பழங்களின் பயன்கள்! பழங்கள் பலவிதம்
பழங்கள் பலவிதம் விளாம்பழம்: உடலுக்கு நல்ல இரத்தத்தைத் தரும் தன்மை கொண்டது இந்தப் பழம். வெப்பத்தைத் தணித்துத் தாகத்தையும் தீர்க்கும் தன்மைய...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8323.html
பழங்கள் பலவிதம்
விளாம்பழம்:
உடலுக்கு நல்ல இரத்தத்தைத் தரும் தன்மை கொண்டது இந்தப் பழம். வெப்பத்தைத் தணித்துத் தாகத்தையும் தீர்க்கும் தன்மையுடையது; நல்ல பசியையும் உண்டாக்கும்.
இலந்தைப் பழம்:
பித்த மயக்கத்தை நீக்கும் தன்மை இதற்கு உண்டு. பெரு விரக்தியைத் தணிக்கும். வாத நோயைக் குணப்படுத்தும். எனவே, இது சிறந்த மருந்துப் பொருளாகிறது.
வாழைப்பழம்:
உடம்பை வெளுக்க வைக்கும் சோம நோய் (சோவை நோய்) பித்த பிணிகள், மூர்ச்சையடைதல் இவை குணமாகும். செவ்வாழை, வெண் வாழை, ரஸ்தாளி, மொந்தன், அடுக்குவாழை, மலை வாழை, பச்சை வாழை, கருமை வாழை ஆக இந்த எட்டு வகையான வாழைப் பழங்களுள், செவ்வாழையிலிருந்து மொந்தன் வாழை வரை நோயாளிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஆனால், வாதநோய் உள்ளவர்களுக்கு இந்த எட்டு வகையான வாழைப் பழங்களும் கொடுக்கக் கூடாது.
பேயன் வாழைப்பழம்:
இது நல்ல குளிர்ச்சியைத் தரும் பழமாகும். உடல் சூடு தணியும்; வைத்தியம் தெளியும். ஆனால், வாதத்திற்கு இது பொருந்தாது. வாத நோயாளிகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. இது அதிகக் குளிர்ச்சியுடையதாகையால் வாதத்தைப் பெருக்கும் தன்மை கொண்டதாகும்.
மொந்தன் வாழைப்பழம்:
அக்கினி மந்தம்; வாத வலி, சீதளம் இவை உண்டாகும். மனவுறுதியைக் குலைக்கிற பித்தம், காமாலை, உள்வறட்சி ஆகியவற்றைக் குணப் படுத்தும் தன்மை கொண்டதாகும்.
நாரை வாழைப்பழம்:
இந்தப் பழத்தால் மந்த அக்கினி, நமைச்சல், வாதம், கபம், கரப்பான் இவை பெருகும். எனவே, இந்தப் பழம் உடலுக்கு நல்லதல்லவாம்.
பலாப் பழத்தின் குணம்:
வாத பித்த நோய்களை இந்த இனிப்புச் சுவையுடைய பலாப் பழம் உண்டாக்கும். மேலும், இது கரப்பானையும் ஏற்படுத்தும்.
மாம்பழம்:
நல்ல இனிய சுவையுடையதாக இருந்தாலும். இது நமைச்சலையும், மார்பு எரிச்சலையும், கண் நோயையும், கருங்கரப்பானையும், கிரந்திப் புண்ணையும் அதிகரிக்கும்; பசியைப் போக்கும்.
தசை அத்திப் பழம்:
தசைப் பகுதி நிறைந்த அத்திப் பழம் இரத்தத்தை விருத்தி செய்யும்; தேகத்திற்கு நல்ல வலிமை தரும். சுர வெப்பு நீங்கும்; மலக்கட்டை அறுக்கும்.
விதை அத்திப்பழம்:
நிறைய அளவில் விதையுள்ள அத்திப் பழம் நல்ல முறையில் மலம் கழிவதற்குத் துணை செய்யும். தேக உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு. பித்த நோயின் வேகத்தையும் இது குறைக்கும்.
புளியம் பழம்:
புளியம் பழத்தைத் தின்றால் மந்த புத்தி ஏற்படும்; பித்த வாத, கப நோய் ஏற்படும்; சந்நிபாத சுரங்கள் ஏற்படும்; நரைதிரை இவை விரைவில் உண்டாகும். இவை தவிர வாந்தியும் பித்தமும் ஏற்படும்.
பனம்பழம்:
பனம்பழம் கிடைக்கும். காலத்தில் இதை அடிக்கடி உண்ணக் கூடாது. கரப்பான், சிரங்கு இவை ஏற்படும். பித்த நோய்கள் ஏற்படும். எனவே, இதை விரும்பிச் சாப்பிடக் கூடாது.
தேற்றான் பழம்:
தேற்றான் பழத்தால் வாதநோய்கள் குணமாகும். இருமல், சுவாசமூட்டுதல் இவை குணமாகும். மலக்கட்டை அறவே நீக்கும். வாந்தியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
நாவல் பழம்:
அக்கினி மாந்தம், உடல் நோய் இவை ஏற்படும். அதிக வெப்ப நோயும், தாகமும் தீரும்.
வெள்ளை நாவல் பழம்:
வெள்ளை நாவல் பழமானது இரத்தத்தை விருத்தி செய்வதுடன் தாதுவையும் நன்கு விருத்தி செய்யும். உடலிலுள்ள சூட்டைத் தணிக்கும் ஆற்றல் பெற்றதாகும் இது!
சம்புநாவல் பழம்:
இந்த சம்பு நாவல் பழம், காட்டில் தான் கிடைக்கும். இந்தப் பழத்தை உண்டால் வாத, பித்த நோய்கள் குணமடையும்.
முந்திரிப் பழம்:
அளவு கடந்த தாகத்தையும் உடல் வெப்பத்தையும் தணிக்கும் தன்மையுடையது. கரப்பான், சிரங்கு இவை உண்டாகும்.
தமரத்தம் பழம்:
வாத பித்தம், வாதகபம், குரல் கம்மல், கண் நோய், தாது ஒழுகுதல் ஆகிய இந்த நோய்கள் குணமடையும். சித்தப் பிரமையும் இந்தத் தமரத்தம் பழத்தை உண்ணக் குணமாகும்.
கொய்யாப் பழம்:
இது உடம்புக்கு அவ்வளவு நல்ல பயனைத் தராது. கப, வாத, பித்த நோய்களை உண்டு பண்ணும். மேலும் மந்தம், வாந்தி, வயிறு உப்பல் இவை உண்டாகும். கரப்பான் நோய் அதிகரிக்கும்.
எலுமிச்சம் பழம்:
தாகத்தைத் தீர்க்கும் தன்மை கொண்டது; நகச் சுற்றுக்கு நல்ல மருந்தாகும். பித்த நோய், கண் நோய் இவைகளுக்கும் நல்ல மருந்தாகும். காது வலி, வாந்தி இவை குணமாகும்.
நார்த்தம் பழம்:
பித்த நோய் குணமாக நார்த்தம் பழமானது பெரிதும் துணை செய்யும். தாது விருத்திக்கு இது பெரிதும் உதவுகிறது.
சாதி நாரத்தைப் பழம் - கொலுஞ்சி நாரத்தைப் பழம்
விடாத தாகத்தைத் தணிக்க நல்ல சாதி நாரத்தைப் பழம் உதவுகிறது. கொலுஞ்சி நாரத்தம் பழமானது. நாவறட்சியை விலக்கும் தன்மை கொண்டது.
சீத்தாப் பழம்:
இது உடலுக்கு நல்லதல்ல. அக்கினி மந்தமும் சித்தப் பிரமையும் இதனால் உண்டாகும். எனவே, இதை உண்ணாமல் இருப்பது நல்லதாகும்.
மாதுளம் பழம்:
மாதுளம் பழம் பல விதமான நன்மைகளைச் செய்வதாகும். வாந்தி, கபம், பித்த நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மலட்டுத் தன்மை நீங்கும். வாந்தி, வாயில் அடிக்கடி நீர்ச் சுரக்கும் தன்மை, விக்கல், மாந்தம், நெஞ்செரிவு, கடுமையான காய்ச்சல், காதடைப்பு இவை நீங்கும். இந்தப் பழத்தின் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
கொமட்டி மாதுளம் பழம்:
கொமட்டி மாதுளம் பழத்தால் பித்த நோய்கள், சிலேஷ்ம தோஷம், காசநோய் இவை குணமாகும்.
பேரீச்சம் பழம்:
பித்த நோய்களை அறவே நீக்கச் செய்யும் தன்மை பேரீச்சம் பழத்திற்கு உண்டு. ரத்தம், பித்தம், நீரிழிவு போன்ற கொடிய நோய்களையும் இது குணப்படுத்துகிறது. மலக்கட்டுப்பாட்டை நீக்குகிறது.
சிற்றீச்சம் பழம்:
சிற்றீச்சம் பழம் உடலுக்கு நன்மை தருவது அல்ல. சீத பேதியையும், உழவை நோயையும் உண்டு பண்ணும். சிரங்கு, கரப்பான் இவைகளையும் உண்டு பண்ணும். இதைத் தொடர்ந்து உண்டால் அறிவு வளர்ச்சி பெறாமல் மங்கிபோகும்.
பூந்தாழம் பழம்:
மேக வெள்ளை, வாந்தி, பித்த நோய், தாகம் இவைகள் குணமாகும்; உடலுக்கு நல்ல அழகு கிடைக்கும்.
கத்திரிப் பழம்:
பித்த நோய்கள், கரப்பான், கொடிய நோயான குஷ்டநோய், உடல் வெப்பமடைதல், சுக்கிலக்குறைவு உண்டாகும்.
கண்டங்கத்திரிப் பழம்:
இருமல், மூச்சு வாங்குதல், காசம், கபம் பல்லரணை ஆகிய இவைகளை இந்தக் கண்டங்கத்திரியானது நீக்கும் தன்மை பெற்றுள்ளது.
மிளகாய்ப்பழம்:
மிளகாய்ப் பழத்தால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் ஏற்படுவதில்லை. தாது விருத்தியாகும். ஆனால், விளையும் தீமைகளே அதிகமாகும். ரத்த மூலம், ஆசனக் கடுப்பு இவை உண்டாகும். எனவே, எவ்வளவு குறைவாக மிளகாய்ப் பழத்தை உபயோகிக்க முடியுமோ அந்த அளவிற்கு உடலுக்கு நல்லதாகும்
சிறிய கொடி முந்திரிப் பழம்:
இதைத்தான் திராட்சைப்பழம் என்கிறோம். தாகத்தைத் தீர்க்கும் தன்மையும், நாட்பட்ட புண்களை ஆற்றும் தன்மையும் இது கொண்டது. பித்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேக நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும் இது.
பெருங்கொடி முந்திரிப்பழம்:
பெருங்கொடி முந்திரிப் பழத்தால் சோகை நோய் குணமாகும்: செடி கொடிகளினால் ஏற்படும் நச்சுத் தன்மை முறியடிக்கப்படும்; உன்மத்தம்; மூத்திர நோய் ஆகியவை குணமாகும்.
தூதுளம் பழம்:
தூதுளம் பழம் கப நோய்களைக் குணமாக்கும் தன்மை கொண்டதாகும். கபக்கட்டு கரையும். நீர்க்கோவை நீங்கும்.
பாகல் பழம்:
நாட்பட்ட காய்ச்சல், மேக நோய்கள், காசநோய், வாத, பித்த நோய்கள், கொடிய குஷ்ட நோய் ஆகிய இவை குணம் பெறும்.
சவுரிப் பழம்:
தலைவலி, குடைச்சல் உடல் கடுப்பு ஆகியவைகளைச் சவுரிப் பழத்தினால் குணம் பெறச் செய்யலாம்.
டிப்ஸ்
பித்த நோய்களை அறவே நீக்கச் செய்யும் தன்மை பேரீச்சம்பழத்திற்கு உண்டு. ரத்தம், பித்தம், நீரிழிவு போன்ற கொடிய நோய்களையும் இது குணப்படுத்துகிறது. மலக்கட்டுப்பாட்டை நீக்குகிறது.
Post a Comment