சம்மருக்கு சவால் விடும் சூப்பர் மருந்து! தர்பூசணி பழங்கள்
சம்மருக்கு சவால் விடும் சூப்பர் மருந்து! கோடை காலம் துவங்கியே விட்டது என்பதை நிரூபிக்கின்றன தெருவெங்கும் குவிந்திருக்கும் தர்ப...
https://pettagum.blogspot.com/2011/01/blog-post_6170.html
சம்மருக்கு சவால் விடும் சூப்பர் மருந்து!
கோடை காலம் துவங்கியே விட்டது என்பதை நிரூபிக்கின்றன தெருவெங்கும் குவிந்திருக்கும் தர்பூசணி பழங்கள். வெயிலின் கடுமையைப் போக்கி குளிர்ச்சி தருவதில் மட்டுமல்ல.. சருமத்தைப் பாதுகாப்பதிலும் தர்பூசணி தன்னிகரற்றதுதான்!
ரொம்பவும் டல்லாக உணர்கிறீர்களா? 'முகம் வாடிப் போயிருக்கே!' என்று ஆளாளுக்கு விசாரிக்கிறார்களா?
கவலையை விடுங்கள். தர்பூஸ் இருக்க கவலை ஏன்? தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.
வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூஸ்.
ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படிச் செய்து வர.. சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது!
வறண்ட சருமத்தினருக்கு வேறு சிகிச்சை சொல்கிறேன்.. வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.
எண்ணெய்ப் பசை சருமத்தினர் 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.
தர்பூசணி மட்டுமல்ல.. அதன் விதையும்கூட அருமையான மருந்து! கூந்தலை பராமரிப்பதில் அதற்குப் பெரும்பங்கு இருக்கிறது.
அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.
தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.
கூந்தலின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது தர்பூசணி விதை.
சீயக்காய் - 100 கிராம், தர்பூசணி விதை - 100 கிராம். வெட்டிவேர் - 20 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம்.. இவற்றை உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரால் தலையை அலசி வர, பட்டுப் போல மின்னும் கூந்தல்.
சிலருக்கு முகத்தில் பழுப்பு நிற மங்குகள் தோன்றி அழகை கெடுக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வைத் தருகிறது தர்பூஸ்.
ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது தர்பூசணி.
2 டீஸ்பூன் கடலை மாவு (அ) பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.
"சிறுநீரை பெருக்கும்!"
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை.
''தர்பூசணியில் 95.7% நீர்ச் சத்து இருப்பதால், உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்வை அள்ளித் தரும்.
தர்பூசணி அருமையான சிறுநீர் பெருக்கி. தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதால் கோடை வியாதிகளான நீர்க் கடுப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன் போன்றவை பக்கத்திலேயே வராது.
பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.
இதில் இருக்கிற 'வைட்டமின் டி' சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.
ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
இதில் 'ஃபோலிக் ஆசிட்' நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.
மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.
ஆஸ்துமா, சளி, இருமல் இருப்பவர்கள் தர்பூசணி ஜூஸை லேசாக சூடு செய்து குடிக்கலாம்''.
Post a Comment