மாணவப் பருவத்தினருக்கு யோகா பயிற்சி! ஆசனம்,
10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டுமொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_15.html
10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த
யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டுமொத்த உடலுக்கும்
கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும்.
கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.
நினைவாற்றல் கூடும்.
தாடாசனம்
இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று
அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்துவிடாது. இந்த ஆசனத்தைத்
தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும்.
இரு
கால்களையும் ஒன்றாகவைத்து நிற்க வேண்டும். கைகள் தளர்வாக பக்கவாட்டில்
இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேலே உயர்த்தியபடியே,
குதிகாலை உயர்த்த வேண்டும். தலைக்கு மேல் கைகள் சென்றதும், கைகளைப்
பிணைத்து முடிந்த வரை முதுகை வளைக்க வேண்டும். ஓரிரு விநாடிகளுக்குப் பின்
மூச்சை வெளியே விட்டபடி கைகளையும் குதிகால்களையும் ஒன்றாகப் பழைய
நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இப்படி ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்: உடலின் அனைத்து தசைகளும் இழுக்கப்பட்டு, நல்ல
ரத்த ஓட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாகிறது. முதுகெலும்பு பலம்
அடைவதால், ஆரோக்கியம் கூடுகிறது. கணுக்கால்கள், கெண்டைக்கால், கைகள்,
தோள்பட்டை தசைகள் கூடுதலாக இழுக்கப்படுவதால் வளரும் பருவத்தினருக்கு
ஏற்றதாக அமையும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு
உடல் புத்துணர்ச்சி அடையும்.
வீரபத்ராசனம்
போர் வீரர்களுக்கான ஆசனம் என்று சொல்வார்கள். எளிமையாகச் செய்து உடலை வலிமையாக்குகிற ஆசனங்களில் இது மிகவும் முக்கியமானது.
நேராக நின்ற நிலையில், இடது காலை முன்பக்கமாக
நீட்டவும். வலது கால் பாதத்தை சற்று வெளிப்புறமாகத் திருப்பி, நேராக நிற்க
வேண்டும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும்
முன்புறமாக மேலே கொண்டுசெல்ல வேண்டும். அதே நேரத்தில் முன்புறம் உள்ள காலை
மடக்கி, இரு கைகளையும் பிணைத்து நன்றாக முதுகை வளைத்து ஓரிரு விநாடிகள்
இருக்க வேண்டும். பிறகு, மூச்சை வெளியேவிட்டுக்கொண்டே, கைகளைக் கீழே
இறக்கியபடி, மடக்கிய முன் கால் முட்டியை நேராக்க வேண்டும். இதேபோல இரு
காலுக்கும் சேர்த்து ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்: மார்பு முழுப் பலம் பெறும். முதுகெலும்பு
வலுப்படும். உடலுக்கு ஒட்டுமொத்த வலிமை கூடுவதால், சோம்பல் நீங்கி, புது
சக்தி பெறுவதை உணர முடியும். அடிவயிறு நன்கு இழுக்கப்படுவதால், அந்தப்
பகுதி நன்றாக வேலை செய்யும்.
அர்த்த உத்தானாசனம்
இரு கால்களையும் சமமாகவைத்து நேராக நிற்க வேண்டும்.
கைகள் பக்கவாட்டிலும், உள்ளங்கைப் பகுதி உடல்பக்கம் இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்தபடியே, இரு கைகளையும், முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்த
வேண்டும். மூச்சை வெளியே விடும்போது முன் பக்கமாகக் குனிந்து, கைகளைப்
பாதங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். இதன் பெயர் உத்தாசனம். இந்த நிலையில்
இருந்து அர்த்த உத்தாசன நிலைக்குச் செல்ல வேண்டும்.
கைகளைப் பாதங்களுக்கு அருகில் வைத்தபடியே, மூச்சை
உள்ளிழுத்து கைகள் மற்றும் மேல் உடலைப் பாதிநிலைக்கு மேலே உயர்த்த
வேண்டும். இந்த நிலையில் நம் உடலானது நன்கு வளைந்திருக்கும். சில
விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு எட்டு முறை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது ஓய்வு
எடுத்துக்கொள்ளலாம். கடைசியில், மூச்சை உள்ளிழுத்தபடி முழுவதுமாக மேலே
வந்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்திய நிலைக்கு வந்து, மூச்சை வெளியே
விட்டபடி கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
பலன்கள்: மார்புப் பகுதி நன்றாக விரிவடைந்து
முதுகெலும்பை உறுதியாக்குகிறது. குறிப்பாக கீழ் முதுகு அதிகமாகப்
பலன்பெறுகிறது. முட்டிகள் உடல் எடையைத் தாங்குவதால், கூடுதல் பலம்
பெறுகின்றன. கைகள், தோல்கள், கால்கள் நீண்ட கால ஆரோக்கியத்துக்குத்
தயாராகின்றன.
கவனம்...
மாதவிடாய்க் காலத்தில் செய்ய வேண்டாம்.
ஆசனங்கள் செய்யவதற்கு முன்பு அமைதியாக நின்று, கண்களை மூடி சிலமுறை மூச்சை
உள்ளிழுத்து வெளியே விடவும். பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்து ஆசனம்
செய்யலாம்.
ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கும் ஏற்றபடி ஆசனங்களில் சில மாற்றங்கள்
தேவைப்படும். எனவே, யோகாப் பயிற்சியாளரின் உதவியுடன் உடலுக்கு ஏற்ற யோகாப்
பயிற்சிகளைச் செய்வதே சரியானது.
Post a Comment