புக் குழம்பு.
தேவையானவை.: பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை - தலா 50 கிராம்,  சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் பருப்பையும் கீரையையும் நன்றாக வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். வெங்காயம், கடுகு ஆகியவற்றைச் சிறிது உப்பு சேர்த்து தாளித்து இதனைக் கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்:
வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. விட்டமின் சி உடையது.
 ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்பதன் மூலம் அதனைக் கட்டுக்குள் வைக்கலாம்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
எலுமிச்சைகாய நீர்.
தேவையானவை: எலுமிச்சைச் சாறு, பெருங்காயத் தூள், தேவையான தண்ணீர், உப்பு.
செய்முறை: எலுமிச்சைச் சாறுடன், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அருந்தலாம்.
பலன்கள்:
பெருங்காயம், வாயுத்தொல்லையைப் போக்கும்.
பேருந்து, ரயில் பயணங்களின்போது ஏற்படும் வாந்தி பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி.
பசலைக்கீரைக் கடைசல்
தேவையானவை.: பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு,  சின்ன வெங்காயம்.
செய்முறை: கீரையை நன்றாக வேகவைத்து கடைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்கவேண்டும்.  
பலன்கள்:
பசலைக்கீரையானது மலச்சிக்கலுக்கு நல்லதொரு தீர்வு.
 ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்க£லங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.  
அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு
தேவையானவை: அரைக்கீரை, சின்ன வெங்காயம்,  கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள்.
செய்முறை: கீரையில் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். சாதத்துக்கு ஏற்றது.
பலன்கள்:
கண் பார்வையைத் தெளிவாக்கும்.
ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.
எள்ளு சாதம்
தேவையானவை: கருப்பு எள்ளுத் தூள்,  நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, வெந்த சாதம், மிளகாய்த்தூள்.
செய்முறை: எண்ணெயில் பூண்டு, வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் எள்ளு பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த சாதத்தைக் கலந்தால்... எள்ளு சாதம் தயார். மேற்கண்டவற்றை இடித்தும், சாதத்துடன் கலக்கலாம்.
பலன்கள்:
இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள், இதனை  உண்டுவந்தால் குணமாகும்.
மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை பெறவும் உதவும்.
கறிவேப்பிலைமிளகு சாதம்.
தேவையானவை: கறிவேப்பிலைத்தூள், மிளகுத் தூள், கடுகு,  இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம்.
செய்முறை: கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்துகொள்ள வேண்டும். மிளகையும் பொடித்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி மிளகு மற்றும் கறிவேப்பிலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் வெந்த சாதத்தைக் கலந்து சாப்பிடலாம்.
பலன்கள்:
கறிவேப்பிலை வெறும் மணத்துக்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. அது ஜீரணத்துக்கும் உகந்தது.
பித்தம், கபம், உடலில் உள்ள நச்சுக்கள் ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை மிளகுக்கு உண்டு

Related

சமையல் குறிப்புகள் 42859311459410106

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item