நற்கூலி வேண்டுமா? நபிகள் நாயகத்தின் அமுத மொழிகள்,
நற்கூலி வேண்டுமா? ஒருமுறை நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் ஓரிடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்யும் வழியில் ஒர...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7945.html
நற்கூலி வேண்டுமா?
ஒருமுறை நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் ஓரிடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்யும் வழியில் ஒரு தோட்டம் இருந்தது.
அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு ஒட்டகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட நாயகம், மன வருத்தப் பட்டார். ஒட்டகத்தின் உரிமையாளர் அதை பட்டினி போட்டுள்ளதைப் புரிந்து கொண்டார்.
நாயகம் அந்த ஒட்டகத்தை பரிவுடன் தடவிக்கொடுத்து, உரிமையாளரை அழைத்து, ""நீங்கள் இந்த வாயில்லா ஜீவனின் துன்பம் கண்டும், அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா?'' என்றார்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிருகங்களை பட்டினி போடுவது இறைவனுக்கு எதிரான விஷயம் என்பது தான். இதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.
ஒரு மனிதன் பயணித்துக் கொண்டிருந்த போது, வழியில் தாகம் ஏற்பட்டது. அவன் ஒரு பாழடைந்த கிணற்றிற்குள் இறங்கினான். தண்ணீர் குடித்து விட்டு மேலே வந்த அவன், ஒரு நாய் அங்கு கிடந்த ஈர மண்ணை நக்குவதைப் பார்த்தான்.
மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி, தோலால் செய்யப்பட்ட தனது கால்உறையில் தண்ணீர் கொண்டு வந்து, அந்த நாயின் வாயைப் பிடித்து அதற்கு தண்ணீர் புகட்டினான்.
இந்த நற்செயலுக்காக அல்லாஹ் அந்த மனிதனின் பாவங்களை மன்னித்தார். இதையே, ""ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிடைக்கின்றது,'' என்கிறார் நபிகள் நாயகம்.
பழிக்குப்பழி கூடாது
சிலர் தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கு, அதைப்போலவே துன்பம் உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுவர். இவ்வாறு இருத்தல் கூடாது,
பழிவாங்கும் குணத்தை அறவே விட்டொழிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.
அல்லாஹ்விடம் மூஸா (அலை) என்ற வானதூதர், ""என் அதிபதியே! உன் அடியார்களில் உனது அன்பிற்குரியவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் சொன்ன பதில் உலகில் அனைவருக்கும் ஏற்புடையது.
"" எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகின்றாரோ, அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்கு உரியவர் ஆவார்,'' என்று. ஆம்! ஒருவர் உங்களுக்கு தீமையே செய்திருந்தாலும் அவரை பழிவாங்கும் எண்ணம் உங்களிடம் இருக்க கூடாது. மாறாக அவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.
பொய் சொல்லாதீர்!
நபிகள் நாயகத்திற்கு திருமணமாகியிருந்த வேளை. புதுமணப் பெண்ணை நாயகத்திடம் அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு சென்றதும் நாயகம் ஒரு பாத்திரம் நிறைய பாலை எடுத்து வந்து குடித்தார். மீதியிருந்ததை தன் மனைவியிடம் நீட்டினார். அம்மையார் வெட்கத்தின் காரணமாக அதைக் குடிக்க சங்கோஜப்பட்டார். ஆனாலும் கணவரிடம் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக, ""இப்போது எனக்கு பசியில்லை,'' என்றார்.
நாயகம் அதைப்புரிந்து கொண்டு, ""நீர் ஒப்புக்காக கூட பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்கக் கூடாது,'' என்றார். மிக மிக சாதாரண விஷயத்துக்கு பொய் சொல்வதைக் கூட நாயகம் தடுத்தார். பெற்றோர்கள் குழந்தைகளை, சிறுவயதிலிருந்தே விளையாட்டுக்கு கூட பொய் சொல்லாதிருக்கும்படி வழி நடத்த வேண்டும்.
கட்டுப்பாடு
மூன்று உணர்வுகளுக்கு மனிதன் மிக அதிகமாக ஆட்படுகிறான்.
அவை கோபம், மகிழ்ச்சி, வலிமை ஆகியன.
இதுபற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
ஒருவருக்கு கோபம் வரும்போது, பிறருக்கோ, தனக்கோ துன்பம் தரும் செயலை செய்யாத அளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியோடு இருந்தால், மகிழ்ச்சியின் எல்லை ஒரு கட்டுப்பாட்டுக்குள், சத்திய வட்டத்திற்குள் இருக்க வேண்டும். வலிமையை பயன்படுத்தும் நேரத்தில், அதன் உதவியால் பிறர் பொருளை அபகரித்து விடக் கூடாது.
Post a Comment