3 வசனங்கள்! ---அமுத மொழிகள்
3 வசனங்கள்! அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில், இறையாலயமாம் பள...
https://pettagum.blogspot.com/2012/05/3.html
3 வசனங்கள்!
அண்ணல்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில், இறையாலயமாம் பள்ளி வாசலில், ஏழை -
எளியவர்களின் தேவைக்காக ஒருபுறம் கோதுமைக் குவியலும், இன்னொருபுறம்
பேரீச்சம் பழங்களின் குவியலும், பிறிதொருபுறம் ஆலிவ் எண்ணெய் நிறைந்த
டீப்பாயும் காணப்பட்டன. மக்கள் சிந்தாமல் சிதறாமல் எடுத்துக் கொள்வதற்காக
தம் தோழர்களில் ஒருவரை அப்பொருளின் பாதுகாவலராகவும் நியமித்திருந்தார்.இரவு
நேரம்! விளக்குகள் அணைந்ததால் கருப்புப் போர்வை போர்த்திக்கொண்டு ஓர்
உருவம் அங்கே வந்து குவித்து வைத்திருந்த பொருள்களை அள்ளிக் கொண்டது.
காவலர் ""யார் நீ?'' என்று கேட்க, ""நான் கடுமையான பசியால்
பாதிக்கப்பட்டவன். அதனால் எடுத்துக்கொண்டேன்'' என்றது.பகலில்
அண்ணலாரிடம் இதைக் கூறினார் காவலர். அப்போது அண்ணலார் கூறியது போல் அடுத்த
இரவிலும் அந்தக் கரிய உருவம் வந்தது. காவலர் அதைக் கெட்டியாகப்
பிடித்துக்கொள்ள, ""என் குடும்பத்தினர் பசியில் இருக்கிறார்கள்'' என்று
சொன்ன அந்த உருவம் மீண்டும் பொருள்களை அள்ளிச் சென்றது. அதன்பின் மூன்றாவது
நாளும் அந்த உருவம் வர, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் காவலர்.
திமிறிய அந்த உருவம், ""உங்களுக்கு திருக்குர் ஆனிலுள்ள மூன்று வசனங்களைக்
கற்றுத் தருகிறேன். அதை ஓதி வந்தால் அச்சம், கவலை, பதற்றம் முதலிய
இன்னல்கள் இல்லாமல் நீங்கள் வாழ்வீர்கள்'' என்று சொல்லி திருமறையின் 2:155,
2:185, 2:186 ஆகிய வசனங்களை ஓதிக் காட்டியது.அடுத்த நாள்
அண்ணலாரிடம், நடந்த நிகழ்வைப் பற்றி காவலர் கூற, ""அவன் ஒரு பொய்யன்; ஆனால்
அவன் ஓதிக்காட்டிய குர்ஆன் வசனங்கள் உண்மையானவை'' என்று அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.அந்த மூன்று வசனங்களின் பொருளை இங்கே காண்போம்:""அல்லாஹ்.
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயகன் வேறு எவருமிலர். அவன் என்றென்றும்
நிலைத்திருப்பவன். அவனை அரி துயிலோ உறக்கமோ பீடிக்கா. வானங்களில்
உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி எவரும்
அவனிடம் பரிந்துரை செய்ய இயலாது.படைப்பினங்களுக்கு
முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான்.
அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்துகொள்ள
இயலாது. அவனுடைய சிம்மாசனம் வானங்களிலும் பூமியிலும் எங்கும் பரந்து
காணப்படுகிறது''.""இறைத்தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு
அருளப்பட்டதை நம்புகிறார். அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும்,
வேதங்களையும், தூதர்களையும் நம்புகிறார்கள். நாம் இறைத்தூதர்களைப்
பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்கள் ஆணைகளுக்கு செவிமடுத்தோம். வழிபட்டோம்.
எங்கள் இறைவா! எங்கள் இறைவா! உன்னிடமே மன்னிப்பு கோருகின்றோம்; மீள்வதும்
உன்னிடமே''""அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள
முடியாத அளவுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை; எங்கள் இறைவா! நாங்கள்
மறந்து போயிருப்பினும் தவறு செய்திருப்பினும் எங்களை குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றவர் மீது
சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக''.இம்மூன்று
வசனங்களை நினைவுபடுத்திய அந்தக் கருப்பு உருவம் யார் தெரியுமா? மனித குலப்
பகைவனான ஷைத்தான்தான். எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி நம் கவலை, துன்பம்,
அச்சம் நீங்கி வாழ்வோமாக!
Post a Comment