உணவே மருந்து! கருணைக் கிழங்கு புட்டு-- கருணைக் கிழங்கு மசியல்
கருணைக் கிழங்கு புட்டு கருணைக்கிழங்கு - 1/2 கிலோ வெல்லம், கருப்பட்டி- 200 கிராம் (பொடித்து கொள்ளவும்) செய்முறை: கருணைக்கிழங்கை வேக வைத்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6227.html
கருணைக் கிழங்கு புட்டு
கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
வெல்லம், கருப்பட்டி- 200 கிராம்
(பொடித்து கொள்ளவும்)
செய்முறை: கருணைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து ஒரு துருவியை கொண்டு துருவி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது வேண்டிய அளவு எடுத்து நீர் தெளித்து ஆவியில் வேக வைத்து, புட்டு அவிப்பது போல் அவித்து, கருப்பட்டி, அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
மூலநோய்க்கு சிறந்த மருந்தான இது, ஜீரணசக்தியையும் அதிகரிக்கும்.
கருணைக் கிழங்கு மசியல்
கருணைக் கிழங்கு - 1/4 கிலோ
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2 - பொடியாக அரிந்து கொள்ளவும்
கொத்தமல்லி தழை- கைப்பிடி அளவு
எலுமிச்சம் பழம் - 1
(அல்லது) கடைந்த தயிர்- 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 1 தேக்கரண்டி.
செய்முறை: கருணைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவு வாணலியில் எண்ணைய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து, உப்பு விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் அடுப்பை அனைத்து சிறிது ஆறிய பின் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சம் பழ சாறு கலந்து, நன்கு கிளறி பரிமாறவும். எலுமிச்சம்பழ சாற்றிற்கு பதிலாக கடைந்த தயிரை சேர்த்துக் கொள்ளவும்.
இந்த மசியல் சுவையாக இருக்கும் அதே சமயம் மூல நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. சாதத்துடன் அல்லது சப்பாத்தி, பொங்கலுக்கு துணையாக செய்து சாப்பிடலாம்.
ஜீரண சக்தி குறைவதால் உண்டாக கூடிய நோய்களின் மிக முக்கியமான நோய் மூலநோய். மூல நோய் ஆசன வாயில் தோன்றும் ஒரு கொடிய நோய். ஜீரண சக்தி கேடு அடையும் ஆரம்ப காலங்களில் அதை சீர் செய்யத் தவறினால் படிப்படியாக ஜீரணக் கோளாறுகள் பெருகி மூல நோயில் கொண்டு வந்து நிறுத்தும். ஜீரண சக்தி குறைவதால் குடல் பகுதிகளில் மலம் தங்கி ஆசன வாயில் முளைகளை ஏற்படுத்தும். வாயுவும் குடலை அடைத்து, தொடை, இடுப்பு, ஆசனப் பகுதிகளில் கடுமையான வலியையும், வேத னையையும் ஏற்படுத்தும்.
ஜீரண சக்தி குன்றும் பொழுது இந்நோய் தீவிரமடையும். மூலநோய் தோன்றுவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். உணவு செரிக்காமல் இருப்பது, உடல் சோர்வு, பலவீனம், வயிற்றில் ஓசை, அதிகமான ஏப்பம், தொடைப் பகுதிகளில் சோர்வு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். நாம் உடனே தகுந்த சிகிச்சை மேற்கொண்டு அதை மூளை யிலேயே தடுக்காவிடில் மூலநோய் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்.
மூல நோயை குணப்படுத்தக் கூடிய மிக அருமையான உணவு கருணைக்கிழங்கு. சித்த மருத்துவத்தில் தேரையர் நோய் அணுகாவிதி என்ற நூலில் மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்' என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டுமே சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது.
கருணைக்கிழங்கு ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது, பசியை உண்டாக்கும் இயல்புடையது. உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை குறைக்க வல்லது. மூல நோய்க்கு அளிக்கப்படுகின்ற முக்கியமான மருந்து களில் ஒன்று கருணை லேகியம். கருணைக்கிழங்கு சிறிது காரல் தன்மையுள்ளதால் கிழங்கை வேக வைக்கும் போது சிறிது புளியிட்டு வேக வைத்தால் காரல் தன்மை குறையும். கருணைக்கிழங்கை சிறிது நாள் வைத்திருந்து சமைக்கும் போது காரல் தன்மை குறையும்.
Post a Comment