முதலூர் 'மஸ்கோத் அல்வா’! --சமையல் குறிப்புகள்
முதலூர் 'மஸ்கோத் அல்வா’! பொதுவா அல்வா தயாரிப்புல எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய் பயன்படுத்துறது வழக்கம். ஆனா... மஸ்கோத் அல்வாவுல தரமான த...
முதலூர் 'மஸ்கோத் அல்வா’!
பொதுவா அல்வா தயாரிப்புல எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய் பயன்படுத்துறது வழக்கம். ஆனா... மஸ்கோத் அல்வாவுல தரமான தேங்காய்ல இருந்து எடுக்கற பால்தான் முக்கிய மூலப்பொருள். துளி அளவும் எண்ணெய் சேர்க்கிறதில்லை''
தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம்.
செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றிவிடுங்கள்.
இப்படி ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு பிழிந்து பால் எடுத்து, சேகரித்த தண்ணீரை ஓர் இரவு முழுக்க மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கெட்டியான மைதா பால் அடியில் தங்கியிருக்கும். தண்ணீரை வடிகட்டி, மைதா பாலை தனியே எடுக்க வேண்டும் (ஒன்றரை கிலோ மாவில் இருந்து முக்கால் கிலோ மைதா பால் கிடைத்திருக்கும்). இந்தப் பாலுடன், 30 தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட பாலையும், தேவையான அளவு தண்ணீரையும் கலந்து கொள்ள வேண்டும். அகலமான வாய் கொண்ட சட்டியை அடுப்பில் வைத்து, கலந்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 5 கிலோ சர்க்கரை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறவேண்டும்.
வீட்டில் செய்யப் போகிறீர்கள் என்றால்... பொறுமை நிறைய தேவைப்படும். இரண்டு மணி நேரம் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் ஆவியாகி, தேங்காய்ப்பாலில் இருந்து தேங்காய் எண்ணெய் வெளிப்பட்டு மாவின் மேல் மெதுவாக பரவ ஆரம்பிக்கும். தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருந்தால் கெட்டியான பதத்துக்கு வந்துவிடும். சரியாக இரண்டு மணி நேரம் ஆனதும் ட்ரேயில் ஊற்றி, ஒரு நாள் முழுக்க ஆற வைத்தால்... உங்களை சொக்கிப் போக வைக்கும் சுவையில் மஸ்கோத் அல்வா ரெடி.
குறிப்பு: அதிகமாக தேங்காய் சேர்ந்திருப்பதால், அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை மட்டுமே இதை வைத்திருந்து சாப்பிட முடியும்.
Post a Comment