மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஷபானா! சபாஷ் பெண்ணே!!---உபயோகமான தகவல்கள்
சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும், 25 வயதான ஷபானா, காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள்; வழக்கு விஷயங்களுக்காக தேடி வந்துவிட்டால் போதும்......
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7898.html
சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும், 25 வயதான ஷபானா, காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள்; வழக்கு விஷயங்களுக்காக தேடி வந்துவிட்டால் போதும்... அவர் களுக்காக, கட்டணம் பெறாமல் வாதாடி, நீதியைப் பெற்றுக் கொடுக்கிறார்.
இப்படி ஒரு சமூக சேவையில் ஆர்வம் வந்தது எப்படி? என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில்:
கடந்த 2009-ம் ஆண்டில் ஒரு நாள், தன் தந்தையை மீட்டுத் தருமாறு, ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு செய்திருந் தார் ஒருவர். வாய் பேச முடியாத, காது கேட்காத தன் தந்தையை, சொத்துக்காக, அவரது உறவினர் கள் சிலர், அவர்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி, தன் தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை வாங்கி கொண்டதாகவும், அந்த நபர், தன் மனுவில் கூறியிருந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட, காது கேட்காத, வாய் பேச முடியாத பெரியவர், கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரிடம் மகனுடன் செல்கிறீர்களா அல்லது சொந்தக்காரர்களுடன் செல்கிறீர்களா? என்று கேட்டார். ஆனால், அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.
அப்போதுதான், அவருக்காக பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாய் பேச முடியாத, காது கேட்காதவர்கள் பேசும், சைகை பாஷை எனக்கு தெரியும் என்பதால், நீதிபதி கேட்ட கேள்விகளை, அந்த பெரியவரிடம் கேட்டேன். அப்போது தான், சொத்துக்காக உறவினர்கள் செய்த கொடுமைகளை விவரித்தார். அவர் கூறியதை நீதிபதியிடம் எடுத்துக்கூறி, நல்ல தீர்ப்பு வாங்கிக் கொடுத்தேன். நான் இந்த வழக்கில், சிறப்பாக வாதாடியதற்காக, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் சார்பில், எனக்கு விருதும் கிடைத்தது.
இந்த வழக்கிற்கு பின், தமிழகத்தில் உள்ள எந்த கோர்ட்டிலும், வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுக்காக நான் ஆஜராகி வாதாடுவதற்காக, என் பெயரை, பரிந்துரை செய்தார் நீதிபதி. ஆனால், அதற்கான உத்தரவுதான் ஏனோ இன்னும் வரவில்லை.
அந்த உத்தரவு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் சென்று, வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுக்காக வாதாடுவேன். வாய் பேச முடியாத, காது கேட்காதவர்களுடன் பேசும் சைகை மொழியை எப்படி கற்றுக்கொண்டேன் என்றால், என் தந்தையின் நண்பர் ஒருவருக்கு வாய் பேச முடியாது; காதும் கேட்காது. அவரது மனைவியும் அப்படித் அந்த மாமாவின் மடியில் வைத்துதான், எனக்கு பெயர் சூட்டினர். மேலும், அவரது வீட்டில் தான், நான் வளர்ந்தேன். அவர்களது வீட்டிலேயே நான் வளர்ந்த தால், அவர்களின் சைகைமொழி, எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், என் தந்தையும் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார். அதை பார்த்து வளர்ந்த நானும், என் அப்பா வழியில், இப்போது என்னால் முடிந்த உதவிகளை, மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்.
நம்மால் வாய் பேச முடியும், காதால் கேட்க முடியும். அப்படியிருந்தும் நம்முடைய பேச்சில், சில நேரங்களில், தவறு ஏற்பட்டு விடலாம். ஆனால், வாய் பேச முடியாத, கேது கேட்காதவர்கள், அப்படி இல்லை. அவர்களுக்கு ஒரு விஷயத்தை உள்வாங்கும் திறன், கவனிக்கும் திறன் அதிகம். அதே நேரம் கோபப்படவும் செய்வர். அவர் களிடம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தங்களது வேலையை, தாங்களே செய்து கொள்வர். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பர். எந்த முடிவு எடுத்தாலும், நல்ல முடிவாக எடுப்பர். இவர்களுக்காக நான் எப்பொழுதும் உதவி செய்ய காத்திருக்கிறேன். அவர்களது வழக்குகளுக்காக, கண்டிப்பாக பணம் வாங்கமாட்டேன்...' என்று பெருந்தன்மையுடன் கூறும் ஷபானா, இந்த சின்ன வயதிலேயே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
Post a Comment