ரசிக்க ருசிக்க…! சுவையான பிஸிபேளாபாத்
பிஸிபேளாபாத் தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, புளி - ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்த...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1616.html
பிஸிபேளாபாத்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, புளி - ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள். கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள். குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள்.
பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள். எண்ணெய், நெய் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள். விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.
குறிப்பு: கொப்பரை என்பது தண்ணீர் சத்து இல்லாமல் இருக்கும். அது கிடைக்காத பட்சத்தில், தேங்காய் துருவலை, தண்ணீர் சத்து போக வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்துச் சேர்க்கலாம்.
Post a Comment