சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில், பரோட்டா உதிர், உதிராக வர என்ன செய்ய வேண்டும்?
கே & ப ‘‘நான் பல தடவை பரோட்டா செய்தும், கடையில் வாங்குவது போல் வரவில்லை. காய்ந்த மாதிரி வருகிறது. உதிர், உதிராக வர என்ன செய்ய வேண்டும்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_4027.html
கே & ப
‘‘நான் பல தடவை பரோட்டா செய்தும், கடையில் வாங்குவது போல் வரவில்லை. காய்ந்த மாதிரி வருகிறது. உதிர், உதிராக வர என்ன செய்ய வேண்டும்? விளக்கமாக சொல்லுங்கள், ப்ளீஸ்...’’
‘‘ஓட்டலில் செய்வது போன்றே உதிர் உதிராக வரும் பரோட்டாவை வீட்டிலும் சுலபமாக தயாரிக்க முடியும்.
ஒரு கப் மைதாவில், கால் கப் பால், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு சிட்டிகை சோடா மாவு, ஒரு டீஸ்பூன் நெய், கால் டீஸ்பூன் உப்பு ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, சற்று இளக்கமாகப் பிசையுங்கள். பிசைந்த மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி, ஒரு தட்டால் மூடி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, நாம் வழக்கமாகப் போடும் சப்பாத்தியை போல் இரு மடங்கு பெரிதாக வருவது போல மெல்லிய சப்பாத்தியாகத் தேயுங்கள். அதன் மீது சிறிது எண்ணெய் தடவுங்கள். பிறகு, ஒரு டீஸ்பூன் மைதாவை சப்பாத்தி மீது பரவினாற்போல தூவுங்கள். பின்பு, புடவைக்குக் கொசுவம் வைப்பதுபோல சப்பாத்தியை மடியுங்கள். அதைச் வட்டமாகச் சுருட்டி, மாவைத் தொட்டுக்கொண்டு, சற்று கனமான பரோட்டாக்களாகத் தேயுங்கள்.
தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டி வைத்துள்ள பரோட்டாக்களைப் போட்டு, இருபுறமும் திருப்பிவிட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுங்கள்.
நாலைந்து பரோட்டாக்களை இதேபோல் சுட்டெடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, பக்கவாட்டில் இருபுறமும் இரு உள்ளங்கைகளாலும் நன்றாக அழுத்தி தட்டுங்கள். இப்போது இதழ், இதழாகப் பிரிந்து, ஓட்டல் பரோட்டாவை மிஞ்சிவிடும் உங்கள் பரோட்டா!’’
Post a Comment