சிறு தானியச் சமையல் ! சிறப்பான ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள் !
ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானி...
https://pettagum.blogspot.com/2013/09/blog-post_458.html
ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும்
உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப்
பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற
நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு
ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக
மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீன சூழலுக்கு
ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த
சமையல் பகுதி! சமைத்துப் பரிமாறுபவர்... சென்னை, சமையல்கலை நிபுணர்
கிருஷ்ணகுமாரி ஜெயகுமார்!
சாமை மாம்பழக் கேசரி
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி-ஒரு கப்
மாம்பழத் துண்டுகள்-அரை கப்
சர்க்கரை-அரை கப்
முந்திரி, திராட்சை-சிறிதளவு
நெய்-2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு கப் சாமை அரிசியுடன் 3 கப் நீர் சேர்த்து
வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். பாதி மாம்பழத் துண்டுகளைச்
சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். மீதி மாம்பழத்
துண்டுகளைச் சேர்த்து, அலங்கரித்துப் பரிமாறவும்.
வரகு வெஜ் கிச்சடி:
தேவையான பொருட்கள்:
வரகரிசி-ஒரு கப்,
கேரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக்கிழங்கு - 1
பச்சைப் பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
சோம்பு - கால் டீஸ்பூன்
முந்திரி - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
புதினா, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரியை
வறுத்துக் கொள்ளவும். பிறகு, அதனுடன் 2-3 டீஸ்பூன் எண்ணெயை சேர்த்து
சூடாக்கி, சோம்பு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்க்கவும். இஞ்சி - பூண்டு விழுது,
பச்சைப் பட்டாணி, கீறிய பச்சைமிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி
சேர்த்து வதக்கவும். 3 கப் நீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இப்போது வரகரிசி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் மூடிவைத்து சமைக்கவும்.
வெந்ததும், மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறிதளவு புதினா,
கொத்தமல்லி தூவி, அலங்கரிக்கவும். சூடான, சுவையான, சத்தான, வரகு வெஜ்
கிச்சடி ரெடி!
சிறிய தானியங்கள்... பெரிய சத்துக்கள்!
சிறுதானிய
உணவுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த சித்தமருத்துவர் வேலாயுதம்
பேசும்போது, ''சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே
நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால்,
மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற
கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக்
கொடுப்பதோடு... ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக
இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய
ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மொத்தத்தில்... ஒவ்வொரு சிறுதானியத்துக்கும்
சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும்
தன்மைகள் ஒன்றே'' என்றவர்,
''கைகுத்தல் முறையில் இடித்து, சலித்து, தண்ணீரில்
கழுவி சாதம், பொங்கல் செய்து சாப்பிடலாம். இவற்றுடன் பயறு வகைகளையும்
கலந்து சமைத்தால், கூடுதல் சத்துக்களைப் பெறமுடியும். இப்படி பலவிதமாக
சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்'' என ஆலோசனைகளும் தந்தார்!
Post a Comment