குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்? --- ஹெல்த் ஸ்பெஷல்,

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்கவேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச்சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மனநிலை, நல்ல பழக்கவழக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமம். 
போட்டிகளும் ஆபத்துகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது முதல், பள்ளிக்குச் செல்லும் வரை அதாவது மூன்று வயது வரை உற்சாகமாக வளரக்கூடிய விஷயங்களை இதயபூர்வத்தோடு விவரிக்கிறது இந்த இணைப்பு. 


குழந்தையைத் தூக்கும் முறை:
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.
  குளிப்பாட்டும் முறை:  
பிறந்த குழந்தைகளைத் தாயே பயமின்றிக் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக எண்ணெயை உடலில் தடவி வருடிவிடுங்கள். நாம் தரையில் அமர்ந்தபடி, குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோலத் தூக்கிப் பிடிக்க வேண்டும். குழந்தையின் உடலை பேபி சோப் போட்டுக் குளிப்பாட்டி, பிறகு தலை முகத்தைக் கழுவுங்கள். தலைக்குக் குளிப்பாட்டும்போது, ஒரு கையை அகல விரித்து, குழந்தையின் நெற்றிப் பகுதியைப் பிடித்தபடி, தண்ணீர் ஊற்ற வேண்டும். வாயால் மூக்குச் சளியை எடுக்கிறேன் என்ற பெயரில் வாயால் ஊதுவது, அழுத்துவது கூடவே கூடாது. குளிப்பாட்டிய உடன் தலை, காது, மூக்கு, கழுத்துப் பகுதியை ஈரம் போகத் துவட்டுங்கள். 
வாரம் ஒரு முறை மிகவும் மிதமான வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டுக் குளிப்பாட்டினால், குழந்தை ஆரோக்கியமாக வளரும். நிம்மதியாகத் தூங்கும்.
தாய்ப்பால் ஊட்டும் முறை:
குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் கொடுக்கவேண்டும்.  குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தாய்ப்பால் மிகச் சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க, பால் அதிகம் சுரக்கும். தாய்ப்பால் சரியாகப் புகட்டுகிறோமா? குழந்தை சரியாகப் பால் குடிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் வாய்ப் பகுதி அகலமாக விரிந்திருக்கிறதா என்று கவனியுங்கள். குழந்தையின் முகவாய் தாயின் மார்பைத் தொடுவதுபோல் இருக்கவேண்டும். மார்புக் காம்பின் கரியப் பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்ப்பகுதியைவிட அதிகமாகக் காணப்படவேண்டும். அதாவது கவ்விய நிலையில் இருந்தால் குழந்தை ஆழமாக உறிஞ்சும்.  தாய்க்கும் மார்பு காம்பில் வலி ஏற்படாது. இது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான ஒரு அற்புதப் பிணைப்பை உருவாக்கும்.
தூங்கவைக்கும் முறை:
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம்.  தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும்.  வெயில் காலத்தில் கட்டிலில் படுக்க வைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப் புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள். உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும். குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடும். காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்கவைக்க வேண்டும்.

குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி, இருமல், காய்ச்சல் இவற்றால் அடிக்கடி சோர்ந்துவிடுவது உண்டு. உணவு வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாமல்போவது, செரிமானப் பிரச்னை, வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் வைத்துக்கொள்வார்கள். அதனால், கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்னையை ஏற்படுத்திவிடும். சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்தால், உடலில் இருக்கும் கழிவுகளும் கிருமிகளும் வெளியேற்றப்படும்.  வயிற்றுப்போக்கும் சரியாகும்.
அதிகக் குளிர்ச்சி, தொற்றுநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பல்வேறு நோய்களுக்குத் தண்ணீரே முக்கியக் காரணம். அதனால், தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிக் கொடுப்பது அவசியம். தொற்று நோய்களால் மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை நீடித்தால், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட தேவையற்ற பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால்கூட சளி ஏற்படலாம். சிறுநீர் கழித்ததும், உடனுக்குடன் கவனித்து, மாற்றவேண்டியது அவசியம். 
டயபரை அடிக்கடி மாற்றாமல் போகும்போதும், இறுக்கமாக அணிவிக்கும்போதும் குழந்தைகளுக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்.  டயபரைக் குழந்தைக்குப் போடும்போதே, அதன் கால் இடுக்குப் பகுதியில் பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டுப் போடுங்கள்.  இதனால், குழந்தைக்கு அரிப்பு, அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.
 நோய் தடுக்கும் மருந்துகள்...
குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே மருந்துகள், தடுப்பு ஊசிகளைப் போட்டுவிடுகிறார்கள். அவை என்ன தடுப்பு ஊசி, என்ன மருந்து என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தை பிறந்ததும், காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போடவேண்டும். 
ஒன்றரை மாதத்தில், டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பு ஊசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
  மூன்றரை மாதத்தில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
நான்கரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து.
  ஐந்தரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
  ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசிகள்...
   ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பு ஊசி
   ஒன்றரை வயதில் டிபிடி
   நாலரை வயதில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து. 
இப்படி அந்தந்தக் காலக்கட்டத்தில் கட் டாயம் நோய் தடுப்பு ஊசி, மருந்துகளைப் போடுவதன் மூலம், வருங்காலத்தில் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வது நிச்சயம். 
குழந்தைக்கு நம்பகமான சூழலும், தாயின் அரவணைப்பும் மிகவும் அவசியம். பாசமும், பாதுகாப்பும் இருப்பதைக் குழந்தைக்கு உறுதிப்படுத்தினால்தான் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். தொடுதல், கொஞ்சுதல், பேசுதல் போன்ற செயல்களின் மூலம், குழந்தை நம் முகம் பார்த்து வாயைக் குவித்து வார்த்தைகளை வெளிப்படுத்த முயற்சிக்கும்.  சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
வளர்ப்பவர்களைப் பார்த்தே குழந்தையின் பழக்கவழக்கங்களும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல். ஒரு நாளில் தாய், குழந்தையுடன் செலவிடும் நேரம் குழந்தையின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்களைப் பாராட்டுவதும், சிறு தவறு செய்தால் 'ஸாரி’ கேட்பதும், எடுத்த பொருட்களை அதற்கான இடத்தில் வைக்கப் பழக்குவதும் பெற்றோரின் கடமை.  விட்டுக் கொடுத்துப் போகும் குணம்தான் சமூகத்தில் குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.   
எதைப் பார்த்தாலும், ஆசை எழும்பும் வயது.  அதற்காக, கேட்டதை எல்லாம் வாங்கித் தருவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்களின் குடும்பச் சூழல், வசதி, தேவையைப் புரிந்துகொண்டு,  அதற்கேற்ப வாழும் சூழலை உருவாக்குங்கள். பிஞ்சிலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் வாழும் சூழல், பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். குழந்தையின் மனதில் தேவை இல்லாத ஆசைகள் இருக்காது.  மனக்குழப்பமும் ஏற்படாமல், தெளிவாய் சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.   
நடப்பது, ஓடுவது, விளையாடுவது, எதையாவது எடுத்து வீசுவது என சுட்டிகள் துறுதுறுவென இருப்பார்கள். இதைத் தொல்லையாக நினைக்காமல் பெற்றோரும் கூடவே குழந்தையை உற்சாகப்படுத்தவேண்டும்.  இது பெற்றோருக்கும் ஓர் உடற்பயிற்சிதான். 
பிஞ்சு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பெரியவர்கள் குரலை உயர்த்திப் பேசுவதோ, கத்துவதோ கூடாது. சுற்றி இருக்கும் விஷயத்தைக் கிரகிக்கத்தொடங்கும்போது, சத்தமான பேச்சுகூட குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்தலாம். 
சாப்பிட அடம்பிடித்தாலோ, அழுகையை நிறுத்துவதற்காகவோ குழந்தையிடம் 'பூச்சாண்டி வர்றான் பாரு’ என்று பயம் காட்டிப் பணியவைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. பின்னாளில் உணவையே வெறுக்கும் அளவுக்குச் சாப்பாட்டின் மீதான பிடிப்பு போய்விடலாம். அன்போடு, நெறிக் கதைகளைச் சொல்லி உணவை ஊட்டுவதே சிறந்தது.
சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுவது, சுழற்றி விளையாடுவது என்று விபரீதமாகக் கொஞ்சுவார்கள். இதனால், குழந்தை சிரிப்பதைப் பார்த்து, ரசிப்பதாக நினைத்துக்கொண்டு திரும்பத் திரும்பச் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்.  குழந்தைகளுக்கு மனதளவில் இனம் புரியாத பய உணர்வு ஏற்படும். 'இதைச் செய்யாதே’ எனத் தடை போடுவதே குழந்தையின் பயத்தை அதிகரிக்க செய்யும். அதே எச்சரிக்கையை, 'ஜாக்கிரதையாகப் பண்ணும்மா...’ என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். நல்ல பண்புகளும் வளரும்.
குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததும், வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வரத்தொடங்கும். அடிக்கடித் தடுக்கி விழும்.  குழந்தைகள் நடக்கக்கூடிய இடங்களில் கூர்மையான டேபிள், ஸ்டூல் போன்ற எந்தப் பொருட்களையும் வைக்காதீர்கள்.  தண்ணீர், எண்ணெய் போன்றவை கொட்டிவிட்டாலும், உடனடியாகக் கவனிக்கவேண்டும். குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம். 
அன்பு, பாசம், அரவணைப்பு எனச் சகல சந்தோஷ சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை, தைரியத்துடன் அறிவாளியாகவும் வளர்வார்கள். 
குழந்தைக்குத் தேவையான உணவு உடலில் சேர்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் எடையைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறக்கும்போது 2.75 கிலோ இருந்தால், நான்கே மாதத்தில் அதன் எடை 5 கிலோ இருக்க வேண்டும். எடை ஓரளவு இரட்டிப்பானால்தான், குழந்தை சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம். 
உடை
பிஞ்சுக் குழந்தைகளின் உடை பஞ்சுபோல் மிருதுவாக இருக்கவேண்டும். டிசைன், கலர், அழகு என்பதை மட்டும் பார்க்காமல், உடலை வதைக்காத பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.  ஒரு மாதக் குழந்தைக்கும் இப்போது பாவாடை, சட்டை வந்துவிட்டது. இவற்றைப் போட்டுப் அழகுபார்ப்பது, குழந்தைக்கு இம்சையை ஏற்படுத்தலாம்.  உடைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குழந்தையால் வெளியில் சொல்ல முடியாது.
வெயில் காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின் உடலுக்குப் பாதுகாப்பு. மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவிப்பதை முடிந்தமட்டும் தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், எளிதில் கழற்றி மாற்றக்கூடிய உடைகளை வாங்குங்கள். 
கடைகளிலேயே குழந்தைகளுக்கு உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்கும் நிலை இருப்பதால், புதுத் துணிகளை வாங்கியவுடன், நன்றாக அலசிக் காயவைத்த பிறகே அணிவது நல்லது. 
ஜிகினா, ஜம்கி உடைகளில் பட்டன்கள், ஊக்கு, கொக்கிகள் இருந்தால் அது குழந்தையின் உடலை உறுத்தலாம்.  குழந்தைகள் கையில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அதனால், வெல்க்ரோ, எலாஸ்டிக், லேஸ் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.  மழைக் காலத்திலும், ஸ்வெட்டர் குல்லா போன்றவற்றை உடுத்தும்போது, ஜிப் இல்லாததாகப் பார்த்து, கழுத்துவழியாக மாட்டுவதுபோல் வாங்கலாம்.
குழந்தை 3 மாதத்துக்குள் முகம் பார்த்து சிரிக்கும். நீங்கள் 'ம்...’ என்று சொன்னால், குழந்தையும் 'ம்’ என்று சொல்லும். காதில் வாங்கும் சத்தத்தை உணர்ந்து, திரும்பவும் அதைச் சொல்லிப்பார்க்கும். அதனால், மென்மையான ஒலி எழுப்பிக் குழந்தையை உற்சாகப்படுத்தலாம். 
4-வது மாதம், கவிழ்ந்துகொண்டு, தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க குழந்தை முயற்சிக்கும். குழந்தையை நிற்கவைக்க, இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்து குழந்தையை நிற்கவைக்கலாம்.
5 - 6 மாதங்களில் குழந்தை உட்க£ர முயற்சிக்கும். தலையையும் நெஞ்சையும் உயர்த்தும். எதையாவது பிடித்துக்கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். தரையில் அழுத்தமாக முன்னங்கையை ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்க தொடங்கும். அப்போது, வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். தண்ணீர், பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும். பற்கள் முளைப்பதன் அறிகுறி தென்பட்டாலே, குழந்தை வலியால் அடிக்கடி அழத் தொடங்கும். குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்தைக் கொடுக்கலாம். பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். பால் குடிப்பதைக்கூட குழந்தை மறுக்கும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் தூக்கம் இல்லாமல், புரண்டு புரண்டு படுக்கும். நடு ராத்திரியில் எழுந்து அழத் தொடங்கும்.
7-வது மாதம் - எந்த உறுதுணையும் இல்லாமலே குழந்தை உட்காரப் பழகிக்கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நின்று, தானே நேராக நிற்கப் பழகும்.
8 - 9 மாதங்களில், நன்றாகவே உட்காரும். கால்களில் மொத்த எடையையும் தாங்கிக்கொள்ளப் பழகும். எதைக் கொடுத்தாலும், அதைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும், அடுக்கவும் கற்றுக்கொள்ளும். பத்தாம் மாதம், நன்றாகத் தவழ்ந்துபோய் எல்லாப் பொருட்களையும் எடுக்க ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்துக்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக்கொள்ளும்.
11 - 12 மாதம் - உட்கார்ந்த நிலையில் திரும்பவும், நன்றாக முழங்கால்களை ஊன்றித் தவழவும் முடியும். நேராக நிற்கும். தரையில் எதையாவது எழுதுகிற மாதிரி செய்யும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும், நேராக நிற்கப் பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக்கொள்ளும்.
2 - 3 வயதில்,  அம்மா அப்பா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு, அதற்குப் பதில் சொல்லத் தொடங்கும். பெற்றோர் அதிகம் பேசுவதால் மட்டுமே, குழந்தை நல்ல பேச்சுத் திறனுடன் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த வயதில் குழந்தையுடனான உரையாடல் இல்லாமல் போனால், குழந்தை பேசுவதும் தாமதமாகிவிடும்.  குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், 'ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கிடைப்பதை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான். ஒருவிதப் பயத்தினாலும் சில குழந்தைகள் விரலைச் சூப்பலாம். ஆனால், அதுவே தானாகச் சரியாகிவிடும். 'விரல் சூப்பினால் வாய் பெரிதாகிவிடும் கண்ணா... கிருமிகள் வயித்துக்குள்ள போய் ஃபைட் பண்ணும்’ என்று மென்மையாக ஒரு கதை போல் சொன்னால், நிச்சயம் குழந்தைகள் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். 
குழந்தைகளுக்கான மென்மையான பிரஷினால் பல் தேய்த்து, வாய் கொப்பளித்த பின்னரே வயிற்றுக்கான ஆகாரத்தைத் தரப் பழக்குங்கள். பல் துலக்காமல் சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் போய் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். 
இரண்டு வயது குழந்தைகள் 10 மணி நேரம் நன்றாக உறங்குவார்கள். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்க மாட்டார்கள். அதற்கு வீட்டுச் சூழல், அறையின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணம் இருக்கும். குழந்தை குறைவான நேரமே தூங்கினாலும், சுறுசுறுப்பாக இருந்தால், அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை.
சில குழந்தைகள் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளியேறும். எப்போதாவது இப்படி நிகழ்ந்தால் ஆபத்து இல்லை. ஆனால், தொடர்ச்சியாகப் பச்சை நிறத்தில் இருந்தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. ஒரு வயதான பிறகு சிறுநீர், மலம் கழிப்பது எப்படி என்பதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.   
ஓடிப் பிடித்து விளையாடுவது, விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் ஓவியம், பெயிண்டிங் கற்றுத் தருவது, இசையைக் கேட்கச் செய்வது, களிமண் அல்லது சப்பாத்தி மாவைப் பிசைந்து பலவிதமான உருவங்கள் செய்யச் சொல்வது, பேப்பர்களை மடக்கி விமானம், கப்பல், பூக்கள் செய்யக் கற்றுக்கொடுப்பது எனக் குழந்தைகளுக்கான உற்சாக வழிகளைத் திறந்துவிடுங்கள். குழந்தைகளுக்குப் பயனாக இருக்கும்பட்சத்தில்மட்டும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்காரவையுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைக்கு பேச்சில் பிரச்னை இருக்காது. ஏதாவது ஒரு சுவை மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. கோர்வையாக வார்த்தைகளைப் பேசத் தாமதம் ஆகலாம். ஆகவே, அனைத்து சுவைகளையும் சுவைக்கப் பழக்குங்கள்.   
குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ... அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள். சாப்பிட்டு முடித்த உடன், 'வெரிகுட்’ சொல்லுங்கள். 'சமத்து’ எனக் கொஞ்சுங்கள். குழந்தைத் தானாக முன்வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ, திட்டாதீர்கள். சிந்தாமல் சிதறாமல் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள். துவைத்த துணிகளை மடித்து, குழந்தைகளை பீரோவில் அடுக்கச் சொல்லுங்கள். சுவாரஸ்ய அனுபவமாக நினைத்து குழந்தைகள் அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்கள். வேலை, விளையாட்டு, உணவு என அனைத்தின் வழியாகவும் பழக்கங்களை உருவாக்கலாம். 
சமைக்கும்போது, 'இது தக்காளி, இது வெண்டைக்காய்... இதை நான் நறுக்கப்போறேன்’ என்று காய்கறிகளைக் காட்டி, வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். குழந்தை சுயமாகச் சிந்திக்கவும், அனைத்து செயல்களைத் திறமையாகச் செய்யவும் இது வாய்ப்பாக அமையும். 'செய்யாதே’ எனத் தடுப்பதற்கு முன் எதைச் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஒரு பாராட்டும் முத்தமும் குழந்தையின் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 
குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்குக் கட்டாய உணவு தாய்ப்பால் மட்டுமே.  முதல் 6 மாதங்கள் தாயிடம் இருந்து பால் குடிப்பதால், வைட்டமின் சி கிடைத்துவிடும். அதன் பிறகு தாய்ப்பாலுடன், காய்கறிகள், பழங்கள், சீரான திட உணவைக் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.
கஞ்சிகளைக் கொடுக்கலாம். தானியங்களை நன்றாக அரைத்து, சலித்து, அந்த மாவில் கஞ்சியாக நீர்க்கக் காய்ச்சிக் கொடுக்கவேண்டும். 
   வாழைப்பழம், சப்போட்டா இவற்றை நன்றாக மசித்துத் தரலாம். நன்றாக வேகவைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவை மசித்துத் தரலாம்.
   குழைய வடித்த சாதத்தில் பருப்பை மசித்து, நெய் சேர்த்துத் தரலாம்.  இதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளையும் லேசாக வேகவைத்து மசித்துச் சேர்க்கலாம். 
  இரண்டு ஸ்பூன் கேழ்வரகை முந்தைய நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துக்கொள்ளுங்கள். சிறிது தண்ணீரை அடுப்பில் வைத்து, அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலை விட்டுக் கைவிடாமல் 2 நிமிடம் கிளறவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைக்குப் பால் போஷாக்கான உணவு. ஆனால், பாலை நன்றாகக் காய்ச்சித்தான் தர வேண்டும். அதேபோல் முட்டையை வேகவைத்து அதைக் குளிரவைத்துத் தர வேண்டும்.
தண்ணீரையும் நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குழந்தைக்குக் கொடுக்கலாம். 
குழந்தைக்கு 7 முதல் 8 மாதங்கள் நிறைவடைந்ததும், தயிர் சாதம் கொடுக்கலாம். சிலர் சளி பிடிக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் புண் வராமல் தடுக்கும். அதிக அளவு பழச்சாறுகள்,  காய்கறிகளில் சூப் செய்து தரலாம். அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் குழந்தைக்கு ஏற்றபடி செய்து தரலாம். 
9 முதல் 10-வது மாதத்தில் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா போன்ற வெரைட்டியான பழங்கள், வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் மசித்துக் கொடுக்கலாம். பழச்சாறாகவும் கொடுக்கலாம்.
எந்தப் பழத்தில் சாறு தயாரித்துக் கொடுத்தாலும், அதை வடிகட்டிய பிறகே தரவேண்டும்.  கொட்டைகள் சரியாக அரைபடாமல் இருந்தால், குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கும் அபாயம் இருக்கிறது.  பழங்களைத் தரும்போது அதை நன்றாகக் கழுவி மசித்த பிறகே தர வேண்டும். இட்லி, உப்புமா, சப்பாத்தி, தயிர், வேகவைத்த முட்டை, முள் நீக்கப்பட்ட மீன் தரலாம்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கான காலகட்டம் 7 மாதம் முதல் ஒன்றரை வயது வரை.  இதில் புரதசத்து மிகவும் அத்தியாவசியம். வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ், கொழுப்பு என நிறைய சத்துக்கள் தேவைப்படும்.
6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு மற்ற உணவுகள் தேவைப்பட்டாலும், சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து போன்றவைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்த மூலப்பொருள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை நோய்களில் இருந்து தாய்ப்பால் பாதுகாப்பு அளிக்கிறது. 6 மாதத்தில் இருந்து ஒரு வயது வரை மற்ற உணவுகளுக்கு முன்பாக தாய்ப்பால் தரவேண்டும். குழந்தையின் உணவில், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கிடைக்க, தோல் நீக்கி, வேகவைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள், எண்ணெய், மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும். இரண்டாவது வயதில், தாய்ப்பாலை உணவுக்குப் பிறகும் மற்ற நேரங்களிலும் தரவேண்டும். 
 1 வயது முதல் மூன்று வயது வரை
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது.  ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது.
இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் பழங்களைக் கொடுக்கலாம். 
கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.
இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.
குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது. 
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம்.
சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
 

  அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப்பிலையுடன், பசு மஞ்சளை சேர்த்து அரைத்துத் தடவினால், விரைவில் தழும்பு ஆறிவிடும்.
  சுக்கு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றைப் பாலில் போட்டு வேகவிட்டு, நிழலில் உலர்த்தவும். பச்சிளம் குழந்தைக்குத் தலைக் குளிப்பாட்டும்போது பாலில் வேகவைத்த சாமான்கள், கட்டிப் பெருங்காயம், இவற்றை சந்தனக் கல்லில் ஒருமுறை இழைத்து தாய்ப்பால் சேர்த்துப் புகட்டலாம். சுக்கு, பெருங்காயம் வாயுவைக் கலைக்கும். சித்தரத்தை சளி வராமல் தடுக்கும். ஜாதிக்காய் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மாசிக்காய் வயிறு பிரச்னை இல்லாமல் செய்யும். 
 சளி
  குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், ஒரு கடுகு அளவு கோரோஜின் கலந்து புகட்டினால், சளி வெளியேறிவிடும்.
  கற்பூர வல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
  ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடா இலை இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
  கண்டங்கத்திரி இலையை நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்கவைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
 வயிறு
  பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கு, ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்றாகக் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுங்கள்.  குழந்தையின் வயிற்றில் தங்கியிருக்கும் கறுப்பு மலம் வெளியேறிவிடும்.
  ஏழாம் நாள் தாய்ப்பாலுடன் ஒரு சொட்டு துளசிச்சாறு கலந்து புகட்டினால், சளி கரையும்.
  கொய்யா இலையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால், பேதி நின்றுவிடும்.
  வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் தடவலாம். 
 வசம்பை உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் ஏற்றிய விளக்கில் சுட்டு வைத்துக்கொள்ளவும். குழந்தை வயிற்று வலியால் அழும்போது, சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்துத் தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் சிறிது தேன் கலந்து, குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.
 குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்துப் புகட்டினா,ல் வயிறு மந்தம் சரியாகிவிடும்.
 வயிற்றில் பூச்சி இருந்து குழந்தை அழுதால், வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து சுடுநீர் விட்டு அரைத்து, வடிகட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி இருக்காது. 
செல்லக்குழந்தையிடம் நீங்கள் காட்டும் அக்கறையான கவனிப்பே... ஆரோக்கியம் காத்திடும்.  வாழ்த்துகள்!
- தொகுப்பு: ரேவதி, உமாஷக்தி
படங்கள்: இ.ரா.ஸ்ரீதர், ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், பீரகா வெங்கடேஷ்
தகவல்:  குழந்தைகள் மனநல மருத்துவர் சாந்தி நம்பி, குழந்தைகள் மருத்துவர் ஸ்ரீனிவாசன், சித்த மருத்துவர் கண்ணன், தலைமை ஊட்டச்சத்து ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7568711933652995226

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item